41.2
ஜிகு ஜிகுவென்று ஒருயிடம் விடாது, டிசைன்களை அள்ளிக்கொட்டி நிரப்பி, பார்த்ததும் திகட்ட வைப்பது போல் இல்லாமல், சிறு சிறு தங்க நிற கற்களை, கைகளின் முடிவிலும், கழுத்தின் ஓரத்திலும் மட்டும் வைத்து, நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்த அந்த தாமரை நிற பேபி பிங்க் ஜாக்கெட், குறிஞ்சியின் உடலை அவ்வளவு பாந்தமாக தழுவிக்கொண்டது.
தாலி கயிற்றை உள்ளே போட்டு மறைத்துவிட்டு, ‘எதுவும் தெரிகிறதா’ என்று அங்கு ஒரு பக்க சுவர் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த கண்ணாடியில் சரிப்பார்த்த குறிஞ்சிக்கு, அப்பொழுது தான் கச்சிதமாக தைக்கப்பட்ட அந்த ஜாக்கெட் கருத்தில் பதிந்து, அவள் அளவு எதுவும் தரவில்லை என்பதே ஞாபகத்திற்கு வந்தது.
சரியாக அந்நேரம் பார்த்து ஈஷா உள்ளே நுழையவும்…
உடைமாற்றும் திரைக்கு அந்தப்பக்கம் நின்றப்படியே, “குட்டிம்மா… அம்மாவோட ட்ரஸ் அளவு நீங்க தான் அப்பாக்கு எடுத்து கொடுத்தீங்களா…” என்று விசாரித்தாள் குறிஞ்சி.
அதற்கு, “நோ அம்மா…” என்ற ஈஷா, ஆங்கில பாடல் ஒன்றை பாடியப்படியே தன்னுடைய மேக்கப்பை தொடரவும்.
புடவையை ஓரிரு நிமிடங்களிலேயே கட்டிமுடித்து வெளிவந்த குறிஞ்சி… ஈஷா அவளுக்கு அவளே அவ்வளவு அழகாக போட்டுக்கொண்டிருந்த மேக்கப்பை பார்த்து…
ஈஷாவின் இடது கன்னத்தில், கண் மைக்கொண்டு சிறிதாக திருஷ்டி பொட்டு வைத்துவிட்டு…
தன்னுடைய கூந்தலை வார ஆரம்பிக்கவும்…
ஈஷா, “அம்மா உங்களுக்காக பேபி வெயிட் பண்றாங்க… அவர்கிட்ட போய்ட்டு என்னை மாதிரியே ஹேர் ஸ்டைல் பண்ணிக்கோங்க… நாம இரண்டு பேரும் ஒரே மாதிரி ரெடியாகலாம்னு சொன்னேன் இல்ல” என்றாள், அவளின் அலை அலையாக வளைந்து நெளிந்து செல்லும் கூந்தலை காட்டி.
அதில், “ஐயோ பாப்பா… எனக்கு எதுக்கு அதெல்லாம்…” என்று பதறி மறுத்த குறிஞ்சி, “அப்பாக்கு தொந்தரவா இருக்கும்… மணியாகிடுச்சு பாரு… இதெல்லாம் சின்ன பிள்ளைங்க ஹேர் ஸ்டைல் டா… அம்மாக்கு சரிவராது…” என்று எவ்வளவோ சொல்லி வேண்டாம் என்றுவிட…
“பேபி…” என்று ஈத்தனின் குரல் வெளியே இருந்து கேட்டு இருந்தது.
உடனே வெளியே ஓடிய ஈஷா, அப்படியே அனைத்தையும் ஒன்று விடாமல் தன் தந்தையிடம் ஒப்பித்துவிட்டு இருந்தாள்.
அதில், “குறிஞ்சி…” என்று ஈத்தன் அவளை அழைக்கவும்.
“அச்சோ! இந்த சின்ன குட்டியை…” என்று கைகளை பிசைந்த வண்ணம் வெளியே வந்த குறிஞ்சி…
அங்கு சோஃபாவில் அமர்ந்திருந்த ஈத்தனை பார்த்து ஒருகணம் மூச்சு விட மறந்து நின்றுவிட்டு இருந்தாள்.
புத்தம் புதிய வெண்ணிற பட்டு வேஷ்டி சட்டையில், நீல கண்கள் இரண்டும் பளிச்சென்று மினுமினுக்க, ஆளை விழுங்கும் கொள்ளை அழகுடன் அமர்ந்து இருந்தான்.
அவர்களின் திருமண தினத்தன்று இறுதியாக அவனை வேஷ்டி சட்டையில் அவள் பார்த்தது.
அதற்கு பிறகு இன்று தான் பார்க்கிறாள்.
புதிதாக வைத்திருக்கும் தாடி, மீசை தவிர, மற்றப்படி அப்படியே தான் அவன் மேனியின் புத்துணர்வு குறையாமல் இருப்பது போல் இருக்க. அவளின் கண்கள் அவனை இன்ச் பை இன்ச்சாக அளவிட கிளம்பிவிட்டு இருந்தன.
அதை, அவளின் விழி அசையா பார்வையிலேயே உணர்ந்து, ‘ஓ குறிஞ்சி மலர்!’ என்று இன்பமாக அதிர்ந்த ஈத்தன், லேசாக தன் மூக்கின் நுனி பகுதியை தேய்த்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு…
“அம்மாவை வந்து உட்கார சொல்லுங்க பேபி” என்றான் ஈஷாவிடம்.
அந்த சத்தத்தில், சட்டென்று தன்னுணர்வு மீண்ட குறிஞ்சி, செய்துக் கொண்டிருந்த காரியத்தில் பதறி, ஈஷா கவனித்து இருப்பாளோ என்று ஆராய…
அவளோ, “அம்மா பயப்படாமல் வாங்க… நல்லா இல்லைனா விட்டுடலாம்…” என்று குறிஞ்சியின் கைப்பற்றி, ஈத்தனிடம் இழுத்து சென்றுவிட்டாள்.
________________________________
ஈத்தன் மேலே சோஃபாவில் அமர்ந்து இருக்க. அவனுக்கு முன்பு, கீழே தரையில் போட்டிருந்த குஷ்ஷனில் குறிஞ்சி அமர்ந்திருந்தாள்.
ஈஷாவின் கூந்தலை விட நீளமாக இருந்த குறிஞ்சியின் கூந்தலை, முதலில் லேசாக பற்றி பரிசோதித்த ஈத்தன்…
இன்னும் கூந்தல் முடிவில் ஈரம் சொட்டுவதை பார்த்து ஈஷாவிடம், “பேபி டவல் எடுத்துட்டு வாங்க…” என்று அனுப்பிவிட.
அவள் சென்றதும், சட்டென்று திரும்பி ஈத்தனை பார்த்த குறிஞ்சி, “உங்களுக்கு வீண் சிரமம். பாப்பாக்கிட்ட நான் சொன்னேன், அவளுக்கு புரியலை. சாரிங்க” என்றாள் படபடவென்று, அவனுக்கு போய் தனக்கு தலை சீவும் வேலையை பார்க்க வைத்துவிட்டதில் சங்கடமாக.
அதற்கு, “எனக்கு சிரமம்னு உன்கிட்ட நான் சொன்னேனா கேர்ள். அமைதியா இரு” என்றப்படியே, அவள் தன் நெற்றியில் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டினை அழுத்தி ஒழுங்காக வைத்துவிட்ட ஈத்தன்.
“இன்னைக்கு பேபியோட பிறந்த நாள் மட்டும் இல்லை குறிஞ்சி… நீ அம்மாவாவும், நான் அப்பாவாவும் ஆன ஸ்பெஷல் நாளும் ஆச்சே”, என்றவன், “நாம அதை செலிப்ரேட் பண்ணனும் தானே”, என்று கேட்க…
அவன் கூறிய அந்த அம்மா, அப்பாவில் குறிஞ்சியின் தலை தானாக ‘ஆம்’ என்று ஆட…
“கூல்” என்று அவள் கன்னத்தில் தட்டிய ஈத்தன், “அப்ப வேறெதையும் நினைக்காமல், ரிலாக்ஸா என்ஜாய் பண்ணு கேர்ள்” என்றப்படியே அவளின் அஞ்சனம் தீட்டப்பட்ட கருவிழிகள் இரண்டையும் பார்த்து, “பிளவுஸ் ஃபிட்டிங் சரியா இல்லையா குறிஞ்சி. பேபிக்கிட்ட நீ விசாரிச்சன்னு சொன்னா!” என்றவன் பார்வை, வெகு சாதாரணமாக அவள் விழிகளில் இருந்து கீழிறங்கி, அவளின் கழுத்தை கடந்து பயணிக்க பார்க்கவும்.
“அளவெல்லாம் ரொம்ப சரியா இருக்குங்க” என்று அவசரமாக அவன் பார்வையின் போக்கை தடுத்த குறிஞ்சி.
“ஈஷா பாப்பாக்கிட்ட அளவு ட்ரஸ் யார் கொடுத்து இருப்பாங்கன்னு தெரிஞ்சிக்க தான் விசாரிச்சேன். வேறொன்னுமில்லை” என்றாள் விளக்கமாக.
அதற்கு, “ஓ…” என்று சற்று கேலியாக கூறிய ஈத்தன். “உனக்கு மட்டும் தான், என் பொருட்களை, எனக்கு தெரியாமல் எடுக்க தெரியுமா கேர்ள்” என்று மென் புன்னகையுடன் கேட்கவும்.
சட்டென்று திருதிருத்தவள், ஈத்தனின் புன்னகை மேலும் விரியவும், ‘ஐயோ இவருக்கு அதெல்லாம் எப்ப மறக்கும்…’ என்று திரும்பிக்கொண்டாள்…
ஒருபக்கம் சங்கோஜமாக இருந்தாலும்…
மறுபக்கம், அவளின் அனுமதியில்லாது, அவளிடம் ஈத்தன் எடுத்துக்கொள்ளும் இந்த உரிமைகள் யாவும் தேனாக தித்தித்து, அவளை மேலும் பூரிப்படைய செய்தன.
அதற்குள் ஈஷா துண்டுடன் வந்துவிடவும்.
குறிஞ்சியின் நுனி முடியை அள்ளி துடைத்துவிட்ட ஈத்தன்…
அவள் முடி முழுவதும் சிக்கல் ஆகாமல் தடுக்கும் மற்றும் சூடு தாங்கும் உயர்தர ஸ்ப்ரேக்களை அடித்துவிட்டு…
முன்பக்கம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முடியினை எடுத்து, கையில் இருந்த கருவிக்குள் கவனமாக விட்டு எடுத்துக்கொண்டே அவன் வரவும்…
“வாவ் அம்மா… உங்க முடி ரொம்ப அழகா இருக்கு…” என்று அப்பொழுதில் இருந்தே ஈஷா துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.
அதில், பட்டுப்போன்ற மென்மையுடன், சுருள் சுருளாக முன்புறம் வந்து விழுந்த தன் குழல்களை, ஆசையாக தொட்டு தொட்டு பார்க்க ஆரம்பித்த குறிஞ்சி…
சில கணங்களில் சிலிர்க்க ஆரம்பித்த தன் உடலை கட்டுப்படுத்த தெரியாது, பதறி திரும்பியவள், ஈத்தனின் கரத்தினை அசைய முடியாதவாறு அழுத்தமாக பற்றிக்கொண்டு இருந்தாள்.
காரணம், ஈத்தனின் விரல்களின் ஸ்பரிசத்தை, அவள் தன் செவியோரம் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக முதுகில் உடை மறைக்காத பாகங்களில் எல்லாம் அழுத்தமாக உணர ஆரம்பித்தது தான்.
இன்னும் அவன் விரல்களின் வெக்கையை, அவளின் குளிர் தேகம் தேக்கி வைத்திருக்க. மெல்லிய நடுக்கம் அவளின் உடலில்.
ஈத்தனோ அவள் செயல் புரியாது, “வாட் கேர்ள்” என்றான்.
அதற்கு என்ன பதில், அதுவும் ஈஷாவின் முன்னிலையில் கூறுவது என்று குறிஞ்சிக்கு தெரியவில்லை.
அதில், ஏசி குளிரிலும் முத்து முத்தாக அவளுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட…
“அது… அது…” என்று சீரற்ற மூச்சுகளுடன் கூறியவள், “முதுகில் கரெண்ட் ஷாக் பட்ட மாதிரி இருந்துச்சுங்க” என்று சமாளித்து… பட்டென்று தன் முதுகினை முந்தானை நுனியை இழுத்து போர்த்தி மொத்தமாக மூடி மறைத்துவிட்டாள்.
‘ஷாக் அடித்தப்போல்’ என்று அவள் கூறும் பொழுதே, அதற்கு சாத்தியமில்லாததில் சுதாரித்துவிட்ட ஈத்தன்… அடுத்து அப்பட்டமாக அவள் செய்து வைத்த செயலில்…
‘ஓ மை காட்…’, என்று, அவளை முறைக்காமல் முறைத்து அமர்ந்து இருந்தான்.
பின்னே என்னவாம், இவள் மட்டும் அவனை முப்பொழுதும் ரசிக்கலாம். ஆனால் அவன் அவளின் எதையும் ரசிக்க என்ன, பார்க்க கூட கூடாதாமே! என்ன அந்நியாயம் இது! உரிமை பட்டவன் அவன் தானே!
அனைத்தையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் குறிஞ்சி அமர்ந்திருக்க…
அனைத்தையும் மனதில் குறித்துக்கொண்ட ஈத்தன், மீதி வேலையை செய்து முடிக்க.
“அம்மா, யு லுக் சோ யங்!” என்று குறிஞ்சியை சுற்றி வந்த ஈஷா, “பேபி சூப்பர்” என்று ஈத்தனையும் பாராட்டினாள்.
இப்படி அவர்கள் மூவரும் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து இருக்கும் பொழுதுகள் ஈஷாவிற்கு மிகவும் பிடித்திருக்க, ஈத்தன் அவளுக்கென்று அணிய தந்திருந்த நகைப்பெட்டியையும், குறிஞ்சிக்கு தந்திருந்ததையும் அங்கேயே வைத்து அணிந்துக்கொள்ளலாம் என்று தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.
குறிஞ்சிக்கு செய்திருந்தது போலவே, மாணிக்கம் மற்றும் வைர கற்களால் ஆன தங்க ஆபரணங்கள், ஈஷாவின் வயதிற்கு ஏற்ற அளவுகளிலும், டிசைகளிலும் இருந்தன.
அதில் இருந்த, சிறிய ஜிமிக்கியை எடுத்து, ஈஷாவின் காதில் ஈத்தன் கவனமாக போட்டுவிட…
குறிஞ்சி தரையில் கால் மடக்கி அமர்ந்து, ஈஷாவின் கால்களில் கொலுசுகளை போட்டுவிட என்று…
ஈத்தனும், குறிஞ்சியும் ஒவ்வொரு நகையாக எடுத்து, தங்கள் மகளுக்கு அணிவித்து முடித்தார்கள்.
தன் கண்களை நிறைத்த மகளின் அழகில், “வாவ்! என் பேபி எவ்ளோ அழகு” என்றான் ஈத்தன்.
அதில், “உண்மையாவா பேபி” என்று சந்தேகமாக கேட்ட ஈஷாவின் கன்னத்தை, முயல் குட்டியை வருடுவது போல் வருடி, “எஸ் பேபி!” என்று ஈத்தன் கூறவும்.
ஈஷாவின் பார்வை இப்பொழுது குறிஞ்சியிடம் அதை உறுதிப்படுத்திக்கொள்ள பாய்ந்தது.
குறிஞ்சியோ, மகளின் இந்த முழு அலங்காரத்தில், “கோவில் சிலை மாதிரி இருக்கீங்க குட்டிம்மா”, என்றாள் மனம் முழுவதும் நெகிழ்ந்து.
அதில் குறிஞ்சியின் இடையை சுற்றி கைப்போட்டு அவளை அணைத்துக்கொண்ட ஈஷா…
“சீக்கிரம் நீங்களும் நகையெல்லாம் போடுங்க அம்மா… தனியா நான் மட்டும் போட்டிருக்க எனக்கு ஷையா இருக்கு”, என்றவள்…
“பேபி வாங்க… நாம ரெண்டு பேரும் அம்மாக்கு ஜுவல்ஸ் போட ஹெல்ப் பண்ணலாம்…”, என்று குறிஞ்சியின் நெஞ்சில் சிறிய அணுகுண்டினையும், ஈத்தன் நெஞ்சில் மல்லிகை பந்தினையும் ஈஷா போட்டுவிட…
“ஷோர் பேபி…” என்று குறிஞ்சி போலவே ஒன்றும் தெரியாத முகத்துடன் கூறிய ஈத்தன், முதலில் தன் கையில் எடுத்தது என்னவோ கழுத்து மாலையை தான்.
‘ஷாக் அடித்ததுப்போல் இருந்தது’ என்று கூறியவளுக்கு, அதற்கான வைத்தியம் பார்த்தாக வேண்டும் தானே!
____________________________
📍🦋 ஹாய் டியர்ஸ்! சாரி ரொம்ப லேட் ஆகிடுச்சு யூடி போட. லாஸ்ட் வீக் என் பேபிக்கு இங்க ப்ளூபெரி பிக்கிங் போன இடத்தில் பூச்சி கடிச்சு... உடம்பு முழுவதும் அலர்ஜி... கோல்ட்... ஃபீவர்ன்னு தொடர்ந்து படுத்திட்டு... ஓகே ஆகும் வரை என்னால் அவளை விட்டு நகரவே முடியலை... இந்த வாரம் தான் திரும்ப எழுத ஆரம்பிச்சேன்...
இந்த யூடி இன்னும் முடியலை இன்னும் இருக்கு... நிறைய பேர் கேட்டுட்டு இருந்தனால் எழுதின வரை போட்டு இருக்கேன்...
சீக்கிரம் இதோட தொடர்ச்சி போடுறேன்...
போட்டவரை அத்தியாயம் எப்படி இருந்துச்சு சொல்லுங்க டியர்ஸ்...
-சுவாதி லக்ஷ்மி.
கருத்துகள்
கருத்துரையிடுக