35.3 அந்திப் போர்

ஈஷா அவளுடைய சிறு வயது உடைகளை பார்த்து, “சோ கியூட்…” என்று கொஞ்சியப்படியே… அதனை தன்னுடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொள்ள…

அவள் முகத்தில் வழிந்த ஆசையில்..‌.

‘இன்னும் நிறைய டிரஸ்ஸை குறிஞ்சி எடுத்துட்டு போய் இருக்கலாம்’ என்று ஈத்தனும்…

‘ச்சே… இன்னும் நிறைய எடுத்துட்டு வந்திருக்கலாமே’ என்று குறிஞ்சியும் நினைத்து இருந்தனர்…

அப்பொழுது, அடுத்ததாக ஈத்தனின் பொருட்கள் அடங்கிய இடம் வரவும்… அவ்விடத்தில் இருந்து ஈஷாவை அவளுக்கே தெரியாதவாறு நகர்த்தி சென்றுவிட்டான் ஈத்தன்…

அதில் குறிஞ்சியிடம், மீதமிருந்த கொஞ்ச நஞ்ச பதட்டமும் ஓடப்பார்க்க…

அது எப்படி? அதற்குள் உன்னை விட்டுவிடுவோமா என்ற விதி‌… அவளை வசமாக சிக்க வைத்துவிட்டு இருந்தது…

அதில் முன்பு விடைப்பெற்று சென்றிருந்த பதட்டமும், மீண்டும் ஓடிவந்து அவளுடனே ஒட்டிக்கொண்டது…

அதிலும் ‘அடிப்பாவி….’ என்பது போலான ஈத்தனின் அதிர்ந்த பார்வையில்… எங்கு சென்று ஒளிந்துக்கொள்வது என்று தான் குறிஞ்சிக்கு தெரியவில்லை.

“பேபி நம்ம ஃபேவரைட் hello kitty ஷர்ட்…” என்று ஒரே மாதிரி இருக்கும் அவர்கள் இருவரின் சட்டையை… அங்கிருக்கும் குறிஞ்சி ஸ்வெட்டர் பின்னும் மேஜையில் இருந்து, ஈஷா எடுத்து இருந்தாள்.

அது குறிஞ்சி 12 வருடங்களுக்கு முன்பு எடுத்து வந்தது இல்லை.

இப்பொழுது இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுத்து வந்து இருந்தது.

அவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும், அவள் பார்த்து வைத்திருந்த இந்த வேலையில் தான் ‘அடிப்பாவி…’ என்று ஈத்தன் அதிர்ந்து போனான்.

அதில் குறிஞ்சியோ திருட்டு முழி முழித்துக்கொண்டு… ஒரு கோடி ‘அச்சோ’-க்களை மனதினுள் கூறிக்கொண்டே… நின்று இருந்தாள்…

அவர்கள் இருவருக்கும் அந்த ஹலோ கிட்டி ஷர்ட் போலேவே, அதே டிசைனில் பூனைக்குட்டியுடன் ஸ்வெட்டர் பின்னி அவள் வைத்திருக்க…

“ஓ மை காட்… Awesome Amma… உங்களுக்கு நிறைய தெரியுது…” என்று குறிஞ்சியை பாராட்டிய ஈஷா… அந்த புது ஸ்வெட் ஷர்ட்டை எடுத்து தன் மீது வைத்து… அங்கிருக்கும் அலமாரி கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்க…

ஈத்தன் இன்னும் குறிஞ்சியையே தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதில், “அது… அது வந்து…” என்று திக்கியவள், “முன்னாடி இருந்த ஷர்ட்ஸ் உங்களுக்கு இப்போ செட் ஆகாதுன்னு தான்… புது சைஸ் வேண்டும்னு எடுத்துட்டு வந்தேன்… தப்பு தான்” என்று மெல்லமாக கூறிவிட்டு குனிந்துக்கொண்டவள்…

ஒருசில வினாடிகளுக்கு பிறகு அடிக்கண்ணால் அவனை பார்க்க…

‘இவள் எப்பொழுது இதை எடுத்திருப்பாள்’ என்ற ரீதியிலேயே தான், ஈத்தன் இன்னும், அவளை யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தான்…

அதில் இன்னும் ‘ஐயோ..’ என்றானது குறிஞ்சிக்கு.

அங்கிருக்கும் அவனுடைய ஷர்ட்டை கையில் எடுத்தவள், “வச்சிக்கோங்க…” என்று அவனிடமே கொடுத்துவிட்டு, அதற்கு மேல் அவனை பார்க்க முடியாது வெளியே ஓடிவிட…

“காட்...” என்ற ஈத்தனுக்கு வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருந்தது.

அதிலும் அவளின் கள்ள முழி…

ஈஷாவிற்கு இரண்டு வயதிற்கும் சமயம்… ஈத்தன் முதன் முதலில் அவளுக்கு ஐஸ் கிரீம் கொடுத்து இருந்தான்…

அதன் குளுமையிலும், மென்மையிலும், இனிப்பிலும் விழுந்துவிட்டு இருந்தவள்… மீண்டும் மீண்டும் ஈத்தனிடம் அதையே கேட்க…

‘நிறைய சாப்பிட கூடாது. நாளை மீண்டும் தருகிறேன்’ என்று அவன் அறைக்குள் இருக்கும், மினி சைஸ் குளிர் சாதனப் பெட்டியில், அதை வைத்து மூடிவிட்டான்…

அன்று இரவு…

ஈத்தன் உறங்கிவிட்ட பிறகு ஈஷா…

மெல்ல படுக்கையில் இருந்து இறங்கி சென்று… தலையணைகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டு… அதில் ஏறி… ஐஸ்கிரீம் பாக்ஸை எடுத்து இருந்தவள்…

ஸ்பூன் எதுவும் இல்லாததால்… கையாலேயே ஐஸ்கிரீமை எடுத்து கண்கள் மின்ன ருசிப்பார்க்க ஆரம்பித்துவிட…

அவளின் கையில் உருகி வழியும் ஐஸ்கிரீமை ஈத்தன் டிஷ்ஷூ கொண்டு துடைத்துவிட்டு கொண்டிருந்தான்…

ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆர்வத்தில் அதையெல்லாம் கவனிக்காமல் உண்டுக்கொண்டிருந்த ஈஷா… நாலைந்து வாயிற்கு பிறகு தான்… ஈத்தனை உணர்ந்து அதிர்ந்து இருந்தாள்…

அதில் திருதிருவென்று முழித்தவள்… 

என்ன செய்வது என்று தெரியாமல்… ஈத்தனின் கையில், அந்த ஐஸ்கிரீம் பாக்ஸை அப்படியே கொடுத்துவிட்டு… குடுகுடுவென்று ஓடிச்சென்று மீண்டும் படுக்கையில் படுத்து கண்களை பழையப்படி மூடிக்கொண்டுவிட…

ஈத்தன் அவளை எழுப்பி, அவளுக்கு அவனே இன்னும் கொஞ்சம் ஐஸ்க்ரீமை ஊட்டிவிட்டு, “இனி இப்படி செய்யக்கூடாது. பேபிக்கு கண்டிப்பா வேண்டும்னா. டாடிக்கிட்ட கேளுங்க…”, என்று அவளுக்கு பல் துலக்கிவிட்டு, சுத்தப்படுத்தி, உடைமாற்றி மீண்டும் படுக்க வைத்து இருந்தான்… 

இன்று குறிஞ்சியின் செயல்கள் அப்படியே அதேப்போல் இருக்க… 

கையில் இருக்கும் சட்டையை பார்த்தப்படியே, மனம் லயித்து போனான்…

அனைவரும் முதலில் மனைவியை பார்த்து, பிறகு வரும் குழந்தையிடம் மனைவியின் சாயலை காண்பார்கள் என்றால்…

இங்கு அனைத்தும் தலைகீழ்!

குழந்தையின் சாயலை மனைவியிடம் கண்டு களித்துக்கொண்டு இருந்தான் ஈத்தன்.
________________________________

ஒருவழியாக ஈஷாவும், ஈத்தனும் குளித்துவிட்டு… குறிஞ்சியின் அறையில் தயாராகி வெளி வரவும்.

குறிஞ்சியும், அங்கிருந்த மற்றொரு குளியல் அறையில், வேகமாக ஒருக்குளியலை மின்னல் வேகத்தில் போட்டுவிட்டு, ஹாலில் அவர்களுக்கான டின்னரை பிரித்து வைத்து முடிக்கவும் சரியாக இருந்தது…

நேரம் இரவு ஒன்பதை தாண்டிவிட்டு இருந்ததில்…

உணவை உண்ணும் பொழுதே ஈஷாவின் கண்கள் தூக்கத்தில் அப்படி சொக்கியது…

ஈத்தன் தான் அவளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தான்…

அவர்கள் இருவரும் இரவு உடையில் இருப்பதை பார்த்தப்பிறகு தான், குறிஞ்சிக்கு அவர்கள் இருவரும், அங்கு தான் இரவு தங்கப்போவது தெரிந்தது…

உடன் இனி தான் எங்கும் ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது என்பதும் தான்…

அலமாரியில் துவைத்து வைத்திருந்த பெட்ஷிட் மற்றும் தலையணை உறைகளை வெளியே எடுத்து… அவசர அவசரமாக குறிஞ்சி படுக்கையை தயார் செய்து முடித்த மறுகணமே… ஈஷா படுத்து உறங்கிவிட்டாள்…

இருவர் மட்டுமே படுக்கும் அளவிளான கட்டில் அது.

ஈஷா படுத்தப்பிறகு தான் அதன் அளவை ஈத்தன் கவனித்து இருந்தான்.

அதில் அவன், அதன் அருகில் போடும் படியான கட்டில் ஒன்றை வாங்கிக்கொண்டு வரக்கூறி செக்யூரிட்டிக்கு அழைக்க…

“வேண்டாம். நாளைக்கு தான் நாம கிளம்ப போறோம்னு சொன்னீங்களே. இந்த நேரத்தில் எதுக்கு தொந்தரவு. செலவும் கூட” என்று ஒரேடியாக மறுத்தவள்…

கீழே பெரிய கம்பளத்தை மடித்துப்போட்டு, அவளுக்கு படுக்க வசதியாக தயார் செய்துவிட…

ஈத்தனுக்கு வருத்தமாக இருந்தாலும். அவள் அவ்வளவு கூறியதில் சரியென்று விட்டுவிட்டான்.
________________________________

குறிஞ்சி கதவுகள் அனைத்தையும் பூட்டி, ஹீட்டர் அளவினை சரிப்பார்த்து, இரவு விளக்குகளை ஒளிரச் செய்து என்று அவளின் தினசரி பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, தண்ணீர் ஜக்குடன் அறைக்குள் நுழைந்தாள்.

கீழே விழுந்துவிடாமல் இருக்க, ஈஷாவை சுவர் பக்கம் கட்டிலில் படுக்க வைத்திருந்த ஈத்தன்…

அவளருகே மற்றொரு பக்கம் அமைதியாக கண்களை மூடி படுத்திருந்தான்…

மனம், மறுநாள் செய்ய வேண்டியவைகளை கணக்குப்போட்டுக்கொண்டு இருக்க…

குறிஞ்சியின் கொலுசுகளின் மெல்லிய ஒலியில் சிந்தனை களைந்தவன்… திரும்பிப்பார்க்க…

குறிஞ்சி மெல்ல நடந்துச்சென்று அவள் படுக்கையில் படுத்துக்கொண்டு இருந்தாள்…

அதில் ஈத்தன் அவள் பக்கம் திரும்பி படுக்க முடிவெடுத்து… திரும்ப… அவனுக்கு ஏதோ கழுத்தில் உறுத்துவது போல் இருக்கவும்…

‘என்ன இது’ என்று தடவி பார்த்த ஈத்தன்…

அப்படியே அந்த தலையணையை தூக்கி பார்க்க…

அங்கு அவன் சமீபத்தில் அமெரிக்காவில் முடித்திருந்த மியூசிக் கன்சர்ட்டின் புகைப்படங்கள்… தனித்தனியாக பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது…

அதிலும் ஒவ்வொன்றிலும் அவன் கொள்ளை கொள்ளும் அழகுடன்…

மக்களை நோக்கி முத்தம் கொடுத்தப்படியும்… இசையின் வரிகளில் மூழ்கியும் என்று இருக்க…

குறிஞ்சியின் ரசனை புரிந்தவனுக்குள் சலனம் அலை அலையாக அடிக்க தொடங்கிவிட…

திரும்பி தரையில் படுத்திருந்த குறிஞ்சியை பார்த்தான்.

அவளோ, அவன் திரும்பி படுத்து… தலையணைக்குள் கையை விட்டதில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்…

அப்படியே நெற்றியை தரையில் எடுத்துச்சென்று முட்டிக்கொள்ளலாமா என்ற எண்ணத்துடன் இருந்தவள்…

ஈத்தனின் பார்வை அவள் பக்கம் திரும்பியதும்…

பட்டென்று தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்…

இரவு விளக்கிலும் அவளின் துடிக்கும் இதழ்களும்… பதட்டத்தில் நடுங்கும் கைகளும்… அசையும் கால் விரல்களும்… அவனின் கண்களில் இருந்து தப்பாமல் போக…

“குறிஞ்சி மலர்…” என்றான் ஈத்தன் மெதுவாக.

அதில் அவளோ பட்டென்று அந்தப்பக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்…

சத்தம் இல்லாமல் சிரித்த ஈத்தன்…

“ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என்றான் குரல் குழைய.

அதில் அவள் தன் துப்பட்டாவை தூக்கி முகத்தில் போட்டு, தன்னை மொத்தமாக மறைத்துக் கொள்ள.

ஈத்தனின் நீல விழிகள் இரவு முழுவதும் அவளை தான் சுமந்துக்கொண்டு இருந்தன…

அவன் இதுவரை பார்த்திருந்த குறிஞ்சிக்கும்…

அவன் மனதில் குறிஞ்சிக்கு என்று அவன் வரைந்து வைத்திருந்த ஒரு பிம்பத்திற்கும்…

அப்படியே நேர் எதிராக இருந்தாள், கண்முன் படுத்திருக்கும் இந்த குறிஞ்சி!

அந்த குறிஞ்சி மீது அவனுக்கு, அவ்வளவு மரியாதை வந்தது என்றால்…

இந்த குறிஞ்சி மீது அவனுக்கு ஆசை வர ஆரம்பித்து இருந்தது…

அதிலும் அந்த கண்களும்… கன்னங்களும்… இதழ்களும்… பேசும் கள்ள மொழிகளும்… ரகசியங்களும்…

ஆழ்கடலினுள் இருந்து மெல்ல எழும் நிலவை போலவே, 
அவனின் புதைக்கப்பட்ட இளமை உணர்வுகளை மெல்ல எழும்பி, வெளியே வந்துக்கொண்டிருந்தன…

அதில், அவளுள் அவன் இறங்கியது போலவே…

அவனுள் அவளும் மெல்ல இறங்க ஆரம்பித்து இருந்தாள்….
________________________________

📍அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻


கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story