34.1 அந்திப்போர் 🪻😘📽️

அத்தியாயம் -34

பன்னிரண்டு வயது பெண்ணிற்கு தந்தையான ஈத்தனை, எவ்வித பாரபட்சமின்றி வீதியில் இறங்கி ஓடவிட்டிருந்த குறிஞ்சி…

அவசர அவசரமாக தன் வீட்டு பூட்டினை திறந்தப்படியே, திரும்பி பார்த்தாள்.

ஈத்தன் அப்பொழுது தான் அத்தெரு வளைவினுள் திரும்புவது தெரிந்தது.

அதில் அவன் பார்ப்பதற்குள் மறைந்துவிட வேண்டும் என்று குடுகுடுவென்று வீட்டிற்குள் ஓடியவள்…

ஓடிச்சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாற்றி, கிடுகிடுவென நடுங்கும் தன் தேகத்தை அக்கதவு மீதே சாய்த்து நின்று…

“ஹப்பாடா… தப்பிச்சோம்” என்று பலமாக மூச்சுவாங்கும் தன் இதயத்தை அழுந்த பற்றி ஆசுவாசப்படுத்த பார்க்க…

மறுவினாடியே “குறிஞ்சி, ஓப்பன் த டோர்” என்று வெளியில் இருந்து ஈத்தனின் குரல் கேட்டு, அவளின் அதிவேகமாக விம்மி தணியும் மார்பை அப்படியே அசைவின்றி உறைய வைத்திருந்தது…

உடன், “உன்னை கதவை திறக்க சொன்னேன் குறிஞ்சி. என்ன பழக்கம் இது? ஓப்பன்!”, என்று கத்திய ஈத்தன், அந்த அறைக்கதவை போட்டு தட்டிய தட்டில், அவளுக்கு உடலில் இருந்த நடுக்கமும் நின்றுவிட்டது…

“ஐயோ கடவுளே…. இவருக்கு நம்ம வீடு எப்படி தெரிஞ்சிச்சு” என்று நினைத்தவளுக்கு… அடுத்து என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை…

இதற்கு மேல் ஓட வேண்டும் என்றால் அங்கிருக்கும் ஜன்னலை தான் உடைத்துக்கொண்டு அவள் ஓட வேண்டும்…

அதையும் அவள் மூளை முயற்சித்து பார்க்கலாமா என்று யோசிக்க தொடங்கவும்…

“குறிஞ்சி, இப்ப நீ டோர் ஓப்பன் பண்றயா? இல்லை நான் பண்ணவா?” என்று கேட்ட ஈத்தன்.

‘உள்ளே அவள் என்ன செய்கிறாள்’ என்று தெரியாமல்…

சற்று தாமதிக்காமல், அக்கதவினையே உடைத்துவிடும் நோக்கில் போட்டு அழுத்தி தள்ள ஆரம்பிக்க…

அக்கால பழைய வீடு…

அவனின் முழு பலம் முன்பு திக்குமுக்காட தொடங்கிவிட்டது…

அவளுக்கு அரணாக, கதவில் அவள் போட்டு வைத்திருந்த தாழ்ப்பாள், மொத்தமாகவே தளர்ந்து கதவில் இருந்து பிடிங்கிக்கொண்டு வெளிவர ஆரம்பித்துவிட…

“ஹையோ” என்று அதிர்ந்து தன் வாயில் கை வைத்த குறிஞ்சி… அவ்வறையை சுற்றி ஒருமுறை பார்த்து… மொத்தமாக தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று மிரண்டு போனாள்…

ஏற்கனவே ஈத்தன் முன்பு தாலி வெளிப்பட்டுவிட்டதிலேயே தன் பாதி உயிரை விட்டுவிட்டு இருந்தவள்… இதற்கு மேல் தாமதித்தால் மீதியும் போய்விடும் என்று பதறி…

“சமர் சார்.‌ ப்ளீஸ் ப்ளீஸ். நானே கதவை திறக்கிறேன்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள்…

அதில், தன் செயலை அப்படியே நிறுத்திய ஈத்தன், “Hurry up” என்று அவளை உடனே கதவை திறக்க கூறி அவசரப்படுத்த…

குறிஞ்சிக்கு திறக்க விருப்பமே இல்லை. எதிர்கொள்ள போகும் விஷயத்தை எண்ணி அவ்வளவு பயமாக இருந்தது.

அதில் அழுகையில் உதடுகள் துடிக்க… தன் கண்களை ஒருமுறை அழுந்த மூடி திறந்தவள்…

மெல்ல அவள் வெளியே வருவதற்கு மட்டும் போதுமான அளவிற்கு, கொஞ்சம் கொஞ்சமாக… வேறுவழியின்றி, அந்த அறைக்கதவை திறந்து…

அச்சிறு இடைவெளி வழியாகவே வெளிவந்து, அவன் அறை உள்ளே காணாத வகையில் பட்டென்று அறை கதவை மூடிவிட்டாள்.

ஈத்தனுக்கு, அந்த வீட்டில் எத்தனை செங்கல் இருக்கின்றது என்று கூட தெரியும் என்பதை அறியாது, தாழ்ப்பாள் வேறு போட்டு அந்த அறைக்கதவை பத்திரமாக பூட்டியவள்…

மெல்ல ஈத்தன் நின்றிருந்த பக்கம் திரும்பி நின்றாள்.

குனிந்த தலையை மட்டும் நிமிர்த்தவே இல்லை.

கொடைக்கானல் குளிரிலும் உடல் முழுவதும் வியர்த்துப்போய், தவறிழைத்துவிட்டு, ஆசிரியர் முன்பு நிற்கும் மாணவி போல், நடுங்கிக்கொண்டு இருந்தாள்.

அவளின் ஒவ்வொரு அசைவையும், தவறவிடாது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ஈத்தன்.

“குறிஞ்சி இங்க பாரு…” என்று அவளை அழைத்தான்.

குறிஞ்சியோ அதில் மேலும் தன் தலையை குனிந்துக்கொள்ள…

குறிஞ்சியின் இத்தோற்றம் ஈத்தனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அதில், “குறிஞ்சி உன்னை என்னை பார்க்க சொன்னேன்…” என்று சற்று அழுத்தமாகவே கூறிய ஈத்தன்…

அவளின் தாடையை பற்றி, வலுக்கட்டாயமாக அவளின் தலையை நிமிர்த்தவும் செய்ய…

அதில், ‘என்னை விட்டுவிடேன்’ என்று பார்வையால் கெஞ்சியப்படி அவன் கண்களை பார்த்தவள்…

அதற்கு மேல் அவன் கண்களை நேருக்கு நேர் காண முடியாது. தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு விட…

மூடிய அவளின் விழிகளில் ஓரமிருந்து கரையை உடைத்துக்கொண்டு, மளமளவென வழிய ஆரம்பித்த அவளின் கண்ணீர் துளிகள்… அவளின் முகத்தை பிடித்து வைத்திருந்த ஈத்தனின் கரத்தினை நனைக்க ஆரம்பித்தன.

அதில், அவளின் தவிப்புகள் அனைத்தும் ஈத்தனுக்குள் கூடுவிட்டு கூடு பாய்வதுப்போல் நொடியில் ஊடுருவ தொடங்கிவிட…

அதை சற்றும் தாங்க முடியாதவன், “என்ன டா குறிஞ்சி இதெல்லாம்! என்கிட்ட என்ன பயம் உனக்கு. நான் என்ன செய்திடுவேன் உன்னை?!” என்று குரல் நடுங்க கேட்டவன், 

தன் மற்றொரு கரம் கொண்டு அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு, “உன்னை அழக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல கேர்ள்” என்றவனின் கண்கள் கூட இப்பொழுது கலங்க ஆரம்பித்துவிட்டன…

அதை அவன் குரல் வித்யாசம் மூலமே உணர்ந்துக்கொண்டிருந்த குறிஞ்சியின் கண்கள் இப்பொழுது பட்டென்று திறந்துக்கொண்டுவிட்டன…

தன்னவனின் நீல கண்களில் சந்தோஷ மேகம் மட்டுமே மிதக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவளால்… இப்பொழுது அவளாலேயே அங்கு ஆழி சூழ்ந்துவிட்டதை தாங்க முடியவில்லை…

அதில் முற்றிலும் மனம் உடைந்து போனவள், “நானும் தான் சார் உங்களை அழக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். நீங்க எனக்கு ‘அழமாட்டேன்னு’ சத்தியம் கூட செய்து தந்திருக்கீங்க. அழக்கூடாது நீங்க…” என்று அழுதுக்கொண்டே அவனிடம் கூறியவளால்… அதற்கு மேல் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை…

“சாரி சமர் சார்… சாரி… நான் எவ்வளவோ என் மனசை கட்டுப்படுத்த பார்த்தேன். என்னால் முடியலை. என்னை மன்னிச்சுடுங்க.” என்று அவனை காதலித்ததற்கு அவனிடமே மன்னிப்பை யாசித்தவள். கதறி அழ ஆரம்பித்துவிட்டு இருந்தாள்.

அதில், “ஷ் குறிஞ்சி… அழக்கூடாது…” என்று அவளை சமாதானம் செய்ய பார்த்த ஈத்தன். அது முடியாது. அவளின் முகத்தை பற்றி அப்படியே தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டு இருந்தான்…

அதில் குறிஞ்சியோ ‘ஏன் தனக்கு இந்த தீரா காதல் வந்தது’ என்று கொண்டவன் துணைக் கொண்டே மேலும் மேலும் இயலாமையில் கொட்டி தீர்க்க…

ஈத்தனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

தனக்கு அமைதி அளித்தவள்!
இப்படி அமைதியின்றி‌ தவிப்பதா?

அதில், “ஷ்… ஒன்னுமில்லைடா குறிஞ்சி… நீ எந்த தப்பும் செய்யலை… சொல்றேன் இல்ல… போதும் டா அழுதது… இங்க என்னை பாரு…” என்றவன் கரங்கள், இப்பொழுது அவளை மொத்தமாக தன்னுடன் சேர்த்து அணைத்துப்பிடித்து இருந்தன…

அதில், அவனின் வார்த்தைகள் மட்டும் இல்லை… அவனின் தேகமும் கூட, அவளுக்கான ஆறுதல்களை வாரி வழங்க…

அவள் விரும்பும் அக்கூட்டினுள் மொத்தமாக நெகிழ்ந்து போனவள். தன் இத்தனை வருட வலிகளையும், ஏக்கங்களையும் அவன் மார்பை மொத்தமாக நனைத்து, எரித்தாள்.

ஈத்தனுக்கோ இப்படி நிறுத்தாமல் அழுபவளை என்ன செய்து நிறுத்துவது என்று தெரியவில்லை.

ஒருக்கட்டத்தில் அவளாக நிறுத்தினாள் தான் உண்டு என்பது புரிய.

தன்னை அவளின் வலிகளை இறக்கி வைக்கும் வடிகாலாக கொடுத்துவிட்டவன். தன் அணைப்பை மட்டும் விலக்கவில்லை.

ஒரு எல்லைக்கு பிறகு, அவளின் கதறல்கள் மெல்ல அழுகையாக மாறி, அந்த அழுகையும் மெல்ல தேம்பலாக மாற…

ஈத்தனின் கரம் அவளுடைய முதுகை தட்டிக்கொடுத்தது…

அதில் அத்தேம்பலும் நின்று…

பெரும் நிசப்தம் அவர்கள் இருவருக்குள்ளும்…

எங்கு தான் எதுவும் பேசப்போய் மீண்டும் அழ ஆரம்பித்துவிடுவாளோ என்று அஞ்சி ஈத்தன் அசையாமல் நின்றிருக்க…

குறிஞ்சியோ தன் மொத்த மன அழுத்தமும் வடிந்துப்போய், அடுத்து என்ன என்று யோசிக்க கூட சுத்தமாக சக்தியற்று, அவனின் பிடியில் தன்னை மொத்தமாக கொடுத்து நின்று இருந்தாள்…

தன் மீது ஏறியிருக்கும் பாரத்தின் மூலம் அதை ஈத்தனும் உணர்ந்து தான், தன் கால்களை திடமாக தரையில் பதித்து அவளை தாங்கிக்கொண்டு இருந்தான்…
________________________________

🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻


கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story