34.2 அந்திப்போர் 🪻😘📽️

இருவரின் மௌனத்தையும் களைக்கும் விதமாக… ஈத்தனின் தொலைப்பேசி அப்பொழுது மெல்ல ஒலியெழுப்ப ஆரம்பித்தது…

அதில் குறிஞ்சியை ஒருக்கையால் பிடித்தப்படியே, ஈத்தன் மறுக்கையால் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த தொலைப்பேசியை எடுத்துப் பார்த்தான்…

மதரிடம் இருந்து அழைப்பு என்றவுடன் உடனே அவன் அழைப்பை ஏற்று பேச…

குறிஞ்சிக்கு அப்பொழுது தான் ஈத்தனின் அணைப்பில் அவள் இருப்பது புரிந்தது… அதில் அதிர்ந்து பட்டென்று அவள் விலகப்பார்க்க…

அதை உணர்ந்த ஈத்தனும் தன் கரத்தினை விலக்கிக்கொண்டான்… 

ஆனால் பார்வை மொத்தத்தையும் மட்டும், அவள் மீது தான் விலக்காமல் வைத்து இருந்தான்…

பின்னே மறுபடியும் அவள் ஓட பார்த்தால், அவன் ஓடி பிடிக்க வேண்டுமே…

அப்பொழுது மதர், “உன் மனைவி என்ன சொல்றா ஈத்தன். எல்லாம் பேசிட்டயா?” என்று கேட்க.

ஈத்தனுக்கு மிக அருகில் நின்றிருந்த குறிஞ்சிக்கு அவர் பேசியது ஒரு வார்த்தை விடாமல் கேட்டு இருந்தது.

அதில், ‘என்ன மனைவியா!’ என்று அதிர்ந்துப்போன குறிஞ்சி… மேலும், ‘ஐயோ மதருக்கு எல்லாம் தெரியுமா?’ என்று ஈத்தனை நிமிர்ந்துப்பார்க்க…

அவளின் கேள்விகள் அனைத்தையும், அவளின் விழி வழியே படிக்க கற்றுக்கொண்டிருந்தவன்…

அவளின் உயரத்திற்கு ஏற்ப குனிந்து, அவளின் காதோரம் மெல்ல, “இந்த ரூமுக்குள்ளே இருக்கிறது தவிர, மத்தது எல்லாம் மதருக்கு தெரியும்” என்று கிசுகிசுத்துவிட்டு நிமிர்ந்து…

மதருடம் பேச…

முதலில் ஈத்தன் என்ன கூறினான் என்று புரியாமல் நின்றவள். பிறகு அது புரிந்து, “ஐயோ அப்ப இவருக்கு எல்லாம் தெரியுமா..!” என்று பதறி போனாள்.

அதில், அவளின் ஒவ்வொரு அசைவையும் விடாமல் பார்த்துக்கொண்டிருந்த ஈத்தனின் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்துக்கொள்ள…

குறிஞ்சிக்கு எங்காவது சென்று தலையை முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது…

சங்கடம், வெட்கம், கள்ளத்தனம் என்று அனைத்து உணர்வுகளும் மாறி மாறி அவளின் உடல் முழுவதும் தாண்டவம் ஆட…

அவளை பார்த்தப்படியே ஈத்தன், “குறிஞ்சிக்கிட்ட எல்லாம் பேசிட்டேன் மதர். ‘இனி உங்களை விட்டு எங்கேயும் போகவே மாட்டேன்’னு என்கிட்ட சொல்லிட்டா…”, என்று புன்னகையுடன் கூறியவன். “நாளைக்கே நான், ஈஷா, குறிஞ்சி சென்னை கிளம்பறோம் மதர்” என்று வேறு கூற…

முதலில் அவன் கூறியதை கேட்டே ‘நான் எப்ப இவர் கிட்ட அப்படி சொன்னேன்’ என்று அதிர்ந்துப்போன குறிஞ்சி… அடுத்து அவர்களுடன் அவள் செல்ல இருப்பதாக அவன் கூறியதை கேட்டு உறைநிலைக்கே சென்று விட்டாள்…

ஒரு அதிர்ச்சி, இரண்டு அதிர்ச்சி, இல்லை மூன்று அதிர்ச்சி என்றால் கூட பரவாயில்லை. சமாளித்துக்கொள்ளலாம். இங்கு ஒரு லாரி அதிர்ச்சியை கொண்டு வந்து அவள் மேல் ஈத்தன் கொட்டினால் என்ன ஆவாள் அவள்.

அந்தப்பக்கம், “ரொம்ப சந்தோஷம் ஈத்தன்” என்ற மதர். “இங்க ஈஷா எப்ப போகலாம்னு கேட்டுட்டே இருக்காப்பா. கூட்டிட்டு வரவா. பாவம் குழந்தை” என்று கூற.

உடனே ஈஷாவை அழைத்து வர கூறிவிட்டு அழைப்பை துண்டித்த ஈத்தன் குறிஞ்சியை பார்க்க.

அவளோ அவனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தும்… அதனை அவனிடம் கொண்டு சேர்க்க வார்த்தைகள் கிடைக்காது தத்தளித்துக்கொண்டு இருந்தாள்‌‌…

அப்பொழுது தன் மொபைலில் எதையோ தேடி எடுத்த ஈத்தன்… அவள் முன்பு அதை காட்ட…

என்னவென்று பார்த்த குறிஞ்சி…

மறுகணம் தன் இரு கைகளாலும் தன் வாயினை அழுந்த மூடிக்கொண்டு இருந்தாள்…

அவளுடைய அறையின் புகைப்படம் தான்… அதுவும் 360 டிகிரியில் ஈத்தன் எடுத்து வைத்து அவளிடம் காட்டி இருந்தான்…

அவளின் நெஞ்சிற்குள் அனுமதியின்றி அவன் நுழைந்தது போலவே… அவளின் அறைக்குள்ளும் அவன் அனுமதியின்றி நுழைந்திருக்க…

அவனை பார்த்து சிறிதாக கூட முறைக்க முடியவில்லை குறிஞ்சியாள்…

அந்தளவிற்கு அவளிடம் அவனின் ஆதிக்கம் இருக்க…

வேறுவழியின்றி அவள் அங்கிருந்து தன்னை மறைத்துக்கொள்ள ஓட பார்க்க…

பட்டென்று அவளின் இரண்டு பக்கமும், தன்னிரு கரங்களை, அவள் பின்னால் இருந்த கதவின் மீது பதித்து, அவளுக்கு அரண் அமைத்து தடுத்த ஈத்தன்…

“உன்னை பார்க்க தான், பேபி வந்துட்டு இருக்கா குறிஞ்சி. வெயிட் பண்ணு. பிறகு நாம ஓடிப்பிடிச்சு விளையாடலாம்” என்றவன்.

“அன்னைக்கு நீ நம்ம வீட்ல இருந்து கிளம்பிய பிறகு. நானும் பேபியும் இங்க வந்து இருந்தோம்”, என்று அவளிடம் அனைத்தையும் கூறியவன். “பேபிக்கிட்ட பேசிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன் டா” என்றப்படியே… 

தவிப்பில் துடிக்கும் அவளின் முகத்தை தன்னிரு கரங்களாலும் பற்றி ஏந்திய ஈத்தன்…

“நீ நினைவுகளோடு வாழ்ந்தது எல்லாம் போதும் டா குறிஞ்சி. இனி நிஜத்தோடு வாழ பழகிக்கோ!” என்று ஒரே வாக்கியத்தில் அனைத்தையும் முடித்துவிட்டு இருந்தான்…

அதில் குறிஞ்சி, “சார்… .நா நான்” என்று திணற…

“இனி நீ, நான், ஈஷா ஒன்னா… ஒரே குடும்பமா வாழ போறோம் குறிஞ்சி” என்றான் ஈத்தன்…

அதில் அவள் இன்னும் திணறிப்போக…

“ஈஷாக்கு அம்மா, அப்பாவா ஒரே வீட்டில் இருக்கலாம்” என்றவன். எவ்வித அலங்கார வார்த்தைகளும் இன்றி, நேரடியாகவே, “உனக்கு ஓகேன்னா கணவன் மனைவியாகவும் வாழலாம்” என்றிட.

குறிஞ்சியிடம் சிறு அசைவு கூட இல்லை.

சுவற்றில் ஒட்டிய போஸ்டர் போல் அப்படியே நின்றுவிட்டாள்.

பேச திறந்திருந்தவளின் வாய் கூட… அவன் இறுதியாக கூறியதில்… அப்படியே மூடாமல் சிறிது திறந்தவாறே நின்றுவிட்டிருக்க.‌..

அதை எதர்ச்சையாக பார்த்த ஈத்தனுக்கு தான் சட்டென்று மூச்சு முட்டுவது போல் இருந்தது.

அவள் பாட்டுக்கும் எளிதாக கவிதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு இருக்க… அதை வாசித்ததில் இருந்து அவன் தான் நேரம் காலமின்றி தடுமாறிக்கொண்டே இருக்கின்றான்…

வேதியியல் மாற்றம் நடைப்பெறும் வயதை எல்லாம், என்றோ நாம் கடந்துவிட்டோம் என்று அவன் திண்மமாக நினைத்திருக்க… இதோ வினாடிக்கு வினாடி அவனுள் மாற்றங்களை அல்லவா இந்த குறிஞ்சி ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாள்…

காளை பருவத்தில் இருந்தவன், விடலை பையனாக கொதித்துப் போனான்…

அதிலும் பனிக்கு தகுந்தப்போல், தாமரை நிறத்தில் லிப் கிளாஸ் போட்டிருந்த அவளின் ஈரப்பதம் மிகுந்த சற்று பெரிய இதழ்கள், அதிலிருக்கும் இதழ் ரேகைகள் அனைத்தையும் தெளிவாக அவனுக்கு காட்டிக்கொண்டிருக்க…

“காட்! என்ன பண்ற ஈத்தன்…” என்று பட்டென்று அவள் முகத்தில் இருந்த தன் கரத்தினை விலக்கிக்கொண்ட ஈத்தன்… பார்வையையும் அவளின் இதழ்களின் மேல் இருந்து விலக்கிக்கொண்டான்…

எல்லாம் ஒருசில வினாடிகள் தான்…

மீண்டும் தன்னை கட்டுப்படுத்த முடியாது அவள் பக்கம் திரும்பி… அவளில் மற்ற இடங்களில் எல்லாம் தன் பார்வையை அலைய விட ஆரம்பித்துவிட்டு இருந்தான்…

ஈத்தன் செய்யவே மாட்டான் என்று குறிஞ்சி நினைத்திருந்த அனைத்தையும், ஒன்றுவிடாமல் அவன் செய்ய ஆரம்பித்துவிட்டு இருந்தான்…

நேர் வகுடெடுத்து இலகுவாக பின்னப்பட்டு, தோள் வழியாக முன்புறம் போடப்பட்டிருந்த நீண்ட அடர்த்தியான கூந்தல்… அவளின் நீளமான கூந்தல் ஆசை நிறைவேறிவிட்டதை அவனுக்கு கூற…

மெல்லிய திருப்தி புன்னகையுடன் தன் பார்வை கீழ் இறக்கினான் ஈத்தன்…

ஏற்கனவே வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தவள், இப்பொழுது கொடைக்கானல் குளிரில் முன்பை விட மேலும் நிறம் கூடி, முல்லை வனமாய் ஒளிவீச…

அதனை மேலும் தூக்கிக்காட்டிக்கொண்டு இருந்தது… அவளின் இரண்டு அடர் கரும் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த அந்த சிகப்பு நிற வட்ட ஸ்டிக்கர் பொட்டு… 

அதில் அவ்வளவு கலையாக தெரிந்தாள்.

இன்னும் அவன் தன் பார்வையை கீழிறக்க…

சுற்றி நன்றாக அடர்த்தியாக அஞ்சனம் தீட்டப்பட்ட பெரிய விழிகள்… அழுததின் பலனாக நன்கு சிவந்து காணப்பட…

சட்டென்று சந்தேகமாக குனிந்து தன் இடது பக்க மார்பினை பார்த்தான் ஈத்தன்…

அவள் கண்களில் தீட்டியிருந்த அஞ்சனத்தில் பாதி, அவனின் கிரீம் வண்ண ஸ்வெட் ஷர்ட்டில் ஓவியம் தீட்டி வைத்திருந்தது.

அதில், ‘ஈஷாவை கூட எளிதில் சமாளித்துவிடலாம் போல்… இந்த குறிஞ்சியை சமாளிப்பது தான் பெரும் பாடாக இருக்கிறது… பிக் க்ரை பேபி’ என்ற எண்ணம் அவன் மனதில் ஓட… மெல்லிய புன்னகையுடன் மீண்டும் தன் பார்வையை அவளிள் அலைய விட்டான்…

ஈஷாவை சுமந்திருந்த பொழுதை விட… இப்பொழுது மேலும் சதைப்பிடித்து… ஒல்லி என்ற நிலையில் இருந்து மாறி சப்பி(chubby) என்ற நிலைக்கு வந்திருந்தாள் குறிஞ்சி. அதில் ஏற்கனவே பெரிதாக இருக்கும் அவளுடைய கன்னங்கள் இன்னும் பெரிதாகிவிட்டிருக்க…

ஈத்தனின் முகத்தில் ரசனையான இளம் முறுவல்.

கழுத்தில், காதில், கையில், விரலில் என்று அனைத்திலும், தன் சம்பாத்தியத்தில் தங்கத்தில் வாங்கி, பளிச்சென்று நகை அணிந்திருந்தவள்…
 
அழகான ஆரஞ்ச் வண்ணத்திலான, ஆங்காங்கே கருநீல நிறத்தில் சிறு சிறு கலம்கரி டிசைன் போடப்பட்ட காட்டன் புடவையை… சிறு சுருக்கம் கூட இல்லாது அவ்வளவு நேர்த்தியாக மடிப்பு வைத்து கட்டி இருந்தாள்…

அதில் மாராப்பில் இரண்டாவது மடிப்பை மட்டும் பின் செய்யாமல் ஃபிரியாக அவள் விட்டிருக்க… அது அவளின் பக்கவாட்டு அங்கங்கள் அனைத்தையும் யாரின் கண்களுக்கும் சிறு கடுகளவு கூட காட்சியாக்காது தடுத்து இருந்தது… 

மொத்தத்தில் குமரியாக அவன் பார்த்திருந்தவள்… இப்பொழுது முழு வளர்ச்சி அடைந்த மங்கையாக, திருத்தமாய் வரைந்து முடித்த ஓவியமாக, பரிபூரணமாக, அவன் கண்களின் முன்பு நின்று இருந்தாள்…

குறிஞ்சியோ ஈத்தனின் பார்வை தன்னை முழுவதுமாக எடைப் போட்டுக்கொண்டிருப்பதை அறியாது… ஏதேதோ யோசனையில் நின்று இருந்தாள்…

அதில் தடைகள் எதுவுமின்றி மொத்தமாக அவளை பார்த்து முடித்த ஈத்தன்… தன் பாக்கெட்டில் இருந்து தன்னுடைய கைக்குட்டையை வெளியே எடுத்து… அவள் முகத்தில் ஆங்காங்கே பூசிக்கொண்டிருந்த கண் மையை துடைத்துவிட ஆரம்பிக்க…

தன் எண்ணங்களுக்குள் மூழ்கிவிட்டிருந்த குறிஞ்சிக்கு அப்பொழுது தான் உயிர் வந்திருந்தது.

அதில், ஈத்தனின் கரத்தினை பிடித்து தடுத்தவள்…

“ஏன் திடீர்னு எல்லாம் சமர் சார். எனக்காகவா?” என்று கேட்டாள், அவனின் திடீர் விஜயம் மற்றும் முடிவுகளுக்கு காரணம் கேட்டு.

அதில் நீண்ட மூச்சு ஒன்றினை உள்ளிழுத்து வெளியிட்ட ஈத்தன்…

“உனக்காக, எனக்காக, ஈஷாக்காக தான் எல்லாம் குறிஞ்சி” என்றான் நிதானமாக வார்த்தைகளை கோர்த்து.

அதற்கு, “இல்லை… நீங்க பொய் சொல்றீங்க… என்னை நீங்க பார்க்காமல் இருந்து இருந்தா‌.‌.. இதெல்லாம் நடந்திருக்காது தானே சமர் சார்…”, என்று மீண்டும் கண்கள் கலங்க கூறிய குறிஞ்சி. 

“எனக்காக நீங்க இதெல்லாம் செய்யனும்னு அவசியம் இல்லை சார். நான் இப்படியே இருந்துக்கறேன். என்னை விட்டுடுங்க. ப்ளீஸ்‌. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நீங்க உங்களை வற்புறுத்திக்க வேண்டாம்” என்று உறுதியாக, ‘பாவம் பார்த்து தரும் வாழ்க்கை எனக்கு வேண்டாம். அதில் என்னால் பொருந்திப்போக முடியாது’ என்ற ரீதியில் குறிஞ்சி பேச…

ஈத்தன் அவளை தடுக்கவில்லை. பேசவிட்டு பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்தான்.

ஈஷாவை தயார் படுத்த மட்டுமில்லை, குறிஞ்சியிடம் எப்படி பேச வேண்டும் என்றும் தயாராக தான் ஈத்தன் நேரம் எடுத்து இருந்தான். அதற்கேற்ப தயாராகியும் தான் வந்து இருந்தான்…

குறிஞ்சி அவள் மனதில் இருப்பதை எல்லாம் முடிந்தளவு தங்க மூலாம் பூசி… அவனிடம் நாசுக்காக இறக்கி வைத்து முடிக்க…

“உனக்காக தான் வந்தேன் குறிஞ்சி. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனா நீ நினைக்கிற மாதிரி கடமைக்காக நான் வரலை. விருப்பத்தோட தான் வந்து இருக்கேன். ட்ரஸ்ட் மீ” என்றவன். “இனி நீயோ, நானோ இதில் இருந்து பின்வாங்க முடியாது. இப்ப பேபிக்கு எல்லாம் தெரியும். And she needs you” என்றவன்…

‘ஈஷா தனக்கு அன்னை இல்லை என்று ஏக்கம் கொண்ட தருணத்தை’ அவளிடம் பகிர நினைத்து, பிறகு தன்னை போலவே அவளும் வருந்துவாள் என்று அதை சொல்லாமல் விட்டுவிட்டான்…

என்ன, ஈத்தன் அவ்வளவு சமாதானம் கூறியும், குறிஞ்சியால் தான் இதையெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… காதல் கொண்ட நெஞ்சம், பதிலுக்கு காதலை மட்டுமே எதிர்பார்த்தது… அதுவும் தன்னாலே அது மலர்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்…

அவளின் எதிர்பார்ப்புகளை உணர்ந்தது போல் ஈத்தன், "Not all bells ring on their own kurunji. Some need to be rung by us. Ultimately, we need to take action to make our dreams a reality and create the life we desire." என்று இருந்தான்.

‘அனைத்து மணிகளும் தானாக ஒலி எழுப்புவதில்லை. சில மணிகளை நாம் தான் ஒலிக்க செய்ய வேண்டும். அதைப்போலவே நம் கனவை நினைவாக்க நாம் தான் செயல்பட வேண்டும், நமக்கு பிடித்த வாழ்க்கையை நாம் தான் உருவாக்க வேண்டும்’ என்ற ஈத்தனின் கூற்று… நிதர்சனத்தை பிரதிபலிக்க…

குறிஞ்சிக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. நொடியில் தீரும் விஷயம் இல்லையே இது‌. அவளின் மனம் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே!

ஈத்தனுமே அவளுடைய நிலையில் தான் நின்று இருந்தான். காதலிக்கின்றானா என்று கேட்டால், நிச்சயம் அவனின் பதில் கூட தற்போதைக்கு மௌனமாக தான் இருக்கும். ஆனால் நிச்சயம் அனைத்தும் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்க போய் தான்… தானாகவே முன்வந்து முதல் மணியை அவனே அடித்து இருந்தான்.

அதே நம்பிக்கையுடன் குறிஞ்சியும் முன்வந்து அடுத்த மணியை அடிக்க வேண்டும். அதற்கு முதல், அந்த நம்பிக்கையை, ஈத்தன் தான் அவளுக்கு தர வேண்டும்.

இருவரும் சேர… நிறைய படிகள் இருவருக்கும் இடையில் இருந்தன…

ஈத்தன் அதையெல்லாம் கடக்க தயாராக இருக்க… குறிஞ்சி தான் கால்கள் நடுங்க நின்ற இடத்திலேயே நின்றுக்கொண்டு இருந்தாள்…
________________________________

🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 


கருத்துகள்

  1. Your writing Makes us feel as if we are watching the scenes lively especially your dialogue delivery is awesome.
    God bless you dear to do more of writing MK

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story