28.1 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🪻
அத்தியாயம்-28
ஹாலில் இருந்தது போலவே குறிஞ்சியின் படுக்கை அறைக்குள்ளும் அவ்வளவு சிகப்பு நிற ரோஜா செடிகள்… அது வீடா… இல்லை நர்சரியா என்று தெரியாத அளவிற்கு…
மனதின் இறுக்கத்தை குறைக்க மென்மையாக அதனை வருடிக்கொடுத்த ஈத்தனுக்குள்… அதுக்குறைவதற்கு பதிலாக பழைய நினைவுகள் எல்லாம் ஆர்ப்பரித்துக்கொண்டு மேலெழுந்து அவனை சுழலுக்கும் இழுத்து சென்றன…
அதுவும் இந்த ரோஜாக்களுடன், அவனுக்கும், குறிஞ்சிக்கும், இடையிலான நிகழ்வுகள்…
அன்று,
குறிஞ்சியின் கர்ப்பம் வீட்டில் உறுதியானதும், உடனடியாக அவளுடன் மருத்துவமனைக்கு சென்றும் அதனை உறுதிப்படுத்திக்கொண்டு வந்திருந்த ஈத்தன்… அவளை அதே வீட்டில் தகுந்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வைத்துவிட்டு… ரெக்கார்டிங் வேலையாக உடனேயே அமெரிக்காவிற்கு கிளம்பிவிட்டு இருந்தவன்… வேலை நெருக்கடியால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்தியாவிற்கு திரும்பவில்லை…
திருமணம் மற்றும் அதைத்தொடர்ந்து குழந்தைக்கான சிகிச்சை என்று நீண்ட நாட்கள் இந்தியாவிலேயே அவன் இருந்துவிட்டதால்… அங்கு வேலைகள் அதிகம் தேங்கிவிட்டு இருந்தன…
அதில் முடிக்க முடிந்தவற்றை எல்லாம் முடித்துக் கொடுத்துக்கொண்டு வந்தவன்… முடியாதவற்றிற்கு தமிழ்நாட்டில் நஷ்ட ஈடுடன் சேர்த்து போட்ட ஒப்பந்தங்களை முறியடித்துக்கொண்டது போலவே… அங்கும் முறியடித்துக்கொள்ள பார்க்க…
பலர், “நீங்க எப்ப பாடி தரமுடியுமோ அப்ப வந்து பாடித்தாங்க ஈத்தன். அதுக்கப்புறம் நாங்க படம் ரிலீஸ் வச்சிக்கிறோம்… அக்ரிமெண்ட் அப்படியே இருக்கட்டும்” என்று அவன் என்ன மறுத்தும் கேட்காமல், அவனுக்காக உறுதியாக காத்திருப்பதாக கூறிவிட… மீதமிருந்தவர்களும் அவனை இசை மட்டுமாவது அமைத்து தர கூறி பிடித்துவைத்துக்கொண்டனர்…
அவன் மூலம் லாபத்திற்கு லாபம், புகழிற்கு புகழ், என்று எவ்வளவோ பார்த்தவர்கள் அல்லவா அவர்கள்…!
அதில் இறுதியாக… குறிஞ்சியை பத்தாவது வார செக்கப்பிற்கு அழைத்து செல்லும் நாளுக்கு, முதல் நாள் தான்… அவசர அவசரமாக கிளம்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தான் ஈத்தன்…
விமான நிலையத்தில் இருந்து நேராக குறிஞ்சியிருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு வந்துவிட்டவன்… நடுயிரவு என்பதால், காலை பார்த்துக்கொள்ளலாம் என்று அவளை தொந்தரவு செய்யாமல் தன்னறைக்கு சென்றுவிட்டு இருந்தான்…
சிட்டியை விட்டு நன்கு தள்ளி, கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த ஒரு பெரிய தென்னந்தோப்பிற்கு மத்தியில் தான் அந்த கெஸ்ட் ஹவுஸ் அமைதியாக, அலட்டல் எதுவுமில்லாது அமர்ந்து இருந்தது…
யாருமற்ற… அந்த கடற்கரை சாலை வழியாக… சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரை… ஓய்வு கிடைக்கும் நாட்களில் எல்லாம்… பைக்கிலோ, காரிலோ தானே செல்ஃப் ட்ரைவ் செய்து சென்று வருவது ஈத்தனுக்கு வழக்கம்…
விடாமல் தென்றல் வீசும் அந்த சாலை அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு…
அதில் தான் ஒருசில வருடங்களுக்கு முன்பு, அங்கு விலைக்கு வந்திருந்த அந்த பெரிய தோப்பினை உடனே வாங்கிவிட்டு இருந்தவன்… அவனுக்கு பிடித்த வகையில் அங்கு ஒரு கெஸ்ட் ஹவுஸூம் கட்டிவிட்டு இருந்தான்…
ஆரம்ப நாட்களில் வாராவாரம் அங்கு வந்துவிடுபவன்… வருடம் கூடக்கூட ஏறிவிட்ட வேலை பளுவின் காரணமாக… அந்த இடத்தினையே கிட்டத்தட்ட மறந்துவிட்டு இருந்தான்…
இப்பொழுது தான் மீண்டும் அங்கு தங்க நேரம் அமைந்து இருந்தது…
_______________________________
எப்பொழுதும் போல் காலை நேரத்தில் எழுந்துவிட்டிருந்த ஈத்தன்… தினமும் செய்யும் உடற்பயிற்சி மற்றும் யோகாவை முடித்துக்கொண்டு… உள்ளே வர…
இன்னுமே குறிஞ்சியை காணோம்…
முன்பு ஈத்தன் இருந்த நாட்களில்… அவன் காலை எழுந்து வரும் பொழுதே… அவள் குளித்து முடித்து தயாராக அமர்ந்து இருப்பாள்…
அதில் மணியை பார்த்த ஈத்தன் சரியென்று, அவனுக்காக மேஜையில் தயாராக வைக்கப்பட்டிருந்த காலை டீ-க்கு தேவையான பொருட்களை எடுத்து… தனக்கான டீயினை தயாரித்துக்கொண்டு… நியூஸ் பார்த்தப்படியே குடிக்க ஆரம்பித்தான்…
அவ்வீட்டில் தற்போதைக்கு வேலைக்கு இருக்கும் யாருமே நம் நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது…
ரஷ்யாவில் இருந்து செக்யூரிட்டிக்கும், ஜப்பான் மற்றும் ஜெர்மனில் இருந்து வீட்டு வேலை மற்றும் பராமரிப்பிற்கும் என்றும் மொத்தமே மூன்று ஆட்களை தான் ஈத்தன் எடுத்து இருந்தான்…
மூவருமே ஆண்கள் தான்…
அங்கேயே அமைந்திருந்த அவுட் ஹவுஸ்களில் தான் அவர்கள் மூவரும் தங்கி இருந்தனர்.
அவசியமில்லாது வீட்டிற்குள் நடமாட அவர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது…
வீட்டிற்கு தேவையான சமையல் எல்லாம் கூட அங்கு அவுட் ஹவுஸில் தான் சமைக்கப்பட்டு… இங்கு எடுத்துவந்து வேளா வேளைக்கு வைக்கப்படும்…
அதேப்போல் குறிஞ்சி உணவு உண்ணும் அச்சிறு இடைவெளியிலேயே, மொத்த வீடும் பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்டு விடும்…
அவளுக்கு ஏதேனும் தேவையெனில் அங்கிருக்கும் யாரிடமும் சென்று அவள் பேச முற்பட்டாலே போதும்… ஈத்தனுக்கோ இல்லை ராகவ்விற்கோ தொலைப்பேசியில் உடனடியாக அழைத்து… அவளிடம் பேசக்கூறி கொடுத்துவிட்டு விலகிக்கொள்வார்கள்…
அவள் அவளின் தேவையை ஈத்தன் இல்லை ராகவ்விடம் தான் கூற முடியும்… பிறகு அவர்கள் அதனை வீட்டு ஆட்களுக்கு கூறி அதன் பிறகே எதுவாக இருந்தாலும் நிறைவேற்றப்படும்…
கிட்டத்தட்ட தங்க கூண்டில் வைப்பது போல் தான் குறிஞ்சியினை ஈத்தன் வைத்து இருந்தான்…
அவன் உடன் இருந்தவரை இந்த கெடுபிடிகளை எல்லாம் பெரிதாக உணராது இருந்த குறிஞ்சிக்கு… அவன் அமெரிக்கா கிளம்பிய பிறகு தான் அது உரைத்தது…
ஆனால் அதனால் பெரிதாக எந்த மாற்றமும் அவளிடம் இல்லை…
நல்லதுக்கு தான் என்று நினைத்துக்கொண்டவள்…
அமைதியாக தன் வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டு, அவர்கள் சமைத்து வைக்கும் உணவுகளை உண்டுவிட்டு… அறைக்குள்ளே இருந்துக்கொள்வாள்…
புத்தகம்… தொலைக்காட்சி… தோட்டம்… போன்று பல பொழுதுப்போக்குகள் அங்கு இருந்தாலும் எதையும் அவள் தொட்டது கிடையாது…
நீண்ட நெடிய காலம் உழைப்பிலேயே தேய்ந்த அவளின் உடல், கிடைத்த முதல் ஓய்வை, அமைதியாகவே கழிக்க கூறிவிட்டு இருந்தது…
இதில் சாந்தினியை பிரிந்துவந்த கவலை மட்டுமே அவளிடம் இருந்தது… அதுக்கூட திருமணம் முடித்து வந்த முதல் இரண்டு நாட்கள் மட்டுமே…
அதன் பிறகு அந்த கவலை கூட அவளிடம் இல்லை…
எப்படி தான் அவளின் அந்த கவலையை ஈத்தன் உணர்ந்திருந்தானோ தெரியாது… தினமும் மாலை ஆறு மணிக்கு, அவனுடைய ஃபோனின் மூலம் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, அவன் முன்னிலையில் சாந்தினியுடன் குறிஞ்சியினை வீடியோ காலில் பேச வைத்திருந்தவன்… அவன் உடன் இல்லாத பொழுதும் செக்யூரிட்டி மூலம் அதை தொடர ஏற்பாடு செய்துவிட்டே சென்று இருக்க… வேறென்ன வேண்டும் குறிஞ்சிக்கு… நிம்மதியாகவே அங்கு இருந்தாள்…
_______________________________
குளித்து முடித்த ஈத்தன்… மருத்துவமனைக்கு கிளம்புவதற்கு ஏதுவாக… வெளிர் சாம்பல் வண்ண பேன்ட் மற்றும் கருநீல வண்ணத்திலான ஃபார்மல் ஷர்ட் அணிந்து… நேர்த்தியாக தயாராகி வெளியே வர…
குறிஞ்சியை இன்னுமே காணோம்…
அவளுக்கென்று காலை குடிக்க தயாராக வைத்திருந்த ஜூஸ் கூட இன்னும் தொடாமல் அப்படியே அங்கு இருந்ததில் மணியை பார்த்த ஈத்தன்…
“காட்… இன்னும் 30 மினிட்ஸ்ல ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பனும்… நேத்து கூட இந்த பொண்ணுக்கிட்ட ஃபோன் பேசும் போது சொல்லி இருந்தேனே… ஏன் இன்னும் தயாராகி வரலை…” என்று எண்ணியப்படியே… அவளுக்கான ஜூஸை கையில் எடுத்துக்கொண்டு சென்று… குறிஞ்சியின் அறைக்கதவை தட்டினான் ஈத்தன்…
இன்று மருத்துவர் குழந்தையின் இதயத்துடிப்பை பார்த்துவிட்டு, குழந்தை கர்பப்பையினுள் சரியான இடத்தில் ஆரோக்கியமாக வளர்கின்றாத என்பதையும் ஸ்கேனில் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்க… ஈத்தனுக்குள் அந்த பதட்டம் அதிகமாக இருந்தது… சீக்கிரம் மருத்துவரை பார்த்துவிட்டால் பரவாயில்லை என்ற மனநிலை…
அதில் மீண்டும் குறிஞ்சியின் அறைக்கதவை ஈத்தன் தட்ட…
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, இன்னுமே தூக்கம் கலையாத கண்களுடன், எழுந்து வந்து ஒருவழியாக கதவை திறந்த குறிஞ்சியை பார்த்த ஈத்தன்…
“என்ன ஆச்சு கேர்ள்… உடம்புக்கு எதுவும் முடியலையா… நைட் சரியா தூங்கலையா நீ…” என்று வரிசையாக விசாரிக்க…
“இல்லைங்களே சார்… நைட் சீக்கிரமே படுத்துட்டனே… ஏன்”, என்றவளுக்கு விடிந்து பல மணிநேரம் ஆனதே இன்னும் உரைக்கவில்லை…
தூக்கம் தூக்கமாக வந்தது…
அதில் லேசாக கதவிலேயை சாய்ந்து நின்றவள்…
அந்நிலையிலும் “நீங்க எப்படி சார் இருக்கீங்க…” என்று விசாரித்தாள்…
அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஈத்தன்…
“நான் நல்லா இருக்கேன் கேர்ள்…” என்றவன்… “நீதான் ரொம்ப டல்லா தெரியுற… ஃபீவர் எதுவும் இருக்கா…” என்றப்படியே அவளின் நெற்றியில் தன் கரத்தினை வைத்து பார்த்தான்…
ஜுரம் எதுவும் அடிப்பது போல் தெரியவில்லை…
அதில் சரியென்று, “இந்த ஜூஸை முதலில் குடி குறிஞ்சி…” என்றவன்… அவளை அப்படியே கைப்பற்றி அழைத்துச்சென்று ஹாலில் அமர வைத்து… ஆரஞ்சு பழரசம் அடங்கிய அந்த கண்ணாடி குவளையை அவள் கையில் தந்தான்…
அதில் “ஐயோ எதுக்கு சார் நீங்க இதெல்லாம் செய்துகிட்டு” என்ற குறிஞ்சி… குவளையில் இருந்து வந்த ஆரஞ்சின் புளிப்பின் மணத்தில் கவரப்பட்டு… முதல் வாய் குடித்தவள்… பிறகு அதனை நிறுத்த முடியாது வேகமாக குடித்து முடித்துவிட…
அவள் அருந்திய வேகத்தை பார்த்து, “நைட் சரியா சாப்பிடலையா கேர்ள்…” என்று ஈத்தன் விசாரித்தான்…
“இல்லை சார்… நல்லா சாப்பிட்டேன்… பால் கூட குடிச்சிட்டு தான் படுத்தேன்…” என்றவளுக்கு… இப்பொழுது தான் கண்களையே நன்றாக திறக்க முடிந்தது…
“குட்…” என்ற ஈத்தன்… தன் கைக்கடிகாரத்தை திருப்பி மணியை பார்த்துவிட்டு… “இன்னும் டென் மினிட்ஸ்ல நாம இங்கிருந்து கிளம்பினால் தான் ஹாஸ்பிடலுக்கு கரெக்ட் டைமில் ரீச் ஆக முடியும்… பட், அதுக்குள்ளே உன்னால் கிளம்ப முடியாதில்ல… நான் அப்பாயின்மெண்ட் டைம் மாத்த சொல்லிடறேன்”, என்றான்…
அதில், அப்பொழுது தான் அங்கு ஹாலில் பெரியதாக மாட்டியிருந்த கடிகாரத்தில் திரும்பி மணியை பார்த்து “அச்சோ சார்… மணி ஒன்பதா…” என்று பதறி போன குறிஞ்சி…
“சாரி சார்… சாரி… நான் எப்படி இவ்வளோ நேரம் தூங்கனேன் தெரியலை…” என்றவளுக்கு அப்பொழுது தான் அவன் தயாராக இருப்பது புரிந்தது. அதில், “நான் சீக்கிரம் ரெடியாகி வந்துடறேன்… எனக்கு அஞ்சு நிமிஷம் போதும்… மன்னிச்சுடுங்க… நாம கிளம்பிடலாம்” என்று வேகமாக எழுந்துக்கொள்ள…
“ஷ் குறிஞ்சி… பொறுமை பொறுமை… உள்ளே பேபி இருக்கில்ல…” என்று ஈத்தன் கூறிமுடிப்பதற்குள்…
சற்று முன்பு குறிஞ்சி குடித்து முடித்த பழரசம் மொத்தமாக திரும்பி வந்து ஈத்தனை நனைத்து இருந்தது…
🔴அடுத்த பாகம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக