36.1 அந்திப்போர்

 அத்தியாயம் -36


குறிஞ்சியை சந்தோஷமாக வரவேற்று, அவளுடன் பேசிக்கொண்டிருந்த மதர்…


‘இனி எப்பொழுதும், ஈத்தன் மற்றும் ஈஷாவுடன் தான் அவள் இருக்க வேண்டும்…’ என்று உரிமையாக அவளுக்கு அன்பு கட்டளையிட.


“கண்டிப்பா மதர்” என்று உறுதியளித்தாள் குறிஞ்சி.


அதைத்தொடர்ந்து, அன்று ஈத்தன் வந்து, அவரிடம் திருமண காணொளியை காண்பித்து, பேசிய அனைத்தையும் அவளுடன் பகிர்ந்துகொண்டவர், அவளின் அன்னையின் உடல்நலம் மற்றும் அவள் பணம் இல்லாது பட்ட கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவிக்க.


“இருக்கட்டும் மதர். பரவாயில்லை” என்றாள். என்றோ நடந்து முடிந்துவிட்டதை யாரால் இனி என்ன செய்ய முடியும்.


அதைத்தொடர்ந்து அன்று, சென்னை கான்வென்ட்டில் இருக்கும் மதருடன், அவரும் ஈத்தனும் பேசியதை கூறியவர்.


ஈத்தன் முதலில் அவளுக்கு வேறொரு திருமணம் செய்ய முடிவெடுத்ததையும்… பிறகு அன்றே அவன் தன் முடிவை கடவுளின் கிருபையால் மாற்றிக்கொண்டதையும் கூற…


‘என்ன எனக்கு வேறொரு திருமணமா!’ என்று முதலில் அதிர்ந்த குறிஞ்சி, இறுதியாக அவர் கூறியதை கேட்டப்பிறகு தான் ஆசுவாசம் அடைந்தாள்.


பின்னே! அப்படியெல்லாம் ஈத்தன் வந்து அவளை வற்புறுத்தியிருந்தால். நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாதே!

________________________________


உடன் குறிஞ்சிக்கு, ஈத்தன் தன் முடிவை உடனே மாற்றிக்கொண்டதற்கான காரணமும் புரிந்தது. அவனே தான் நேற்று அவளிடம் தெளிவாக ‘அவள் அறையை பார்த்ததை எல்லாம்’ கூறிவிட்டு இருந்தானே!


அவள் மீது அவனுக்கு இயற்கையாக காதல் வரவில்லை என்றாலும், அவள் சிறு துரும்பை கூட எடுத்துப்போடாது, அவளின் காதலின் ஆழத்தை உணரும் வாய்ப்பாவது அவனுக்கு அமைந்ததே!


அதிலும், உலகில் ஒருதலை காதல்களின் வெற்றி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், இதுவரை நடந்ததே பெரிய விஷயம் தானே!


அதுமட்டுமின்றி குழந்தைக்காக என்று எல்லாம் இல்லாமல், அவளுக்காகவே அவளை ஈத்தன் ஏற்றுக்கொள்ள நினைத்து முன்வந்தது… 


அவள் மீதான ஈத்தனின் அன்பை உணர்த்த…


எப்பொழுதும் போல், எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்ததை வைத்து ஆறுதல் பட்டுக்கொண்டாள் குறிஞ்சி.

________________________________


அப்பொழுது மதர், ஈத்தன் முதன் முதலில் அவருக்கு அலைப்பேசியில் அழைத்து, ஈஷாவை கான்வென்டில் சேர்ப்பது குறித்து பேசியதை அவளிடம் கூறினார்.


“ஈத்தன் எப்படியோ, யார் துணையும் இல்லாமல், இத்தனை வருஷம், அதுவும் பொண் குழந்தையை தனியா வளர்த்துட்டாப்ல குறிஞ்சி. பணமே இருந்தாலும் அது ஒன்னும் அவ்வளவு சுலபம் கிடையாது. உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை” என்றவர்…


“இனி உன்னோட சம பங்கை கண்டிப்பா நீ குழந்தை வளர்ப்புக்கு தரனும். ஈத்தன் ஆசைப்பட்ட மாதிரியே, உலகத்தில் இருக்கும் நல்லது, கெட்டது எல்லாம் சொல்லிக்கொடுத்து ஈஷாவை நீ பக்குவ படுத்தனும். அருமையான குழந்தை அவ. தாய், தந்தையோட மொத்த அன்பையும் அவ திகட்ட திகட்ட அனுபவிச்சு. உங்க இரண்டு பேரோட அரவணைப்பிலும் அவ சந்தோஷமா வளரனும். அதுதான் நியாயமும் கூட” என்று, அவர்கள் செய்த தவறுகளை எதுவும் தேவையில்லாமல் சுட்டிக்காட்டாது, இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் மதர் கூறி, குறிஞ்சியின் மனதில் பதிய வைத்தார்.


“ஈத்தனையும் நல்லா பார்த்துக்கோ குறிஞ்சி‌. ஈஷா ஈத்தனோட தனிமைக்கு மருந்தா வேண்டும்னா இத்தனை வருஷம் இருந்து இருக்கலாம். ஆனா ஈத்தனோட வாழ்க்கை, அப்படியே தான் வாழாமலே இருக்கு” என்று, அவளுக்கு பல அறிவுரைகளை கூறி…


“இரண்டு பேரும், ஆண்டவர் ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பை சரியா பயன்படுத்தி, வாழ்க்கையை அழகா அமைச்சுக்கோங்க” என்றவர்…


பணியில் இருந்து அவள் முறைப்படி விலகிக்கொள்வதற்கான கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அந்த மாதம் அவள் பணி செய்ததற்கான சம்பளத்தையும் கொடுத்து கணக்கை முடித்து விட.


பெற்ற தாய் போல், உண்மையான அன்பும், அக்கறையும் காட்டும் அவரின் பாதம் தொட்டு குறிஞ்சி ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள…


“உன்னோட நல்ல மனசுக்கு, ஆண்டவர் உனக்கு எல்லாமே நல்லதாகவே தருவார் டா” என்று மீண்டும் ஒருமுறை அவளை வாழ்த்திய மதர்…


இறுதியாக, “ஈஷாக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லைன்னு இனி ஈத்தன் சொல்ல கூடாது குறிஞ்சி. சீக்கிரம் அதை ஈத்தன் நிறுத்திடனும்…”, என்று புன்னகையுடன் கூற…


ஒருசில வினாடிகள் புரியாமல் நின்ற குறிஞ்சி, பிறகு அவர் கூறியதை புரிந்து, ‘ஹையோ’ என்று திகைத்துவிட்டவளுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை…


உடன் நேற்று ஈத்தன் கூறிய ‘உனக்கு சம்மதம்னா நாம கணவன், மனைவியாகவும் வாழலாம்’ கூற்று வேறு ஞாபகம் வந்து… அவளை தடதடக்க செய்ய…


புது கனவில், அவளின் கன்னங்கள் இரண்டும் சூடேறி சிவந்து விட்டு இருந்தன.


அவளின் முகப்பொலிவை திருப்தியாக பார்த்த மதர், “நேரம் கிடைக்கும் போது எனக்கு ஃபோன் பண்ணி பேசு குறிஞ்சி” என்று அவளை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்.

________________________________


பன்னிரண்டு ஆண்டு காலம், அவளுக்கு அடைக்கலம் தந்த அந்த இடத்தின் நினைவுகளை, மனதில் அசைப்போட்டப்படியே தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த குறிஞ்சி…


வெளி கேட்டினை திறந்து உள்ளே செல்ல…


அங்கு வீட்டின் உள்ளே, வாசலுக்கு அருகில் குறிஞ்சி வைத்திருந்த, ஒரு பெரிய ரோஜா செடியில் மலர்ந்திருந்த ஒரு சிகப்பு ரோஜாவினை வருடியப்படியே ஈத்தன், அலைப்பேசியில் ஏதோ முக்கியமாக பேசிக்கொண்டு இருந்தான்…


சிறு சத்தத்திலேயே குறிஞ்சி வருவதை கவனித்துவிட்டவன், “எஸ் எஸ். இன்னும் 10 மினிட்ஸ் தான். கிளம்பிடுவோம். ஒன்றரை மணி நேரத்தில் சென்னை ஏர்போர்ட் ரீச் ஆகிடுவோம்”, என்றவன், “பர்ஃபெக்ட்” என்றுவிட்டு அலைப்பேசியை அணைத்து பாக்கெட்டில் வைக்க.


இன்னமுமே ஹாலிற்கு மத்தியில் தொங்கிக்கொண்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்த ஈஷா, “என்ன பேபி? நாம சென்னை போக போறோம்னு சொல்றீங்க! அம்மாவ சர்ப்ரைஸ் பண்ண போறோம்னு தானே என்கிட்ட சொன்னீங்க? இப்ப ஏன் மாத்தி பேசறீங்க?” என்று ஈத்தனிடம் சத்தமாக ரகசியம் பேச…


ஈத்தன் தன் தலையில் கை வைக்காத குறை தான்.


குறிஞ்சியின் பெரிதாக தொடங்கிவிட்டிருந்த விழிகளே, ஈஷா கூறியதை அவள் கேட்டுவிட்டதை ஈத்தனுக்கு கூறிவிட…


அவளை பார்த்துவிட்டு திரும்பிய ஈத்தன், “சீக்ரெட்ஸ் பத்தி பேசும் போது பொறுமையா பேசனும் டா பேபி” என்று ஈஷாவிடம் கூறியப்படியே…


அவளை நெருங்கி “சர்ப்ரைஸ் பண்ண தான் பேபி போறோம்” என்றான், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.


அதற்கு ஈஷா, “அப்ப ஏன் பேபி நாம சென்னைக்கு கிளம்பறோம்னு ஃபோனில் பொய் சொன்னீங்க?”, என்று அவளால் முடிந்த அளவிற்கு மெல்லமாக சந்தேகம் கேட்க.


வீட்டின் உள்ளே நுழைந்திருந்த குறிஞ்சியின் காதுகளில் விழும் வகையில் தான் அதுவும் இருந்தது.


அதில், “பேபி… இன்னும் மெதுவா பேசுங்க” என்று புன்னகையுடன் கூறிய ஈத்தன்…


“சர்ப்ரைஸ் பண்றதுக்கு முன்னாடி இப்படி தான் பேபி… சந்தேகம் வராத மாதிரி நாம பேசிட்டே இருக்கனும்… அப்ப தான் நம்மளை கண்டுப்பிடிக்க மாட்டாங்க… த்ரிலிங்கா இருக்கும்…” என்று மகளுக்கு சூட்சமங்களை கற்றுக்கொடுத்துவிட்டு… திரும்பி குறிஞ்சியை பார்த்தான்.


அவளோ, ‘ஈத்தன் இப்பொழுது போய் என்ன சர்ப்ரைஸ் செய்ய போகிறான்… அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு…’ என்று யோசித்த வண்ணம் நின்று இருந்தாள்.


அவனுடைய சர்ப்ரைஸ்களின் வீரியம் அறியாதவள் இல்லையே அவள். அவள் தன்னை தொலைத்த இடம் கூட அது தானே!


அதை நினைத்த உடனே அவளுக்குள் சிறு பதட்டம் வந்து தொற்றிக்கொள்ள.


ஈத்தனின் பார்வையை தொடர்ந்து ஈஷாவும், வீட்டின் உள்ளே வந்து நிற்கும் குறிஞ்சியை கவனித்து விட்டாள்…


அதில் அவள், “பேபி! அம்மா”, என்று இம்முறை சரியாக மெல்லமாக ஈத்தனிடம் கிசுகிசுத்தவள்…


“நாம சென்னை கிளம்ப மணியாகிடுச்சுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே பேபி… அம்மா வந்துட்டாங்க பாருங்க… வாங்க வாங்க சென்னைக்கு கிளம்பலாம்…” என்று ஈத்தன் சொல்லிக்கொடுத்த மாதிரியே அவள் பேச…


குறிஞ்சிக்கு இருந்த பதட்டத்தை மீறி புன்னகை வந்திருந்தது…


ஈத்தனுக்கும் தான்…


இருந்தும் அவளின் முயற்சிக்காக, “வெரி குட் ஜாப், பேபி” என்று ஈஷாவின் நெற்றியில் தன் இதழ்களை பதித்து ஈத்தன் விலக்க…


பெருமிதம் கொண்ட ஈஷாவின் முகத்திலும் புன்னகை பூத்து இருந்தது.


அதே நிலைத்த புன்னகையுடன், அவர்கள் மூவரின் பயணமும் எதிர்காலத்தை நோக்கி ஒரே பாதையில் இனிமையாக தொடங்கியது.

________________________________

🔴 அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻 

https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/06/362.html

கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story