36.2 அந்திப்போர்
சர்ப்ரைஸ் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதை விட, சர்ப்ரைஸ் வர போகிறது என்று தெரிந்துவிட்டதில் தான், குறிஞ்சிக்கு கொஞ்சமும் நிலைக்கொள்ளவில்லை.
என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்தே மண்டை சூடாகிவிடும் போல் இருந்தது.
இதுவரை அவள் சென்றிருக்காத பாதையில் வேறு, கார் வளைந்து நெளிந்து செல்ல…
முந்தானையின் நுனியை போட்டு ஒரு வழி செய்துக்கொண்டு இருந்தாள்.
அவளை சற்று திசை திருப்பும் விதமாக ஈஷா, அன்று காலை தன்னுடைய ஸ்கெட்ச் நோட்புக்கில் வரைந்ததை குறிஞ்சிக்கு பிரித்து காட்ட…
குறிஞ்சியின் கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்திருந்தன.
குறிஞ்சி இருந்த வீட்டின் ஹாலின் ஒருப்பக்கத்தை, அப்படியே வெறும் பென்சில் கொண்டே அவ்வளவு துல்லியமாக ஈஷா வரைந்து வைத்திருந்தாள்…
சுவற்றில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கப்பட்டிருந்த, சாந்தினியின் ஃபிரேம் செய்யப்பட்ட புகைப்படம் தொடங்கி, ஜன்னல் எல்லாம் சேர்த்து, அங்கிருந்த ரோஜா செடி தொட்டிகளை சுற்றி உதிர்ந்திருந்த இதழ்கள் வரை எதையுமே அவள் விடவில்லை…
“ரொம்ப அழகா இருக்கு செல்லமா… எப்படி ஒன்னுவிடாமல் எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணி ஸ்கெட்ச் பண்ணீங்க… சான்சே இல்லைடா மா…” என்று மகளின் திறமையில் வியந்து குறிஞ்சி பாராட்ட.
“தேங்க் யூ அம்மா…” என்று ஈஷா, அவளின் மற்ற பென்சில் ஸ்கெட்ச்களையும் புரட்டிக்காட்ட தொடங்க, ஆர்வமாக ஒவ்வொன்றையும் பார்க்க ஆரம்பித்தாள் குறிஞ்சி.
ஈஷாவிற்கு சிறு வயது முதலே ஆர்ட்(கலைகள்) மேல் தான் அதிக விருப்பம்.
அதை அறிந்து ஈத்தன், அவளுக்கு அதில் எல்லாவற்றிலும் நல்ல பயிற்சி அளித்து இருக்க, பிடித்ததில் சிறந்து விளங்கினாள் ஈஷா.
கார் நின்ற பிறகு தான், செல்லும் இடம் வந்துவிட்டதை உணர்ந்து, குறிஞ்சி தலையை திருப்பி வெளியே பார்த்தாள்…
சுற்றி அனைத்து பக்கமும் ஊதா(purple) நிற மலர்களை மட்டுமே உடையாக அணிந்தப்படி, மலைகள் காட்சிதர…
‘என்ன இது!’ என்று ஒரு கணம் கண்களை சுருக்கி யோசித்தப்படி பார்த்த குறிஞ்சிக்கு, நொடியில் இதயம் முழுவதும் மத்தளம் கொட்டும் சத்தம்…
அவள் நினைத்தது உண்மை தான் என்று நிருபிக்கும் வகையில் அங்கு அழகாய் “நீலக்குறிஞ்சி வேலே(valley)” என்று ஒரு பெயர் பலகையும் வைக்கப்பட்டிருக்க…
குறிஞ்சிக்கு முகத்தில் சிறுப்பிள்ளையாக மகிழ்ச்சியும், ஆர்வமும், ஆசையும் போட்டிப்போட்டன…
அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஈஷாவிற்கு மறுபக்கம் அமர்ந்திருந்த ஈத்தனை, சற்று தலையை உயர்த்தி எட்டி பார்த்தாள்.
அவளின் முகம் காட்டும் ஒவ்வொரு பாவனைகளையும், தன் நீல கண்களில் சேகரித்துக்கொண்டிருந்த ஈத்தன். அவள் விழிகள் அவன் விழிகளுடன் கோர்க்கவும். தன் இரண்டு கண்களையும் புன்னகையுடன் சிமிட்டி, அவளை வெளியே பார்க்கும் படி சைகை செய்ய. அவள் அவன் மீதிருந்த தன் பார்வையை விலக்கவே இல்லை…
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எதையுமே ஈத்தன் மறக்கவில்லை என்பதே அவளுக்கு அப்படி ஒரு உணர்வை தந்தது.
அவள் தன்னுடைய ஆசைகள் என்று அவனிடம் கூறியவற்றில், ‘குறிஞ்சி மலர்களை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும்’ என்ற அவளுடைய ஆசையை மட்டும் விடுத்து, மற்ற ஆசைகள் அனைத்தையும் ஒரே நாளில் நிறைவேற்றி தந்திருந்தவன், இன்று விட்டுவைத்த அந்த ஒன்றையும் நிறைவேற்றிவிட்டு இருந்தான்.
அதற்குள் செக்யூரிட்டிகள் வந்து, இரண்டு பக்கமும் காரின் கதவுகளை இறங்க திறந்துவிட்டு விலகிக்கொள்ள…
குறிஞ்சி மலரின் பாதங்கள், அந்த குறிஞ்சி மலர் வனத்தில் பதிந்து இருந்தன…
அதில், “Finally!” என்ற ஈத்தன், “இந்த அபூர்வமான குறிஞ்சி மலரை பார்க்க… இந்த குறிஞ்சி பூக்களுக்கு வாய்ப்பு கிடைச்சிடுச்சு…” என்று புன்னகையுடன் கூற.
தன் மேனி மொத்தமும் மயில் தோகை வருடிச்சென்றது போல் உணர்ந்தாள் குறிஞ்சி.
அதைத்தொடர்ந்து, “ஹேப்பியா கேர்ள்” என்று ஈத்தன் அவளிடம் கேட்க.
குறிஞ்சி பதில் ஒன்றும் கூறவில்லை.
பதில் கூறும் நிலையை எல்லாம் அவள் எப்பொழுதோ கடந்துவிட்டு இருந்தாள்.
மனம் ஈத்தனின் நீல விழிகளுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தன…
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, எவ்வாறு அவனிடம் தன்னை தொலைத்துவிட்டு நின்று இருந்தாளோ! அதேப்போல் இன்றும் தன்னை தொலைத்துவிட்டு நின்று இருந்தாள்!
அவளின் கண்களுக்கு அங்கிருந்த மலர்கள் எதுவுமே அபூர்வமாக தெரியவில்லை. அவள் கண்முன் இருந்த ஈத்தன் தான் அபூர்வமாக தெரிந்தான்.
அவளின் வாழ்க்கையில் அபூர்வங்கள் அனைத்தையும் நிகழ்த்துபவன் அவன் ஒருவன் தானே!
சுற்றி சிறிது அடர்த்தியாக அஞ்சனம் தீட்டப்பட்ட குறிஞ்சியின் பெரிய விழிகள், உணர்வுகளின் பெருக்கில் லேசாக கலங்கி காணப்பட… அதன் மத்தியில் கருந்திராட்சை பழம் போல் பளிச்சென்னு இருக்கும் அவளுடைய கருவிழிகள் இரண்டும், மையல் கொண்டு மிதந்துக்கொண்டிருந்தன…
அதில், அவளின் கண்களில் மகிழ்ச்சி, கனிவு, கள்ளம், பயம், ஆச்சரியம், நன்றி, தாய்மை, துக்கம் என பல உணர்வுகளை இதுவரை பார்த்து இருந்த ஈத்தன்… இன்று முதல்முறையாக காதலையும் பார்த்துவிட்டு இருந்தான்…
“காட்! என்ன பார்வை இது…” என்று தடுமாறியும் போனான் ஈத்தன்.
அவளின் நெகிழ்ச்சி, அவனையும் தேனாக குழைத்தது.
அப்பொழுது, “வாவ்…!” என்ற ஈஷா, “பேபி! இந்த குறிஞ்சி ஃபிளவர்சோட பர்பிள் கலரும்… அம்மாவோட சேரி கலரும் சேம் பாருங்க…!” என்று சிலாகித்துக்கூற.
சுற்றம் மறந்து நின்றுவிட்டதில் மீண்டும், “காட்…” என்ற ஈத்தன். தன் தலை முடியை அழுந்தக்கோதி தன்னை சமன் செய்த வண்ணம்.
ஈஷாவிற்காக குறிஞ்சியின் ஆடையை பார்த்தான்.
வெள்ளி நிறத்தில் மெல்லிய ஜரி பார்டர் வைத்த, கண்களை உறுத்தாத பர்பிள் வண்ண சாஃப்ட் காட்டன் புடவையை… அதே துணியில் தைத்த முழங்கை(elbow) வரையிலான ஜாக்கெட்டுடன், நேற்றுப்போலவே அழகாக மடிப்பு வைத்து, பாந்தமாக குறிஞ்சி அணிந்திருக்க…
காலை வெயிலில், அவன் கண்களினுள் அழகாய் மின்னினாள்.
அதில் மெல்லிய ரசனை புன்னகையுடன், “எஸ் பேபி. What a coincidence! சேம் கலர்” என்று ஈஷாவிடம் ஈத்தன் கூறினான்.
ஈஷாவிற்கும் ஈத்தனின் மன ஓட்டம் தான். அதில் அவள், “இந்த குறிஞ்சி மலர்களை விட… நம்ம அம்மா தான் ரொம்ப அழகா இருக்காங்க இல்ல பேபி…” என்று கேட்டப்படியே, ஆசையாக குறிஞ்சியின் கையை பற்றிக்கொள்ள…
மகளின் குளுமையான வெண்பஞ்சு ஸ்பரிசத்தில், குறிஞ்சியும் தன்னிலை அடைந்து இருந்தாள்.
அவர்களுடன் வந்த செக்யூரிட்டிகள் தவிர்த்து, அவ்வளவு பெரிய இடத்தில் ஒருவர் கூட இல்லை.
மொத்தமாக ஈத்தன் புக் செய்து இருந்தான்.
தனியார் இடம் அது.
குறிஞ்சி பூ சீசன் வந்தால், எப்பொழுதும் முதல் இரண்டு மாதங்களுக்கு விஐபி புக்கிங், பிரைவேட் ஃபோட்டோ ஷூட், திரைப்பட பாடல்கள் ஷூட் போன்ற பலவற்றிற்கு அதிக விலைக்கு அவ்விடத்தை வாடகைக்கு விடுபவர்கள், அதெல்லாம் முடிந்தப்பிறகு தான் பொது மக்களுக்கான டிக்கெட் கவுண்ட்டரை திறப்பார்கள்.
இங்கு வருவதற்கு முன்னர், ஈத்தன் ஒரு டைரக்டருடன், புது படத்திற்கான இசை அமைப்பு குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது தான், எதிர்ச்சையாக இந்த குறிஞ்சி மலர் சீசன் குறித்து அறிந்து, உடனே முன் பதிவு செய்துவிட்டு இருந்தான்.
இதுப்போல் பல தனியார் இடங்கள் அங்கு கொடைக்கானலில் உண்டு.
வெளிநாடுகளில் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் டியூலிப்(tulip) மலர்களை வைத்து கண்காட்சி நடத்துவது போல் தான் இதையும் நடத்தி வந்தனர்.
சென்ற வாரம் தான் குறிஞ்சியும், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பில் இதைக்குறித்து கேட்டு இருந்தாள். எப்பொழுதும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்கள், அதிசயமாக இந்த முறை சில வருடங்கள் முன்னதாகவே மலர தொடங்கி விட்டதாகவும், அதில் விரைவில் கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலா பயணிகளை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறியிருக்க…
சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை குறிஞ்சிக்கு கழுத்து வரை இருந்தாலும். எங்கே யாரும் தன்னை பார்த்துவிடுவார்களோ, கண்டுப்பிடித்து விடுவார்களோ, என்ற பயத்திலேயே, எதற்கு வம்பு என்று அமைதியாக இருந்துக்கொண்டாள்.
எப்பொழுதும் பள்ளி, குவார்ட்டஸ், பள்ளிக்கு அருகிலேயே இருக்கும் மார்கெட், வார இறுதியில் செல்லும் நெட்வொர்க் வசதி எதுவும் இல்லாத மலைவாசி கிராமம், அதைவிட்டால் முருகன் கோவில்…
அவ்வளவு தான் அவள் புழங்கும் பகுதிகள்.
இதிலும் இடையில் விஷேச அல்லது விடுமுறை தினங்கள் எதுவும் வந்துவிட்டால், தப்பி தவறிக்கூட பள்ளியை விட்டு ஒரு அடியை கூட வெளியே வைக்க மாட்டாள்.
வீடு தேடி அனைத்தும் வந்துவிடும் ஆன்லைன் உலகில்… அவளுக்கு வீட்டில் இருந்தப்படியே வாழ அனைத்துமே சாத்தியமாக தான் இருந்தது!
________________________________
அவ்விடத்திற்கான மலைவாசி கைட்(guide) ஒருவர் வந்து, மூவரையும் பாதுக்காப்பாக அழைத்துச்சென்று, குறிஞ்சி மலர்களை பற்றிய தகவல்களை கூறியப்படியே சுற்றிக் காட்ட…
ஈஷா, தன்னுடைய சிறிய பர்சனல் கேமிராவில் அவளுக்கு பிடித்ததை எல்லாம் பதிவு செய்துக்கொண்டே நடக்க… மேலே ட்ரோன் கேமிராக்களும் தொடர்ந்து அனைத்தையும் காணொளியாக சேமித்துக்கொண்டே பறந்து வந்தன…
சுற்றுலா வழிகாட்டி, “இங்க இருக்கும் எங்க ஆளுங்க எல்லாரும், அந்த காலத்தில் குறிஞ்சி பூ பூக்குறதை வச்சி தான், அவங்களோட வயசை கணக்கு பண்ணுவாங்களாம் சார். எங்களோட குல சாமி வேலப்பனோட கோவில்ல கூட பூ பூக்கும் சமையம் தான் பெரிய திருவிழா நடக்கும்” என்றுக்கூற…
ஈஷா அவரிடம், “ஏன் அங்கிள், இந்த குறிஞ்சி பூ பூக்குறதுக்கு மட்டும் நிறைய வருஷம் ஆகுது” என்று சந்தேகம் கேட்க.
“குறிஞ்சியோட தனி தன்மையே அது தான் பாப்பா. அதோட சர்வைவல்-க்காக அப்படி பண்ணுது. நீண்ட காலம் எடுத்துக்கிட்டு வரும் பொழுது, அதை யாராலும் அழிக்க முடியாது. எல்லா கால மாற்றங்களையும் தாங்கிட்டு, ரொம்ப உறுதியா இந்த பூமியில் தொடர்ந்து குறிஞ்சியோட இனம் வாழும்” என்றவர், “கால சூழலுக்கு ஏற்றப்படி மூன்று வருஷத்தில் தொடங்கி 36 வருஷம் வரை கூட குறிஞ்சி பூ பூக்க நேரம் எடுத்துக்கும்” என்று அவளுக்கு புரியும் படி அனைத்தையும் அவர் விளக்க…
அவர் தரும், அனைத்து விளக்கங்களுக்கும், வெகு பொருத்தமாக ஈத்தனின் ‘குறிஞ்சி மலர்’ நின்று இருந்தாள்.
அவ்விடம் முழுவதையும் வழக்கத்திற்கு மாறாக, அளவுக்கு அதிகமான பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் வட்டமிட, ஈத்தன் அதை குறித்து விசாரித்தான்.
“குறிஞ்சி பூ பூக்கிறதில் மட்டும் அரிதானது இல்லை சார். அதில் இருந்து கிடைக்கும் தேனும் ரொம்ப அரிதானது. நிறைய சத்துக்களும், மருத்துவ பண்புகளும் குறிஞ்சிப்பூவோட தேனுக்கு உண்டு சார். ரொம்ப இனிப்பானதும் கூட. அதான் நிறைய தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும் இங்க சுத்தி வருது சார்” என்று கூற.
“இன்ட்ரெஸ்டிங்” என்ற ஈத்தன்.
குறிஞ்சியிடம், “உன்னை மாதிரியே இந்த ஃபிளவர்சும் ஸ்வீட் அண்ட் கைண்ட் குறிஞ்சி” என்றுக்கூற.
எப்பொழுதும் போல் ‘உங்களை விட அதிகம் இல்லை சார்’ என்று மனதினுள் கூறிக்கொண்டவள், வெளியே ஒரு மென் புன்னகையுடன் மட்டும் நின்று இருந்தாள்.
அப்பொழுது அந்த சுற்றுலா வழிகாட்டி, ஊதா நிறம் மட்டுமில்லாது, அதனுடன் நீல நிறம் கலந்த குறிஞ்சி மலர்களையும் காட்டியப்படியே, “குறிஞ்சி மலர்கள் வச்சி நிறைய கதைகள் கூட எங்க பக்கம் உண்டு சார். தூய்மையான அன்பையும், காதலையும் இந்த மலர்கள் பிரதிபலிப்பதாகவும். தலைவன் தலைவி சேரும் போது வரும் மகிழ்ச்சி, இந்த மலர்கள் பல ஆண்டுகள் கழித்து மொத்தமா பூத்து, மக்களுக்கு கொடுக்கும் மகிழ்ச்சிக்கு இணையானது மாதிரி நிறைய கதைகள், சங்க இலக்கியங்களில் கூட உண்டு…” என்றுக்கூற…
ஈத்தனின் பார்வை இப்பொழுது வெகு அர்த்தமாய் குறிஞ்சியை பார்த்து வைக்க.
குறிஞ்சிக்கு அந்த மலையில் எந்தப்பக்கம் சென்று மறைந்துக்கொள்வது என்று தெரியவில்லை.
பூவை ஆராய்ச்சி செய்பவள் போல் அவளின் பார்வை அங்கும் இங்கும் அலைப்பாய…
அவளின் உடல் மொழிகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்த ஈத்தன்…
அவளின் இடதுக்கரத்தை தன்னுடைய வலது கரத்தால் பிடித்து, அழுத்தமாக சிறை எடுத்துக்கொண்டான்.
அதில் அவள் இன்பமாக அதிர்ந்து திரும்பி அவனை பார்க்க…
“ஈசி கேர்ள்… ஜஸ்ட் உன்னை பார்க்க தானே செய்தேன்… லவ் பத்தி எதுவும் நான் கேட்க கூட இல்லையே…” என்றான் ஈத்தன் ஒரு குறும்பு புன்னகையுடன்.
அதில் குறிஞ்சி, அவன் கையில் இருந்து தன் கரத்தினை விலக்கிக்கொள்ள பார்க்க.
“வொய் கேர்ள்” என்றான் ஈத்தன் மேலும் அவளின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு.
அதற்கு, “நீங்க என்னை கிண்டல் செய்யறீங்க…” என்று காற்றுக்கும் கேட்காத மெல்லிய குரலில் குறிஞ்சி புகார் வாசிக்க.
“ஓ… நோ!” என்று தன் கரத்தினை விலக்கிக்கொண்ட ஈத்தன்.
மறுகணம் அவளின் தோளை சுற்றி தன் கரத்தினை போட்டு, “You're too baby” என்றப்படியே, அவளை தன் தோளுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு இருந்தான்…
அதில் ‘என்ன நான் குழந்தையா’ என்று குறிஞ்சி அவனை நிமிர்ந்து பார்க்க…
அவளின் கண்கள் மூலமே அதை படித்தவன் இதழ்களில் இன்னும் குறும்பு கூடிப்போனது…
“நீ பேபி இல்லைன்னு எனக்கு தெரியும் கேர்ள்” என்றவன் பார்வை, மின்னல் வேகத்தில் அவளின் தாமரை நிற ஈர இதழ்கள் மீது, அவளறியாது படிந்து திரும்ப…
“நீ ரொம்ப கியூட்னு சொன்னேன் கேர்ள்” என்றான்.
அப்பொழுது பூக்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து முடித்திருந்திருந்த ஈஷாவின் கேமிரா. குறிஞ்சியையும், ஈத்தனையும் எடுக்க வந்தது.
இக்கால டரெண்டிற்கு ஏற்றப்படி ஈத்தன், லைட் க்ரினில் பல பாக்கெட்கள் வைத்த, இலகுவான கார்கோ பேன்ட் அணிந்து, அதற்கு பொருத்தமான வெண்ணிற டீ ஷர்ட் மற்றும் வெண்ணிற ஷூவில் வந்து இருக்க…
அது குறிஞ்சியின் உடைக்கு பொருத்தமாகவே இருந்தது.
“அம்மா நீங்க இந்த ஃபிளவரை ஹோல்ட் பண்ணி அதை பாருங்க” என்ற ஈஷா. “பேபி நீங்க அம்மாவை மட்டும் பாருங்க…” என்று ஈத்தனிடம் கூறிவிட்டு… அதே கோணத்தில் வைத்து அனைத்து பக்கமும் இருந்து அவர்களை படம் எடுக்க…
ஈத்தனுக்கு இது பழக்கம் தான் என்பதால், அவன் கேஷ்வலாக, ஈஷா கேட்டப்படி எல்லாம் போஸ் கொடுத்துக்கொண்டு இருக்க, குறிஞ்சி தான் தடுமாறிக்கொண்டு இருந்தாள்.
ஈஷா முன்பு வேறு எதையும் காட்ட முடியாமல் அவள் உள்ளுக்குள் பல்லை கடித்துக்கொண்டு ஈஷா சொல்லும் படி செய்ய.
அவளை மேலும் அவஸ்த்தை பட வைக்கும் வகையில் ஈஷா, “பேபி நீங்க கையை இப்படி வைங்க… அம்மா நீங்க இப்படி வைங்க…” என்று அவர்கள் இருவரின் கையும் சேர்த்து, இதய வடிவம் வருவது போல் வைத்து, புகைப்படம் எடுக்க…
ஈத்தன் அனைத்தையும் புன்னகையுடன் செய்துக்கொண்டு இருந்தான்.
குறிஞ்சி தான் அந்த குளிரிலும் மொத்தமாக வியர்த்துப்போய் இருந்தாள்.
அதை உணர்ந்து ஈத்தன், ஈஷாவிடம் கேமிராவை வாங்கி, அவளையும், குறிஞ்சியையும் வைத்து புகைப்படம் எடுக்க…
குறிஞ்சிக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது.
முட்டிக்கு சற்று மேலே முடியும் வரையிலான வெண்ணிற லேஸ் கவுனில், நீண்ட கூந்தல் முழுவதையும் அப்படியே ஃபிரியாக விட்டபடியே, மேகப்பெண் போல் அவ்வளவு அழகாக இருந்த ஈஷா…
ஈத்தன் சொன்னப்படியே, அங்கிருந்த ஒரு பாறையில் அமர்ந்திருந்த குறிஞ்சியின் மடியில், அவளின் கழுத்தை கட்டியப்படி அமர்ந்திருக்க…
குறிஞ்சியின் இதழ்கள் தானாக மகளின் பஞ்சு கன்னத்தில் மென்மையாக பதிந்து விலக.
ஈத்தன் அனைத்தையும் சேகரித்துக்கொண்டான்.
அதைத்தொடர்ந்து செக்யூரிட்டியை அழைத்த ஈத்தன், அவர்கள் மூவரையும் ஒன்றாக வைத்து புகைப்படம் எடுக்கக்கூற, திருப்தியாக அனைத்தும் முடிந்தது.
மீண்டும் காரில் குறிஞ்சி இருந்த பள்ளிக்கு திரும்பியவர்கள், அங்கிருந்த ஈத்தனின் பிரைவேட் ஜெட்டில் சென்னை விமான நிலையம் நோக்கி பறக்க ஆரம்பித்தார்கள்.
________________________________
🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/06/363.html
கருத்துகள்
கருத்துரையிடுக