உண்மை காதல் -20

அத்தியாயம் -20


இரவு உணவை முடித்துக்கொண்ட, பிரித்திவ்வும் மித்ராவும், சேர்ந்து இருந்த வேலைகளை முடித்துவிட்டு, சிறிதுநேரம் ஹாலில் உட்கார்ந்து செஸ் விளையாடினர்..


குழந்தையின் புத்திக்கூர்மை நன்றாக இருக்க வேண்டும் என்று,  தினமும் நிறைய மூளையை உபயோகித்து விளையாடும் விளையாட்டுகளை, பிரித்திவ் மித்ராவுடன் விளையாடுவான்.


அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தில் படிக்க வேண்டிய புத்தகங்கள், குழந்தை வளர்ப்பு சார்ந்த  புத்தகங்கள், என்று நிறைய வாங்கி வந்து குவித்து இருந்தான்.. 


பிரித்திவ் இப்பொழுது வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருக்க, மித்ராவிற்கு அப்புத்தகங்கள் தான், இந்த கொஞ்ச நாட்களாக,

துணை.. 


சரியாக அன்று இரவு, பதினோரு மணிக்கு, விஷ்ணுவிடம் இருந்து, எப்பொழுதும் போல் போன் வந்தது. துளசியும் விஷ்ணுவும், மித்ராவை நலம் விசாரித்துவிட்டு, பிரித்திவ்விடமும் ஒருசில வினாடிகள் பேசிவிட்டு, விரைவாக வைத்துவிட..


மித்ராவின் முகம் சோர்வடைந்துவிட்டது.


பிர்த்திவ் தான்,"இன்னும் கொஞ்ச நாள் தான் டா", என்று தேற்றினான்.


மித்ராவிற்கு மிதிலாவுடன் பேசாமல் இருக்கவே முடியவில்லை.. 


மிதிலாவை அவளின் மனம் மிகவும் தேடிக்கொண்டே இருந்தது.


மிதிலாவை இதுவரை பிரித்திவ் பார்த்ததில்லை..  ஆனால் அவளைப் பற்றிய அனைத்தும் ப்ரித்திவ்வுக்கு அத்துப்படி..  அந்தளவிற்கு மிதிலாவை பற்றி மித்ரா பிரித்திவ்விடம் கூறி இருக்கின்றாள்..  


மிதிலா செய்யும் குறும்புகள்..  அவளுக்கு பிடித்த உணவுகள்..  என்று எப்பொழுதும் கூறிக் கொண்டே இருப்பாள்.


இன்றும் மிதிலாவை குறித்து பேச ஆரம்பித்தவள்.. பேசியப்படியே தூங்கிவிட..


அவளுக்கு ஒழுங்காக போர்வையை எடுத்து போர்த்திவிட்ட, பிரித்திவ்விற்கு, மனம் மிகவும் பாரமாக இருந்தது.


தனக்கு தான், யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டோம்.. ஆனால் மித்ராவிற்கு அனைவரும் இருந்தும், இந்த கஷ்டம், என்று.


வந்த புதிதில் மித்ரா பிரித்திவ் முன்பு சந்தோஷமாக இருந்தாலும்..  அவன் எங்காவது வெளியே சென்று விட்டு வரும் பொழுது, அவள் முகம் முழுக்க அழுகையால் சிவந்துவிட்டு இருக்கும்.


அதுவும் விஷ்ணுவிடம் இருந்து முதல் ஃபோன் வரும் வரை..  அந்த பதினைந்து நாட்கள்.. அவளை தேற்ற பிரித்திவ்விற்கு பெரும் பாடாகி போய் இருந்தது.

 

விஷ்ணுவிடம் பேசி அங்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிந்த பின் தான், கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து இருந்தாள் மித்ரா.


இருவரிடையேயான  நெருக்கம்.. ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்தவும், அடைக்கலம் தேடவும், மனதின் சுமைகளை குறைக்கவும் என்று.. அவர்களை அறியாமலேயே வந்து இருந்தது.


கடந்த மாதம், ஒரு நாள் இரவு, விஷ்ணு எப்பொழுதும் போல் கால் செய்து இருந்தார்.. 


அப்பொழுது மித்ராவிற்கு, விஷ்ணுவும் துளசியும், பிறந்தநாள் வாழ்த்து கூற.. 


அப்பொழுது தான் பிரித்திவ்விற்கு, அன்று மித்ராவின் பிறந்தநாள் என்பது தெரியும்.  மித்ராவே மறந்து இருந்தாள்.


அடுத்த நாள் காலையிலேயே பிரித்திவ், கடைக்கு சென்று மித்ராவிற்கு அழகாக ஆலிவ்க்ரீன் நிறத்தில் ஷிஃபான் புடவையும்..  அதற்கு ஏற்ற அணிகலன்களையும் வாங்கியவன்...  கோவிலுக்கு சென்று மித்ராவின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு..  அங்கேயே நிறைய பூவும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.


அன்று மாலை, பிரித்திவின் வீட்டிற்கு மிதுன் ஜார்ஜும், அவன் மனைவியும் வந்து இருந்தனர்.. 


அவர்களும் மித்ராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே..  பிரித்திவ் கீழே சென்று, மித்ராவிற்கு என்று வாங்கி வந்த பொருட்களை, காரில் இருந்து சர்ப்ரைஸாக, எடுத்து வந்து, ரூமில் வைத்துவிட்டு மித்ராவை உள்ளே அழைத்தான்..


மித்ரா வந்ததும் புது டிரஸை மித்ராவிடம் கொடுத்து, "இதை கட்டிட்டு வா மித்ரா..  உனக்காக தான் வாங்கினேன்..  நான் வெளியே ஜார்ஜ் கூட  இருக்கறேன்", என்றுவிட்டு சென்றான்..


பிரித்து பார்த்த மித்ராவிற்கு அவ்வளவு பிடித்திருந்தது அந்த புடவை..  அதிலும் தனக்காக பிரித்திவ் முதன் முதலாக, வாங்கி வந்தது..  இன்னும் ஸ்பெஷலாக அவளுக்கு அப்புடவை தெரிந்தது..


மித்ரா ரெடி ஆகி வெளியே வரும்பொழுது..  ஹாலில் அவளுக்கான பர்த்டே கேக் இருந்தது..  மித்ராவிற்கு மிகுந்த ஆச்சரியம் ஒவ்வொன்றும்..


மூவரும் மித்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாட்டு பாடி, உற்சாகமாக, அவளை சிறுப்பிள்ளை போல் அழைத்து வந்து கேக்கை வெட்ட…


அன்று, முதல் முறை சேலையில் மிளிர்ந்த, மித்ராவின் அழகில், ப்ரித்திவ் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்க ஆரம்பித்தான் அவளுள்..


இரவு, டின்னருக்கு வெளியில் ஆர்டர் செய்து இருந்தான்.. 


வீட்டிற்கு உணவு வந்ததும், நால்வரும் ஜாலியாக, பேசிக்கொண்டே உண்டு முடிக்க.. பிறகு மிதுன் மற்றும் அவன் மனைவி விடைபெற்றுக் கொண்டனர்..


அவர்கள் சென்றதும் மித்ரா பிரித்திவ்விடம், "ரொம்ப தேங்க்ஸ் சார்..  ரொம்ப நாள் அப்புறம் இன்னைக்கு தான்  ஹாப்பியா இருந்தேன்..  புடவை ரொம்ப சூப்பரா இருக்கு..  எனக்கு இங்கிலிஷ் கலர்ஸ் தான் ரொம்ப பிடிக்கும்..”, என்றவள்.. “எனக்கு புடவை எப்படி இருக்குன்னு, நீங்க சொல்லவே இல்லையே", என்று புடவையை சுற்றிக் காண்பித்தாள், மகிழ்ச்சியுடன்..


அப்பொழுது, அவளின் நீண்ட கூந்தலில் சூடி இருந்த, சரம் சரமான மல்லிகையின் மனம், பிரித்திவ்வின் நாசியை தீண்டி மயக்க தொடங்கியது..


மறுவிநாடி கணவனாக, மித்ராவின் கையை பற்றி அருகில் இழுத்து இருந்தான் பிரித்திவ்.. 


இழுத்த வேகத்தில் தன் நெஞ்சில் வந்து மோதி நின்றவளின்..  தாடையைப் பற்றி நிமிர்த்தி அவள் முகம் பார்க்க..


பிரித்திவ்வின் பார்வை மாற்றத்தை, கண்டு கொண்ட மித்ரா, வெட்கத்தில், மெல்ல விலக முற்பட்டாள்.


அதில், பிரித்திவ்வின் கரங்கள், மித்ராவின் வெற்றிடையை அழுந்த பற்றி, விலக விடாமல் தடை செய்தது.. 


அவள் காதில், "இன்னும் நான் உனக்கு, சார்-ஆ தான், தெரியறேனா Mrs.சங்கமித்ரா பிரித்திவ்ராஜ்", என்றான், கரகரப்பான குரலில் மையலுடன்..


பிரித்திவ்வின் கை தன் இடையில் பட்டதுமே..   மித்ராவின் கண்கள் தானாக மூடிக் கொண்டு இருந்தது. 


உதடுகளும், பசைப்போட்டது போல் ஒட்டிக்கொண்டு விட.. எங்கிருந்து அவள் பதில் பேசுவது..


மவுனமே அந்த இடத்தை ஆட்சி செய்தது.


இத்தனை நாட்களும், இருவரும் ஒன்றாக ஒரே அறையில் அருகருகே இருந்தாலும், இதுவே பிரித்திவ்வின் மோகம் கொண்ட முதல் நெருக்கம்.


அதிலும் பிரித்திவ்வின், "மிஸ்ஸஸ்.சங்கமித்ரா பிரித்திவ்ராஜ்", மித்ராவினை தன்னிலை இழக்க செய்தது.. 


பிரித்திவ்வின் உரிமையை அது கூறியது.


மூடிய இமைகளுக்குள் ஆடும் அவளின் கண்ணின் மணிகளும்..  துடிக்கும் உதடுகளும்..   வேகவேகமாக வெளிவரும் மூச்சுக்காற்றும்..  என்று ஒவ்வொன்றும் பிரித்திவ்வை, மித்ராவின் புறம் இழுக்க ஆரம்பித்தது.


ப்ரித்திவ் குனிந்து, மித்ராவின் முகத்தில் மின்னி.. அவளுக்கு அதீத அழகு சேர்க்கும்.. அவளின் மூக்குத்தியில் முதல் அச்சாரமாக முத்தமிட்டான்..


பிரித்திவ்வின் முத்தத்தில், மித்ராவின் மூடிய இமைகள் பட்டென்று திறந்து, விரிந்து கொண்டது அதிர்ச்சியில்..


அவள் முகத்தை, வசீகரமான புன்னகையுடன் பார்த்த பிரித்திவ்..  "உனக்கு ஸ்பெஷல் கிஃப்ட் ஒன்னு இருக்கு.. பர்த்டேக்கு..  வேண்டுமா..", என்றான்..


மித்ரா வெட்கத்துடன் திக்கி திணறி "என்…ன கிஃப்ட்", என்றுக்கேட்க.


"நான்தான் அந்த கிஃப்ட்", என்றவன்..  அதில் அதிர்ந்த மித்ராவை, தன் கரங்களில் ஏந்தியபடியே, படுக்கை அறைக்கு வந்து கட்டிலில் அவளை கிடத்த....


பிரித்திவ்வின் புது செயலிலும், பேச்சிலும் மித்ராவிற்கு பேச்சே வரவில்லை…. அவள் இதயம் படப்படவென்று அடித்துக்கொள்ள..


அடுத்து என்ன என்றுக்கூட சிந்திக்க முடியாது.. கண்களை இறுக்க மூடிக்கொண்டாள் மீண்டும்.


பிரித்திவ், "ஓய் புஜ்ஜிக் குட்டி கண்ணை திறந்து பாரு..  ஒரே ஒரு செகெண்ட்..", என்று அவளை எப்படியோ கண்ணைத்திறக்க வைத்தான்..


மித்ரா வெட்கத்துடன் கண்ணை சிறிது திறந்ததும்..


பிரித்திவ் "கிஃப்ட் வேணுமா வேண்டாமா " என்றான் அவளின் சம்மதத்தை வேண்டி…. 


பிரித்திவ்வின் முகத்தில் தெரிந்த காதலிலும், கண்கள் வழியவிட்ட தாபத்திலும், ஏக்கத்திலும் மயங்கிய மித்ரா.. 


தன்னை மதித்து தன் சம்மதத்திற்கு வேண்டி நிற்பவன், தன்னுடைய ஆணவன் என்று கர்வப்பட..


மறுகணம் அவளின் கரங்கள், பிரித்திவ்வை தன்னுடன் இழுத்து இறுக அணைத்துக்கொண்டது சம்மதமாக..


அதைத்தொடர்ந்து சில வினாடிகளில், இருவருமே மாணவர்களாகி, புதுப்பாடம் படிக்க துவங்க.. முதலில் கற்று தேரிய பிரித்திவ்.. தடுமாறி ஒன்றும் புரியாது நிற்கும் மித்ராவிற்கும், கற்பித்து அவளையும் கரை சேர வைத்து விட்டான்.. 


இன்பம் இன்பம் இன்பம் மட்டுமே அவர்களுக்கு அன்றிலிருந்து..


பிரித்திவ், பிறந்ததில் இருந்து இழந்த அனைத்தையும், மித்ரா அளவுக்கு அதிகமாக வாரி வாரி அவனுக்கு கொடுத்தாள்..


சிறு கருத்து வேறுபாடும் இன்றி..  பூட்டுக்கு ஏற்ற சாவி என்பது போல்.. இருவரும் அவ்வளவு அழகாக பொருந்தி விட்டு இருந்தனர்..

________________________


திருச்சியில் ருத்ரன், அவன் மிகவும் விரும்பி ஆரம்பித்து இருந்த, அவனுடைய இரும்பு தொழிற்சாலையை, வளர்ச்சியடைய செய்ய, என்னென்ன செய்ய வேண்டும் என்று அலசி ஆராய்ந்து, அவன் மனதில் இருந்த அழுத்தம், கோபம் அனைத்தையும்,  வெறித்தனமாக மாற்றி, அதில் போட்டு, அசுரத்தனமாக உழைக்கத் தொடங்கி இருந்தான்..


அத்தனை நெருக்கடியிலும், ஒருதினம் விடாது, அவனுடைய மனம் கடவுளிடம் வேண்டுதல் வைக்கும், எங்கிருந்தாதும் மித்ரா பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. சீக்கிரம் அவள் திரும்பி வர வேண்டும், என்று.


சாஹித்யாவும், தினமும் ருத்ரனுடன் தொழிற்சாலைக்கு வந்து, அவனுக்கு உதவியாக இருந்தாள்.


அதில் இருவரிடையே, நல்ல ஒரு தோழமையான உணர்வு வளர்ந்து இருந்தது..


இந்நிலையில், ஆதிகேசவனுக்கு, அவன் போகும் இடமெல்லாம், காரணமே இன்றி, தொடர் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது.


அடிமேல் அடி…


முதலில் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து வந்து, ஆதிகேசவனின் அனைத்து சொத்துக் குவிப்பு டாக்குமெண்ட்ஸையும், சரியாக கைப்பற்றி ஆராய்ந்தனர். 


அனைத்தையும் அவன் ஒருசில இடங்களில் பதுக்கி வைத்து இருக்க, சரியாக அந்த இடங்களில், தேடுதல் வேட்டை நடந்து இருந்தது..


ஆதிகேசவன் தப்பிக்க அடுத்த முயற்சி எடுப்பதற்குள், அனைத்து தொலைக்காட்சியிலும், ஊடகங்களில், அவன் தப்பிக்க முடியாத வகையில், அவ்விஷயம் பரப்பப்பட்டது.. 


அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மக்கள் அவனுக்கு எதிராக குரல் கொடுக்க..


ஆதிகேசவன் மீது வழக்கு தொடரப்பட்டு..  அவன் பதவி பிடுங்கப்பட்டது..


இதில் அதிர்ந்த ஆதிகேசவன், மீண்டும் ஜோசியரை அனுக..


ஜோசியரோ, "அன்னைக்கே தான் சொன்னேனே கேசவா..", என்று ஆரம்பித்தவன்..


ருத்ரனிற்கு இப்பொழுது நேரம் சரியில்லை, மேலும் திருமணம் முடிந்த முதல் மூன்று மாதங்களுக்குள் அவன் மனைவி கருவுற்று இருக்க வேண்டும்.. 


அப்படி ஆகாத பட்சத்தில், இனி இரண்டு வருடங்களுக்குள் அவன் மனைவி கருவுற்று, குழந்தை பிறந்தால், அந்த குழந்தையின் ஜாதகப்படி, உனக்கு இன்னுமே பாதகங்கள் வந்து சேரும், என்று கூற…


மூடநம்பிக்கையில், ஊறிய ஆதிகேசவன், உடனே மாதவியிடம், அதையிதை சொல்லி அனுப்பி, அவர் மூலம் கெஸ்ட் ஹவுஸில் இருந்த ருத்ரனை, எப்படியோ பேசி மீண்டும் வீட்டிற்கு வரவைத்து விட்டான்.


ருத்ரனும் சரியென்று, ஆதிகேசவனின் தோல்வியை அருகில் இருந்து பார்த்து ரசிக்க.. சாஹித்தியா உடன் வந்து விட்டான்.


ஆம் இன்கம்டேக்ஸ் டிபார்ட்மென்டில் மாட்டி விட்டது.. மீடியாவில் செய்திகளை பரப்பியதும் அவனே.. குறி பார்த்து ஆதிகேசவனை விழ்த்த தொடங்கி இருந்தான் ருத்ரன்..


ஆதிகேசவனின் உயிர்மூச்சு அவனின் எம்எல்ஏ பதவியும்.. அவனை பார்க்கும் பொழுதெல்லாம் மக்களின் கண்களில் தெரியும் பயமும்.. 


அவை இரண்டையும் அறுத்து எறிந்துவிட்டான் ருத்ரன்..


ஆனால் ஆதிகேசவன் யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் விஷத்தை வைப்பான் என்று ருத்ரன் அறியாமல் போனான். அது சாஹித்யாவிற்கும் தினமும் கொடுக்கப்பட்டு கொண்டு இருந்ததை அறியாமல் போனான்…


ஆதிகேசவனும் விதியை யாராலும் மாற்ற முடியாது என்பதை அறியாது போனான். 


நடக்கும் அனைத்திற்கும், மித்ரா தான் காரணம் என்று, விஷ்ணு குடும்பத்தின் மீது, தன் மொத்த கோபத்தையும் வளர்த்துக்கொண்டே இருந்தான்.

_______________________


நாட்கள் யாருக்கும் காத்திராமல் ஓட…


மித்ரா பிரித்திவ்வுடன், திருச்சியை விட்டு வந்து, ஒருவருடம் ஆக போகிறது..


பிரவசத்திற்கும் நாள் நெருங்கிவிட்டு இருந்தது.


முன்பு போல் அவளால் பெரிதாக எதுவும் வேலை செய்ய முடிவது இல்லை.‌.


பிரித்திவ் தான் அவளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டும், வீட்டு வேலை, வெளி வேலை, கல்லூரி வேலை என்று அனைத்தையும் பார்த்துக்கொண்டான்..


ஓய்வில் இருந்த மித்ராவோ, தினமும் தன் தாய் தந்தையை பார்க்க வேண்டும் போல் உள்ளது என்று புலம்பத் தொடங்கினாள்..  


சரி வீட்டிலேயே இருப்பதால் தான் அவளுக்கு அவ்வாறு இருக்கின்றது என்று, ஒரு இரவு, புதிதாக வெளியாகியிருந்த, பாகுபலி படத்திற்கு, மிதுனின் குடும்பத்துடன் அழைத்து சென்று இருந்தான்.


அவர்கள் இருவரும் திருமணம் ஆன பிறகு முதலில் தியேட்டரில் பார்க்கும் படம் அது.


நீண்ட தினங்களுக்கு பிறகு, வெளி உலகைக்கண்ட மித்ராவிற்கு அது கொஞ்சம் மாற்றம் தந்து இருந்தது.


அன்றுதான் மித்ரா, தங்களுக்கு மகள் பிறந்தால், மகிழ்மதி என்று தான் பெயர் வைக்க வேண்டும், என்று தன் ஆசையாக பிரித்திவ்விடம் கூறி இருந்தாள்.


அதன்பிறகு இரவு நேரங்களில், அல்லது ஆள் நடமாட்டங்கள் குறைந்த பகுதிகளில் மித்ராவை பிரித்திவ் வெளியே அழைத்து சென்று வந்துக்கொண்டு இருந்தான்.


நான்கு தினங்கள் அதில் அமைதியாக இருந்தவள் மீண்டும் பழைய பல்லவியையே ஆரம்பித்து விட்டாள்.


அதுவும் ஒரு நாள், எனக்கு பிரசவ நேரத்தில் ஏதாவது ஆகிவிட்டால் என் குடும்பத்தை காணாமலேயே போய் விடுவேனோ ராஜ் என்று எல்லாம் நினைத்து வேதனையாக புலம்ப..


பிரித்திவ்வை மித்ராவின் ஏக்கம் கொல்லாமல் கொல்லத் தொடங்கியது.


மருத்துவர் இது நார்மல் தான், பிரக்னன்சி நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் நிறைய வரும்..  நிறைய எதிர்மறையான எண்ணம்..  டிப்ரஷன் எல்லாம் வரும்..  முடிந்த அளவு அவர்களை மிக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்..  இல்லை என்றால் அது குழந்தை வளர்ச்சியையும்..  தாயின் மனநிலையையும் பாதிக்கும்..  இரத்த அழுத்தம் வேறு கொஞ்சம் அவர்களுக்கு கூடுதலாக உள்ளது நல்லதிற்கு இல்லை என்று கூறிவிட..


பிரித்திவ், நாட்கள்தான் ஆகிவிட்டது என்று விஷ்ணுவை வரச்சொல்லி எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டான்..  அவர்கள் தோ இதோ என வந்தபாடில்லை.. வருகிறோம் வருகிறோம் என்று வரவே இல்லை.


மித்ராவிற்கோ நாளுக்கு நாள், பிரசவக்கால பிரஸர் அதிகரித்துக்கொண்டே இருந்தது.


அதில், வேறு வழியில்லாமல் டாக்டரிடம் கேட்டுக்கொண்டு பிரித்திவ், மித்ராவை மும்பையில் இருந்து காரில் அழைத்துக்கொண்டு, திருச்சியை நோக்கி தன் பயணத்தை தொடங்கினான்.


ஆங்காங்கே இரண்டு நாட்கள் தங்கி தங்கி தான் சென்றனர்..


மித்ராவிற்கோ கால்கள் தரையில் பாவவில்லை..


பெற்றோரை பார்க்க போகிறோம்… 


மிதிலாவை பார்க்க போகிறோம் என..


அவள் எதிர்பார்த்த தருணமும் வந்து சேர்ந்தது..


அன்று இரவு எப்பொழுதும் போல், விஷ்ணு இரவு 11 மணிக்கு, பிரித்திவ்விற்கு கால் செய்ய.. 


அழைப்பை ஏற்ற பிரித்திவ், தாங்கள் திருச்சியை நெருங்கி விட்டதாக தகவல் கூற..


இத்தகவலை கேட்ட விஷ்ணுவிற்கும் துளசிக்கும் மனம் பதைபதைக்க தொடங்கியது..


விஷ்ணு, ‘இல்லை வர வேண்டாம்’ என்று சொல்ல வாயெடுக்க..


பிரித்திவ், மித்ராவிற்கு பிரஷர் அதிகரித்துக்கொண்டு இருப்பதையும், மருத்துவர் இப்படியே போனால், பிரசவத்திலும்.. குழந்தைக்கும் பிரச்சினை வரும், என்று கூறியதாக கூற..


விஷ்ணுவின் வாய் சொல்ல வந்ததை சொல்லாது மிழுங்கிவிட்டது..


அன்று இரவு மணி 1.30..


தோட்டத்தில் இருட்டில், விஷ்ணுவும், துளசியும் பயத்தில் அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டும்.. மாசமாக இருக்கும் தங்கள் மகளை காணப்போகும் மகிழ்ச்சியிலும் என்று இருவேறு மனநிலையுடன் காத்து இருந்தனர்.


மிதிலா இதை எதையும் அறியாமல் உறக்கத்தில் இருந்தாள்.


நள்ளிரவு 2:00 மணிக்கு, பிரித்திவ்வின் கார் விஷ்ணு வீட்டின் பின் வாசல் புறம் வந்து நின்றது.


காரின் லைட்டை முழுக்க அவன் நிறுத்திவிட்டு.. விஷ்ணுவிற்கு ஃபோன் செய்ய…


உடனே விஷ்ணு மட்டும் விரைந்து வந்து, தோட்ட கதவை திறந்து, வெளிப்பக்கம் ரோட்டிற்கு வந்தார். 


துளசி கதவின் பக்கம் தோட்டத்தில் உள்ளேயே நின்று இருந்தார்.


கார் பொறுமையாக வந்து நின்ற சப்தம் தவிர.. அந்த தெரு நிசப்தமாக இருந்தது.


எந்த லைட்டையும் யாரும் ஆன் செய்யவில்லை. காரிலும் சரி, வீட்டிலும் சரி. 


தெரு விளக்கின் மற்றும்.. நிலவின் வெளிச்சமே இருந்தது..


பிரித்திவ், சட்டென்று இறங்கி காரின் கதவை திறந்து, மித்ராவை ஜாக்கிரதையாக பிடித்து இறக்கினான்.


விஷ்ணுவும் ஓடி வந்து அவளை பிடிக்க…


யாரும் எதுவும் பேசாது..


மித்ராவை இரண்டெட்டில் கதவு வழியாக அழைத்துச்சென்று துளசியிடம் ஒப்படைத்துவிட்டு..  


விரைந்து வெளிவந்து காரை அப்புறப்படுத்தினர்.


பிரித்திவ்வும், விஷ்ணுவும் சென்று, தெருவின் ஆரம்பத்தில் இருந்த பிள்ளையார் கோவிலின் முன்பு, காரை நிறுத்தி பூட்டிவிட்டு நடந்து வந்தனர்.


மித்ராவை, முதன் முறையாக, திருமணம் ஆகியப்பின், மாப்பிள்ளையுடன், அதுவும் 9 மாத கருவை சுமந்து இருக்கும் வேளையில், பின்வாசல் வழியே அழைத்துச்செல்வது துளசியின் மனதில் பெரும் வேதனையை அளித்தது.


விஷ்ணுவுக்கும் அதே எண்ணம் இருந்தது.. இருந்தும் அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.


தோட்டக் கதவை மெல்ல அடைத்துவிட்டு…


இருட்டிலேயே, நால்வரும் ஜாக்கிரதையாக வீட்டினுள் வந்து, அந்த கதவையும் அடைத்து விட்டு, ஹாலில் இருந்த லைட்டை ஆன் செய்தனர்..


பிரித்திவ் விஷ்ணுவிடம் கொடுத்து இருந்த ஃபோன் மிகமிக பழைய பேசிக் மாடல் வகையை சார்ந்தது..  யாரும் ட்ராக் செய்யக்கூடாது என்று அவ்வாறு வாங்கி இருந்தான். எனவே யாருமே இத்தனை நாட்களாக பார்த்துக் கொள்ளவில்லை.


மித்ராவின் தோற்றமும், பிரித்திவ்வின் தோற்றமும் அவர்கள் இருவரும் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கின்றனர்..  என்பதை விஷ்ணு துளசிக்கு கூறியது.


தன் செல்ல மகள் இன்று ஒரு மகவை சுமந்து, தேர் போல் அசைந்து பூரிப்புடன் வந்த காட்சியை காணும், பெற்றோர்களின் மனதின் மகிழ்வை எடுத்துச்சொல்ல வார்த்தைகள் இல்லை.


ஆனால் அந்த மகிழ்ச்சியோ, மித்ராவின் முகத்திலும், பிரித்திவ்வின் முகத்திலும் இருந்து துணி கொண்டு துடைத்தது போன்று மறைந்தது.


மித்ராவின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது.. 


விஷ்ணுவின் தோற்றமும், துளசியின் தோற்றமும் இருந்த நிலையால்.. 


இருவருமே சுத்தமாக மெலிந்து, தோல்கள் சுருங்கி, கறுத்து என்று மிகப்பெரிய புயலில் சிக்கி மீண்டவர் போன்ற தோற்றத்தில் இருந்தனர். 


தங்களை கண்டதால், இருவர் கண்களிலும் தோன்றியிருந்த மகிழ்ச்சி தவிர..  வீட்டில் வேறு எங்கும் அந்த மகிழ்ச்சியின் தடம் இல்லை 


மகளின் மனதை அறிந்தவர்கள், "ஒன்னும் இல்லைடா..  உன்னை பாக்காம இருந்தது தாண்டா எங்களுக்கு வருத்தம்..  வேற எதுவும் இல்லை..  பாரு அடுத்தவாட்டி நீ எங்களை பார்க்கும்போது திரும்ப ஜம்முனு ஆகிடுவோம்..  தங்கம் இல்ல..  மனசை போட்டு வருத்த கூடாது டா..  குழந்தையை அது பாதிக்கும்.. எங்க செல்லம் இல்ல சொன்னா கேளுடா மா", என்று அவளை சமாதானப் படுத்தினர்.


மித்ராவால் தொடர்ந்து அழக்கூட முடியவில்லை, தன் பெரிய வயிற்றை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, மனம் வெதும்ப தன் வீட்டை சுற்றிப் பார்த்தாள்..


முன்பு இருந்த பொருட்களில் முக்கால்வாசி இப்போது இல்லை..  இருப்பதும் சேதம் அடைந்த வண்ணம் காணப்பட்டது..


தொண்டையைத் தாண்டி அவளுக்கு பேச்சே வரவில்லை, உதட்டைப் பிதுக்கியவள், கண்களில் நீருடன், என்னிடம் மறைத்து விட்டீர்களே..  என்ற இயலாமையில், இல்லை என்பது போல் தலையசைத்தாள்..


பிரித்திவின் கடலளவு நேசம் கொண்ட மனம் தாங்குமா..  தன்னவளின் பேச்சற்ற நிலையைக் காணும் பொழுது.


மித்ராவை தோளுடன் அணைத்து "ரிலாக்ஸ்டா..  ரிலாக்ஸ்டா புஜ்ஜி.. ப்ளீஸ்.. டோன்ட் ஸ்ரெய்ன்", என அவளின் நெஞ்சை நீவி  அமைதிப்படுத்தினான்.


அவனுக்குமே விஷ்ணு துளசியின் தோற்றம் அதிர்ச்சி அளித்து இருந்தது... 


அதைவிட அவன் மனதில், தாங்கள் வந்தது தவறோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.. ஒவ்வொரு மாற்றத்தினாலும் பிரித்திவ்வின் மனம் அடித்துக் கொள்ளத் தொடங்கியது. 


மித்ராவிற்கு ஏதேனும் ஆகிவிடுமோ என பயந்து தான் அவன் அழைத்து வந்து இருந்தான்..


மித்ராவும், அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் தானே அவனின் ஜீவன்.. 


அதிலும் நாளை அவர்களின் முதல் திருமண நாள்..


அதை வேறுக்கூறி பெற்றவர்களை ஒருமுறையாவது காண வேண்டும் என்று மித்ரா மிகவும் வேதனையுடன் பிரித்திவ்விடம் கெஞ்ச..


வேறு வழியின்றியே பிரித்திவ் மித்ராவை அழைத்து வந்து இருந்தான்.


மித்ராவிற்கோ தன் உடலில் கருவுற்ற தினம் தொட்டு ஏற்படும் மாற்றங்களிலும்.. பிரித்திவ் இல்லாத நேரங்களில், நெட்டில் பார்த்த பல பிரசவ வீடியோக்களினாலும் தோன்றிய பயத்தின் பலனாக.. பெற்றோரை ஒருமுறை பார்த்தே ஆக வேண்டும் என்று ஆகி போனது.. பாவம் அவளும் இருபத்தியொரு வயதுடைய சிறு பெண் தானே..


விஷ்ணு மகளை சமாதானப்படுத்தி அழைத்து சென்று ஊஞ்சலில் உட்கார வைத்தார்..


அதற்குள் மித்ராவின் கால்கள் இரண்டும் பெரிதாக வீங்கி விட்டு இருந்தது. நீண்ட தூர பயணத்தினால். 


சாதாரணமாகவே 9 மாதத்தில் கால்கள் வீக்கமாக தொடங்கும்‌ தானே. 


அவளால் சரியாக நடக்கவே முடியவில்லை. 


சட்டென துளசி அடுப்படிக்கு, ஓடிச்சென்று சுடுநீர் ஒரு அடுப்பில் போட்டுவிட்டு..  இருவருக்கும் ஏற்கனவே காய்த்து வைத்திருந்த பாலையும், உடன் வாழைப் பழத்தையும் விரைந்து எடுத்து வந்தார்.


சாஸ்திரத்திற்கு இருவருக்கும் பாலும், பழமும் முதல்முறை தம்பதிகளாக வருவதால், கொடுத்து விட்டு..


மீண்டும் சுடு நீரை பதம் பார்த்து, எடுத்து வர, உள்ளே சென்றார்.


விஷ்ணுவும், பிரித்திவ்வும் மித்ராவை பொறுமையாக,  அறைக்குள் அழைத்துச்சென்று..  உட்கார வைத்து இருவருமே, ஆளுக்கு ஒரு காலாய், எண்ணெய் எடுத்து பொறுமையாக தேய்த்து, இரத்த ஓட்டம் சீராக, நீவி பிடித்துவிட ஆரம்பித்தனர்.


மித்ராவிற்கோ எதுவும் உரைக்கவில்லை, நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. 


தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இந்த ஒரு வருடமும் இருந்து இருக்கின்றோம்..  ஆனால் இங்கே இவர்களின் நிலைமை..  தனக்காக தன் அம்மா அப்பா பட்ட வேதனையை கண்கூடாக கண்டதும்.. அவளால் பேசவே முடியவில்லை.


தொண்டையை எதுவோ பெரிதாக அடைப்பது போன்று இருந்தது. அமைதியாக கண்ணை மூடிக்கொண்டாள்.


உடல் வேறு முடியவில்லை....


பிரித்திவ் தான் விஷ்ணுவிடம் நடந்தது என்ன என விசாரித்தான். அவர் சிறிது கதையை மட்டும் கூறினார்.. வீட்டிற்கு வந்து விசாரித்தார்கள்..  கொஞ்சம் கோபமாக பேசினார்கள்.. அப்பொழுது தான் பொருட்களை உடைத்து விட்டனர்.. என்று மட்டுமே சொன்னார். 


தங்களை அடித்தது, மிதிலாவை இழுத்து சென்றது..  நீட் தேர்வுக்கு செல்ல விடாமல் செய்தது.. என்றவற்றை முற்றிலும்  மறைத்துவிட்டார்.


அதற்குள் துளசி வெந்நீருடன் வந்துவிட்டார். பிறகு அந்நீரில் துண்டினை போட்டு பிழிந்து எடுத்து.. மித்ராவின் கால்களுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தனர்.


விஷ்ணுவும் துளசியும், வந்ததும் மித்ராவை பார்த்துவிட்டு உடனேயே திருப்பி அனுப்பிவிடலாம் என முடிவெடுத்து இருந்தனர். 


இப்பொழுதோ மித்ராவின் உடல்நிலை அவர்களை பேசவிடாமல் தடுத்தது.


விதி அதன் ஆட்டத்தை நிகழ்த்த, அனைத்து சந்தர்ப்பத்தையும் தனக்கு சாதகமாக ஏற்படுத்தியது..


அப்பொழுது, திடீரென ஒரு கேவல் சத்தம் அந்த அமைதியான வீட்டில் எதிரொலித்தது.. சட்டென அனைவரும் பதட்டத்துடன் அறை வாயிலை நோக்கி திரும்பினர்..


மிதிலாதான் அதிர்ச்சியில் அழுகையுடம் நின்று இருந்தாள். சட்டென்று விஷ்ணு பாய்ந்து சென்று மிதிலாவின் வாயை மூடி உள்ளே அழைத்து வந்தார். "அழாத டா அழாத"  என்றப்படி..


மிதிலாவின் சத்தத்தில், கண்ணை திறந்து பார்த்த மித்ராவிற்கு அடுத்த அதிர்ச்சி தங்கையின் தோற்றம்.


அனைவரையும் விட மிதிலா தான் மிக மோசமாக இருந்தாள் பார்க்க.


குழந்தை முகத்துடன் புசுபுசுவென.. எப்பொழுதும் கன்னத்தில் குழி விழ சிரித்துக்கொண்டே.. குறும்புடனும், மகிழ்ச்சியாகவும் சுற்றி திரியும் மிதிலா எங்கே என்று தெரியாத அளவுக்கு முற்றிலும் மாறி வேறொரு மிதிலாவாக மாறி இருந்தாள்.


உடல் முழுதும் வற்றி..  ஆங்காங்கே எலும்புகள் தூக்கிக்கொண்டு..  


குழந்தை முகம் முற்றிலும் மறைந்து அளவுக்கு மீறிய முக முதிர்ச்சியுடன்.. பொலிவில்லாமல்.. வெளுத்துப் போய் இருந்தாள்.


விஷ்ணுவின் கையை தன் வாயில் இருந்து விலக்கிய மிதிலா, "அப்பா மித்துவா இது.. அம்மா மித்துவா இது..  இப்ப நடக்கிறது உண்மையா..  நான் மித்துவையா  பார்க்கிறேன். இது மித்து தானா..  இது கனவா இல்லை நிஜமா", என்று மாறி மாறி கேட்டு அதிர்ச்சியுடன் அவள் கேட்க...


சின்னவளின் நிலை கொள்ளாத மனநிலை..  அனைவர் இதயத்தையும் பிழிந்தது ..


மித்ராவை நெருங்கியவள், அவளின் உடல் முழுக்க தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டே..   இடையிடையே தன்னையும் கிள்ளிக் கிள்ளி பார்த்தாள்..


மிதிலாவின் செயலில் மனம் உடைந்த மித்ரா..  "நான் தாண்டி மிது" என்றவள், எழுந்து தன் தங்கையை வாரி அணைத்துக் கொண்டு மௌன கண்ணீர் வடித்தாள்.


அனைத்து மூத்த குழந்தைகளுக்குமே, அவர்களுக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களுமே ஒரு தாய் தந்தை தானே.


ஒரு இரவுக்கூட விவரம் தெரிந்தப்பின் அவர்கள் இருவரும் பிரிந்து இருந்தது இல்லை..


அப்படி வளர்ந்தவர்கள், கடந்த ஒரு வருடமாக பார்த்துக்கொள்ளவே இல்லை. 


அதிலும் மிதிலா தன் அக்கா எங்கே இருக்கின்றாளோ?? உயிருடன் தான் இருக்கின்றாளா??  என்று தினமும் பலவாறாக நினைத்து மனதினுள் மருகிக்கொண்டு இருந்தாள்.


தன்னாள் தான் தன் குடும்பத்திற்கு கேடு என்ற எண்ணம் அனுதினமும் போட்டு அவளை படுத்தியது.


அதிலும் ஆதிகேசவன், அவளை இழுத்து சென்ற அன்று, அவள் விநாடிக்கு விநாடி பயந்து போராடியது ஏராளம்..  


அவளின் மருத்துவ கனவு ஒருப்புறம் பறிபோக.. 


மறுப்புறம், வெறும் பொறுக்கி பசங்கள் மட்டும் படிக்கும் கல்லூரியில் அவளை சேர்த்துவிட்டு விட.. தினம் தினம் அவளுக்கு நரகம் தான்.. அவளுக்கு பைத்தியம் பிடிக்காது இருப்பதே பெரிய விஷயம்..


விஷ்ணுவும் துளசியும், நடந்த அனைத்தையும் மிதிலாவிடம்,  சுருங்க அவளுக்கு புரியும் வகையில் கூறி… யாரிடமும் சொல்லிவிடக்கூடாது.. அது அனைவருக்கும் ஆபத்து என்று நூறுமுறை அவளிடம் கூறினர்.


தன்னிடம் அனைவரும் இத்தனை விஷயங்களை  மறைத்தது.. அவளுக்கு  மிகவும் கவலையாக இருந்தது.


பிறகு, மித்ரா திரும்பி வந்ததே போதும். தன்னை கஷ்ட படுத்துவதற்காக நிச்சயம் யாரும் எதுவும் செய்திருக்க மாட்டார்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.


பிரித்திவ் ஹாலிற்கு எழுந்து சென்று.. தாங்கள் எடுத்து வந்த பையில் இருந்த ஒரு பெரிய கவரை அறைக்கு எடுத்து வந்து..  மிதிலாவிடம் கொடுக்க…


மிதிலா தயக்கத்துடன் தாய்-தந்தை முகத்தை பார்த்தாள்.


விஷ்ணுவும் துளசியும், "வாங்கிக்கோ மிது உன்னோட மாமா தானே..", என.. 


மித்ரா, "நானும் ராஜூம் உனக்கு ஒன்னு தான் மிது குட்டி.. உன்னை பத்தி அவருக்கு எல்லாமே தெரியும்..  இந்த வீட்டிலேயே உன்னை தான் அவரு ரொம்ப பார்க்கணும்னு நினைச்சாரு", என்று அவளை சமநிலைக்கு கொண்டுவர பேச...


பிரித்திவ்வை பார்த்த மிதிலா சிறு புன்னகையுடன், "தேங்க்ஸ் மாமா", என்றப்படி வாங்கிக்கொள்ள..


மித்ரா, "உள்ள என்ன இருக்குன்னு பாரு மிது", என…


உள்ளே பிங்க் நிறத்தில் ஒரு டெடிபியர் பொம்மையையும்..  பெரியப்பெரிய  சாக்லேட்களும் நிறைய இருந்தது..


மிதிலா, "அச்சோ ஏன்க்கா இவ்ளோ சாக்லேட்ஸ்..",என..


பிரித்திவ், "எல்லாம் உனக்கு தான், உன் அக்கா தான் உனக்கு பிடிக்கும்னு நிறைய வாங்கிட்டு வர சொன்னா.." என.. 


மிதிலாவிற்கு கண்கள் கவங்குவது போல் ஆனது.. கடந்த ஒரு வருடமாக அவர்கள் ஒரு இனிப்பு பண்டம் கூட வீட்டில் செய்யவில்லை.. அவர்களின் வயிறும் அதை கேட்கவில்லை..


இருக்கும் இடம் தெரியாது வாழ்ந்தனர்.


பிரித்திவ் அவள் கையில் வைத்திருந்த,  டைரி மில்க் சில்க்கை வாங்கி, பிரித்து, அவளிடம் கொடுத்து, " நீ எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு..  எனக்கு புரியுது..  பட் எல்லாம் முடிஞ்சுடுச்சு.. இனி அழக்கூடாது சரியா..  எல்லாமே ஏதோ ஒரு காரியத்துக்கு தான் நடக்கும்.. சூழ்நிலைகள் மாறிக்கிட்டே இருக்கும்..  ஆனா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை நாம சமாளிக்கணும்..  மனசை எப்பவுமே திடமா வச்சுகணும்.. சரியா.. இனி நீ சின்ன பொண்ணு இல்லை.. ", என்றவன்..


"நாங்க சீக்கிரமே ஊருக்கு கிளம்பிடுவோம்.. சோ  இருக்கிற டைம் எங்க கூட என்ஜாய் பண்ணு..", என…


தலையாட்டிய மிதிலா, தன் 

கண்ணை தொடைத்துக்கொண்டு..  


சாக்லேட்டை உடைத்து, பிரித்திவ், துளசி, விஷ்ணு, என அனைவருக்கும் கொடுத்துவிட்டு,  இறுதியில் மித்ராவிற்கு கொடுக்க…


'இதை எவ்வாறு கவனிக்காமல் போனோம்..',  என மிதிலாவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது… 


மிதிலா, "மித்து உனக்கு பாப்பா பொறக்க போகுதா..  என்னால நம்பவே முடியலை", என மித்ராவின் வயிற்றை ஆராய்ச்சியாய் தடவிப் பார்க்க.. 


மித்ராவிற்கு தங்கையின் செயல் சிறிது வெட்கத்தை கொடுத்தது.. அதையெல்லாம் எங்கே மிதிலா கவனித்தாள்..


மித்ராவை அவள் விடவே இல்லை..  எப்ப குழந்தை பிறக்கும்.. உனக்கு உள்ள எப்படி இருக்கு பேபி இருக்கறது.. அது இது..  என்று ஏகப்பட்ட கேள்வி கணைகளை தொடுத்து மித்ராவை ஒரு வழி செய்தாள்.


நேரம் போனதே தெரியவில்லை..


பொழுது மளமளவென விடிந்துவிட்டது.. 


அனைவரின் வீட்டிலும் வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்கும் சத்தமும்.. பால்வண்டி போகும் ஹாரன் சத்தம் என கேட்க ஆரம்பித்தது.


விஷ்ணு ப்ரித்திவ்விடம், "நீங்க இப்ப இங்க இருக்குறது நல்லது இல்ல தம்பி..  ஆனால் விடிஞ்சும் வேற போச்சு.. நீங்க இப்ப கிளம்ப முடியாது", என்றார் வருத்தத்துடன்.


பிரித்திவ், "நீங்க என்கிட்ட இங்க நடந்ததை, சொல்லி இருக்கலாம் மாமா", என்றான் வேதனையுடன்.


இனி என்ன பேசி என்ன பயன்..


பிறகு வேறுவழியில்லாமல் எப்படியாவது இரவு வரை பத்திரமாக இருந்து விட்டு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.


விஷ்ணு, "துளசி நீ போய் வாசல் தெளித்து கோலம் போடுமா..  யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி..  எல்லாருமே இயல்பா இருக்கிற மாதிரி நடக்கணும்..", என்று அனுப்பினார்.


பிரித்திவ் மற்றும் மித்ராவை அறையிலேயே இருக்குமாறு சொல்லிவிட்டு, விஷ்ணு பால் வாங்க சென்றார்.


மிதிலா, அவர்களுடன் பேசியப்படி இருக்க.. 


மித்ரா அசதியில் அப்படியே உறங்க தொடங்கினாள்.


மித்ரா நன்றாக உறங்குவதை உறுதிப் படுத்திக்கொண்டு..  


பிரித்திவ், மிதிலாவிடம் சகஜமாக பேசிக்கொண்டே, இங்கு என்னென்ன நடந்தது என்பதை விசாரிக்க தொடங்கினான்.


மிதிலாவும் வரிசையாக..  அவர்கள் காணாமல் போன தினத்தில் இருந்து..  தன்னை ஆதிகேசவன் இழுத்துச் சென்றது.. ருத்ரன் அழைத்து வந்து விட்டது..  நீட் தேர்வு அன்று மிரட்டியது.. அவளுடைய கல்லூரி பற்றி.. என அனைத்தையும், இதை மறைக்கவேண்டும் என்றெல்லாம் தோன்றாது சொல்லி விட்டாள்.


இவை அனைத்தையும் கேட்ட பிரித்திவிற்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி…


ஆதிகேசவனை பற்றி தாங்கள் கணித்தது தவறோ.. அவன் மிகப்பெரிய கொடூரமானவன் போலவே… தான் மித்ராவை அழைத்துவந்து தவறு செய்து விட்டோமோ.. என்று வருந்த தொடங்கிவிட்டான். 


ருத்ரனின் நல்ல குணம் வேறு பிரித்திவ்வின் மனதை உறுத்தியது .


அதை விட விஷ்ணு தன்னிடமாவது சொல்லி இருக்கலாம் என மீண்டும்  வருத்தம் கொண்டான்.


பிறகு விஷ்ணு தங்களுக்காக தான் சொல்லி இருக்க மாட்டார் என்பதை உணர்ந்து..  மிதிலாவை மித்ராவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.


சிறிது நேரத்தில் அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்து துளசி கொடுத்தார். 


மித்ராவும் எழுந்துவிட்டாள்.


காலை உணவிற்கே துளசி விருந்து சாப்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.


மிதிலாவிற்கோ, நீண்ட தினங்களுக்கு பிறகு, மனம் முழுக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே..  


மித்ராவை திரும்ப கண்டது..  பிரித்திவின் புது வரவு..  குட்டி குழந்தை வேற வரப்போகின்றது என்ற புது சந்தோஷம் அவளுக்கு.. அனைத்து துயரங்களையும் மறந்துவிட்டு.. சிறகில்லாமல் வானில் பறந்தாள்..


மிதிலாவை துளசி குளிக்க அனுப்பிவிட..


பிரித்திவ், அவனே மித்ராவிற்கு தேவையான உடையை எடுத்து சென்று பாத்ரூமில் வைத்து விட்டு.. குளிக்கவும் உதவி செய்து அழைத்து வந்தான்.


இதை கண்ட துளசியின் மனம் குளிர்ந்து விட்டது.


வேறென்ன வேண்டும் பெற்ற தாய்க்கு..  ஒரு அன்னை தன் குழந்தையை ஆணோபெண்ணோ  எதுவாக இருந்தாலும்..  மற்றவரிடம் ஒப்படைக்கும் பொழுது, அந்த தாய்க்கு எப்பொழுதும் மனம் பயமாகவே இருக்கும்..  ஆனால் அவர்கள் தன்னை போலவே பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் அவ்வளவு நிம்மதியாக இருக்கும்.


அந்த நம்பிக்கையை பிரித்திவ், துளசிக்கு கொடுத்து விட்டு இருந்தான்.


கணவரிடமும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். 


தாங்கள் செய்த புண்ணியமே பிரித்திவ்வை கடவுள் தங்கள் கண்ணில் காட்டி உள்ளார் என நினைத்தனர்.


ஆனால் இவர்களின் கண்ணில் பட்ட அவனுக்கு.. கடவுள் பெரும் சோதனையை அல்லவா தர போகிறார்.


மிதிலா குளித்துவிட்டு, நீண்ட நெடிய பல மாதங்களுக்கு பிறகு, மகிழ்ச்சியுடன் ஹரி வாங்கிக் கொடுத்திருந்த, மஞ்சள் கவுனை எடுத்து அணிந்துக்கொண்டு..


ஓடிச்சென்று ஹரி கொடுத்த, கிரீட்டிங் கார்டை எடுத்து பார்த்து, முத்தமிட்டாள். 


அதற்குள் துளசி அவளை அழைக்கும் அரவம் கேட்டதும்.. சட்டென்று தன் பையில் வைத்து விட்டு வெளியே வந்து விட்டாள்.


அனைவரும் ஒன்றாக கடவுளை வணங்கிவிட்டு வர, கூடத்தில் துளசி இலை போட்டு உணவினை பரிமாற தொடங்கினார்.


மித்ராவிற்கு இரு பக்கமும் மிதிலாவும் பிரித்திவ்வும் உட்கார்ந்து இருந்தனர். 


மித்ரா இருவருக்குமே தன் கையாலேயே உணவை ஊட்டிவிட்டு கொண்டே.. துளசியின் கைவண்ணத்தை ஒரு பிடி பிடித்தாள்... மகிழ்ச்சியுடன்.. 


மித்ராவின் சந்தோஷம் பிரித்திவ்வையும் சிறிது இயல்புநிலைக்கு கொண்டுவந்தது.


உணவு உண்ட பிறகு, ஹாலில் இருக்க வேண்டாம் என முடிவு செய்து, மீண்டும் மித்ராவும் ப்ரித்திவும் அறைக்குள் சென்று விட்டனர். 


முடிந்த அளவு அனைத்து கதவுகளையுமே துளசி அடைத்து வைத்து இருந்தார். 


ஆழ்மனதில் அனைவருக்கும் ஒரு பய பந்து உருண்டு கொண்டே தான் இருந்தது.


இருந்தும் மூவரும், மித்ரா உடனான பொன்னான நேரத்தை ஒரு நொடி கூட வீணாக்காமல் அவளுடனேயே இருந்து..  நினைவுகளாக சேர்த்தனர்.


மிதிலா, "மித்துக்கா உனக்கு என்ன பாப்பா பிறக்கும்..  கேர்ள் பேபியா? இல்ல பாய் பேபியா?  எனக்கு பாய் பேபி தான் வேண்டும்", என்றாள் கண்கள் மின்ன.


மித்ரா புன்னகையுடன் பிரித்திவ்வை பார்த்தாள்.


பிரித்திவ், "ஏன்மா மிதிலா உனக்கு கேர்ள் பேபி பிடிக்காதா", என்றான் சோகமாக...


மிதிலா, "அப்படி இல்ல மாமா.. நாங்க ரெண்டு பேருமே பொண்ணுதானே.. திருப்பியும் பொண்ணுனா போரடிக்கும் இல்ல.. அதான் ஒரு சேஞ்சுக்கு பாய் பேபி வேண்டும்", என...


பிரித்திவ், உம்மென முகத்தை வைத்துக்கொண்டு மித்ராவை பார்க்க..


மித்ரா, "மிதுக்குட்டி..  உங்க மாமாவுக்கு பொண்ணுதான் வேணுமாம்..  எத்தனை குழந்தை பிறந்தாலும் அவருக்கு அது பொண்ணா தான் இருக்கணுமா டா.. பாவம் அவரை விட்டு விடலாம் அவருக்கு பொண்ணே பிறக்கட்டும்..  ஆனால் உனக்கு கண்டிப்பா நிறைய பையன் பேபி பிறக்கும்.. நாம அவன்கூட ஹாப்பியா இருக்கலாம்.. சரியா....", என்றாள்.


மிதிலா, என்ன என்னோட பேபியா, என மனதில் யோசித்துவிட்டு, "ஓகேக்கா  எனக்கு பொண்ணு பொறந்தாலும் அத மாமாவுக்கே கொடுத்துடறேன்..  அதே மாதிரி உனக்கு பாய் பேபி பிறந்தால் என்கிட்ட கொடுத்துடு மித்து", என...


மிதிலாவுடனான குழந்தை தனத்துடன் கூடிய உரையாடலில், பிரித்திவ்வும், மித்ராவும் தங்களை விரும்பியே அதில் தொலைத்து பேசிக்கொண்டு இருந்தனர்.


ப்ரித்திவ், "மிதிலா உங்க அக்கா குழந்தைக்கு பேர் கூட செலக்ட் பண்ணிட்டா..", என  பாகுபலி படத்திற்கு போன கதையை கூட அவளிடம் சொன்னான்.


மதிய உணவு வேலைக்கு பிறகும் அனைவரும் ஒன்றாகவே நேரத்தை கழித்தனர். 


மாலை நேரம் நெருங்க நெருங்க அனைவருக்குமே பிரியப் போகும் துயரம் வந்து வருத்தியது.


மித்ராவிற்கு உடல் அசதியாக இருந்தாலும் இப்பொழுது ஓய்வு எடுத்துவிட்டால்..   பிறகு எப்பொழுது பெற்றோரை காண்போமோ என்று பொறுத்துக் கொண்டாள்.


விஷ்ணுதுளசிக்கு மகளின் தலைப்பிரசவத்திற்கு, அருகிலிருந்து பார்க்க முடியாத வலி மனதில். 


பிரித்திவ்விற்கும் வருத்தமாகத்தான் இருந்தது. இத்தகைய பாசமான குடும்ப சூழலை விட்டு எவ்வாறு மித்ரா தன்னுடன் இருக்கின்றாளோ பாவம் என்று நினைத்தான்.


மித்ரா சிறிது நேரம் அவளுக்கு பிடித்த ஊஞ்சலில் உட்கார போகின்றேன் என்றுவிட்டு கூடத்திற்கு வந்தாள். மாலை ஆகிவிட்டதால் ஒன்றும் பயமில்லை என்று அனைவரும் நினைத்தனர்.


துளசி, மித்ராவிற்கு இடுப்பு வலுப்பெற உளுந்து களி செய்து கொடுத்துவிட்டு.. 


கொஞ்சம் மும்பைக்கு எடுத்துச்செல்ல பலகாரம் செய்து அனுப்பலாம் என முடிவு செய்து வீட்டில் இருந்த பொருட்களை வைத்து என்ன விரைவாக செய்ய முடியுமோ அதற்கு ஆயத்தப் படுத்தினார்.


மகளுக்கு சீமந்தம் எதுவும் தங்களால் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு. இப்பொழுது கடைக்கு சென்று புது புடவை கூட வாங்க முடியாத வேதனை வேறு.


விஷ்ணு இப்பொழுதாவது மித்ராவின் நகையை எடுத்து செல்லுங்கள் என்று பிரித்திவ்வை சமாதானப்படுத்திவிட்டு..  அலமாரியை திறந்து நகைகளை எடுக்க உள்ளே சென்றார்.


அப்பொழுது திடீரென வீட்டின் தெரு கேட் திறக்கும் சத்தம் கேட்டது.


யார் என தெரியாது, அனைவருக்கும் மனதில் பயம் வந்தது.


பிரித்திவ், சட்டென்று மித்ராவை தன் கைகளில் தூக்கிக் கொண்டு அறைக்குள் விரைந்து விட்டான்.


துளசி வாசலுக்கு ஓடிச்சென்று பார்க்க, அத்தெருவில் வசிக்கும், தெரிந்த பெண்மணி தான் வந்து இருந்தார்.


தினமும் ஒரு முறையாவது, துளசியிடம் பேச வந்து விடுவார்.


சிறிது ஆசுவாசம் அடைந்தனர் துளசியும், மிதிலாவும்.


துளசி, "வாமா வா..  என்ன இந்த நேரத்தில்.. ஏதாச்சும் வேண்டுமா", என்று சகஜமாக விசாரித்தார்.


வந்தவர், "அவசர விருந்தாளி ஒருத்தங்க வந்துட்டாங்க மிதிலாமா, கொஞ்சம் வாழை இலை மட்டும் கொடுங்க. எங்க வீட்டில அவர் இல்லை", என...


துளசி, விஷ்ணுவை அழைத்து வாழையிலையை தோட்டத்தில் இருந்து வெட்டி எடுத்து வர அனுப்பினார்.


வந்த பெண்மணி வீட்டை சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டே..  ஹாலில் கூடத்தில் கீழே செட் செய்து இருந்த அடுப்பை பார்த்து..


துளசியிடம், "என்ன மிதிலாம்மா, பலகாரம் செய்ய போறீங்களா இப்ப போயிட்டு..  என்ன விசேஷம்..", என்று விசாரித்தார்.


துளசிக்கு சட்டென்று என்ன சொல்வது என்று தெரியவில்லை..  சிறிது யோசித்து, "மிதிலாக்காக தான்மா.. காலேஜ்ல பசங்க கேட்டாங்கன்னு சொன்னா.. அதான் கொஞ்சம் செஞ்சு கொடுக்கலாம்னு.. அடுப்பை வச்சேன்..", என்றார்.


விஷ்ணு உடனேயே வந்துவிட்டார் இலைகளுடன்.


அப்பெண்மணி வாங்கிக்கொண்டு "இன்னைக்கு என்னன்னு தெரியல..  உங்க எல்லார் முகமும் ஏதோ மாதிரி இருக்கு..", என்று ஆழம் பார்த்தார்.. பேச்சை வளர்த்துக்கொண்டே.


அதில், சட்டென்று அனைவரும் சாதாரணமாக முகபாவனையை மாற்றிக்கொண்டனர்.. 


துளசி, "அது ஒன்னும் இல்லம்மா.. காலையிலிருந்து கொஞ்சம் தோட்டத்திலும் வீட்டிலும் வேலை.. சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு படுக்கலாம்னு இருக்கோம்", என்று நாசுக்காக கூறி அவரை அனுப்பி வைத்தார்.


துளசி மீண்டும் கதவை அடைத்துவிட்டு வர மித்ரா, "யாருமா வந்துட்டு போனாங்க", என..


துளசி, "அது நம்ம வீட்டுக்கு ஒரு வீடு தள்ளி புதுசா வந்து இருக்காங்க டா..  இந்த தெருவிலேயே இப்போதைக்கு தைரியமா நம்ம கிட்ட அவங்க ஒருத்தங்க தான் பேசுறாங்க..", என்றப்படி, தோட்டத்தில் பூத்த பூவை அவள் தலையில் வைத்து விட்டு.. சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு.. ஹாலுக்கு வந்தார்.


பாவம் அவருக்கு தெரியவில்லை, அவள் ஆதிகேசவனின் கைக்கூலி என்று.


விஷ்ணு, பிரித்திவ், மித்ரா மற்றும் மிதிலா அறையில் பேசிக்கொண்டு இருந்தனர்.


முற்றிலும் இருட்டிவிட்டது.. 


சிறிது தைரியம் அனைவருக்குள்ளும்.. 


இனி ஒன்றும் பயமில்லை என நினைத்தனர்.


அப்பொழுது துளசி, மிதிலாவை அழைத்து பரண் மேல் இருக்கும் கொத்து முறுக்கு போடும் பெரிய ஆச்சு கரண்டியை எடுத்து தர சொல்லி, வீட்டின் பின்புறம் அழைத்து சென்றார்.


மிதிலா, ஏணியை போட்டு மேலே ஏறிச் சென்று.. பரணில்..  துளசி கேட்டதை தேடிக்கொண்டு இருக்கும்போதே.. வீட்டில் வேகமாக கேட் அடித்து சாத்தும் சத்தமும்..  ஆட்கள் வேகமாக உள்ளே நுழையும் சத்தமும் கேட்டது..


துளசி என்னவென்று நிதானிபதற்குள்.. மித்ராவின் கதறல் சத்தம் ஓங்கி ஒலித்தது.


மிதிலா, "அம்மா என்னமா ஆச்சு", என்று பயத்தில் மேலிருந்து கத்தினாள்.


துளசிக்கு என்ன நடக்கின்றது என்று புரிந்துவிட்டது.. 


பட்டென்று ஏணியை கீழே படுக்க வைத்துவிட்டு.. "மிதிலா என்ன ஆனாலும் அமைதியா மேலேயே இருமா..  இது அம்மா மேல சத்தியம்.. ", என்றுவிட்டு விடுவிடுவென லைட்டை நிறுத்திவிட்டு.. "சத்தம் காண்பிக்காதே", என்றுவிட்டு கூடத்தை நோக்கி ஓடினார்.


மிதிலா பயத்தில் உறைந்து போய் வாயை பொத்திக் கொண்டு பரண் மேலேயே உட்கார்ந்து இருந்தாள்..  


சில வினாடிகளிலேயே, கேட்கும் ஓலங்களின் சத்தத்தில் இதயம் படபடக்க.. மரண பயத்தில் மருட்சியில்.. பேச்சு மூச்சின்றி.. அழக்கூட தோன்றாது.. இருட்டில் அப்படியே அமர்ந்து இருந்தாள்.






கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story

1. சங்கீத வானில் ஓர் அந்திப்போர்!😘🕺💃🎼🪻