30.6 அந்திப்போர் 🪻
கண்ணை மூடி திறப்பதற்குள் ஆறு மாதங்கள் ஓடிவிட்டு இருந்தது…
ஈஷாவை தன் அறையில் இருக்கும் குளியலறையில்… குழந்தைக்களுக்கான பாத் டப்பிள் வைத்து… விளையாட்டு காட்டியப்படியே குளிக்க வைத்த ஈத்தன்…
அவளை தூக்கி வந்து நன்கு துடைத்துவிட்டு, உடலில் பாடி லோஷன் தடவி, டயாப்பர் போட்டு, அழகான காட்டன் கவுன் ஒன்றை அணிவித்து… தூக்கிக்கொண்டு குறிஞ்சியிடம் வந்தான்…
குறிஞ்சி, குழந்தையின் தலையில் இருக்கும் பஞ்சு போன்ற முடியினை சீவிவிட்டு… அதனை எல்லாம் ஒன்று சேர்த்து… தென்னை மரம் போல் நடுவில் ஒரு சிண்டினை சிறிதாக போட்டு விட…
ஈஷா அதனை தொட்டு தொட்டு பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்…
அதில், “என் அழகு பேபி…” என்று அவளை தூக்கிக்கொஞ்ச ஆரம்பித்துவிட்டிருந்தான் ஈத்தன்…
தினமும் நடக்கும் சங்கதி தான் அது…
சளைக்காமல் கொஞ்சிக்கொண்டே இருப்பான்…
அதைப்பார்க்கும் குறிஞ்சியும்…
“உங்க பேபி மட்டும் அழகு இல்லை சார். நீங்களும் தான் ரொம்ப அழகு…” என்று சொல்லிக்கொள்வாள்… மனதினுள் தான்…
இன்றும் அவ்வாறே மனதினுள் சொல்லிக்கொண்டவள்… மனதின் உள்ளே எங்கோ ஒரு மூலையில் விண் விண் என்று ஒரு வலி…
இன்னும் ஒருவாரம் தான்… அவர்களுடன் அவள்…
அதன்பிறகு…
அவர்கள் இருவரும் வானத்தில் இருக்கும் நட்சத்திரம்… அவள் அவர்களை அண்ணார்ந்து பார்க்கும் கோடியில் ஒருத்தி…
என்னென்னவோ சிந்தனையில் அவள் இருக்க…
அதற்குள் சிரித்து சிரித்தே களைத்துப்போன ஈஷாக்குட்டிக்கு பசியெடுக்க ஆரம்பித்துவிட்டு இருந்தது…
சினுங்கியப்படியே குறிஞ்சியிடம் தாவ பார்த்தாள்…
ஈத்தனும் உடனே அவளிடம் குழந்தையை தந்துவிட…
அறைக்குள் தூக்கிச்சென்று ஈஷாவிற்கு பசியாற்ற ஆரம்பத்தாள் குறிஞ்சி… அந்த வீட்டில் அவளுக்கு இருக்கும் ஒரே வேலை அதுதான்…
மற்றப்படி அனைத்தையும் ஈத்தனே பார்த்துக்கொள்வான்…
முதல் நாள் தொடங்கியே குழந்தை தூங்குவது கூட அவனுடன் தான்…
தாய் போலவே… குழந்தை தூங்கும் போது தூங்கிக்கொள்வான்… குழந்தை எழும் போது அவருடனே எழுந்துக்கொள்வான்…
எந்த இடத்திலேயே அவன் ஈஷாவை விட்டுக்கொடுத்தில்லை…
கேட்டு கேட்டு அனைத்தையும் கற்றுக்கொண்டு இருந்தான்…
ஈஷா பால் குடித்தப்படியே… குறிஞ்சியின் மார்பில் தவழும்… கற்கள் பதித்த மாங்கல்யத்தை பிடித்து விளையாட…
“என் பூக்குட்டிக்கு எப்பவும் விளையாட்டு தான்” என்று சன்னமாக கூறியவள்…
“அப்பா செல்லமா பட்டுமா நீங்க… அப்பாவோட அழகுக்குட்டியா நீங்க… அப்பாவோட லட்டு பொண்ணா நீங்க…” என்று கொஞ்ச…
பால் குடிப்பதை நிறுத்திவிட்டு… ஈத்தன் போலவே தன் கண்களை சிமிட்டி, “ங்கா… ங்கா…” என்று ஈஷா பதில் கூற…
தன்னை மீறி, “என் அம்மா டா நீ” என்று குழந்தையை அப்படியே வாரி அணைத்துக்கொண்ட குறிஞ்சி…
பிறகு அதை உணர்ந்து, சட்டென்று குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள்…
அவளின் உடல் சூட்டிற்கோ… ஸ்பரிசத்திற்கோ குழந்தை நன்கு பழகிவிட்டாள்… நாளை அவள் இல்லாத பொழுது தேடுவாள் என்பதால்… குறிஞ்சி அப்படி செய்வதில்லை…
நெஞ்சம் முழுவதும் ஆசையிருந்தாலும்… குழந்தையின் நன்மைக்காகவென்று அடக்கிக்கொள்வாள்…
ஈத்தனிடம் தூக்கி வந்து குழந்தையை தந்த குறிஞ்சி… மீண்டும் அறைக்குள் சென்று புகுந்துக்கொண்டாள்…
குழந்தை குடித்தது போக மீதம் இருந்த ஏராளமான தாய் பாலை பிரெஸ்ட் மில்க் பம்ப் மெஷின் மூலம் சேகரித்து, ஒரு காற்று புகாதவாறு கவரில் சேமித்து, அதற்கென்றே அவள் அறையில் தனியாக வாங்கி வைத்திருக்கும் பிரத்தியேக குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுவாள்.
நவீன உலகின் பயனுள்ள முன்னேற்றங்களில் அதுவும் ஒன்று…
ஆறு மாதத்தோடு அவள் சென்றுவிட வேண்டும் என்றாலும்… குழந்தை ஒரு வயது வரை தாய் பாலை தான் குடிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தவள்…
மெஷின் தரும் வலிகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு… இரட்டை குழந்தைக்கு ஒரே நேரத்தில் பசியாற்றுவது போல்… தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைத்தாள்…
குழந்தைக்கு என்று அவளால் செய்ய முடிந்தது அது தான்…
அன்றும் அவ்வாறு செய்துவிட்டு அறைக்குள் இருந்து வெளிவந்த குறிஞ்சியை வரவேற்றது… ஹால் முழுவதும் நிறைந்திருந்த ஈஷாவின் இடைவிடாத சிரிப்பு சத்தமும்… அவளுடைய தந்தை ஈத்தனின் சிரிப்பு சத்தமும் தான்…
தரையில் போட்டிருந்த படுக்கையில், சுற்றி தலையணைகள் அடுக்கப்பட்டு இருக்க… அதற்கு மத்தியில் அமர்ந்திருந்த ஈஷாவின் மடியில் ஈத்தன் தன் தலையினை அவளுக்கு வலிக்காத வகையில் லேசாக வைத்து படுத்துக்கொண்டு இருந்தவன்…
தன் முகத்தினை இருக்கரம் கொண்டு மூடிக்கொண்டு, “பேபியோட டாடி எங்க… டாடி எங்க… கண்டு பிடிங்க” என்று கேட்க…
அவனுடைய கையை பற்றி விலக்க முற்பட்டப்படியே… வாயில் இரண்டு பக்கமும் எச்சில் ஆறாய் ஊற்ற… தன் பொக்கை வாயை முழுவதுமாக காட்டியப்படி சிரித்து கொண்டிருந்தாள் ஈஷா…
ஒருசில வினாடிகள், அவளை அப்படியே விட்ட ஈத்தன்….
“பிக் அ ப்பூ(peekaboo)” என்று தன் கைகளை சட்டென்று விலக்க…
அப்படியே அவன் முகம் மீது சிரித்தப்படியே கவிழ்ந்து படுத்த ஈஷா… அவன் முகம் முழுவதும், தன் பல் இல்லாத வாயால் கடித்தவள்…
எப்பொழுதும் அவளை ஈர்க்கும் அவனின் நீல கண்களை போட்டு மிழுங்க பார்க்க…
“நோ பேபி… நோ… டாடி பாவம்” என்று பொய்யாக அலறியப்படியே…
ஈத்தன் சொர்க்கத்தில் மிதந்துக்கொண்டிருந்தான்…
அந்நேரம் ஈத்தன் முகத்தில் கொட்டிக்கிடந்த அந்த அளவில்லாத மகிழ்ச்சி… குறிஞ்சிக்கு அவள் வந்ததின் நோக்கம்… முடிவடைந்ததை காட்ட…
நிறைவாக…
அவர்கள் இருவரும் இதேப்போல் என்றும் மகிழ்வுடன் இணைந்து இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன்…
இருவருக்கும் தன் கரத்தால் தூரம் இருந்தே நெட்டு முறித்தவள்… அவர்கள் இருவரையும் தன் கண்களுக்குள் சிறையெடுத்துக்கொள்ள…
சிறிது நேரத்தில், தன் தோளில் ஈஷாவை தூக்கி படுக்க வைத்த ஈத்தன்…
Hush little one, with eyes so bright,
Daddy's here, to sing through the day.
Sleep tight, my darling, it's time to rest,
May your sleep be peaceful, and your heart be blessed.
I'll be here, watching over you,
Forever and always, my love for you is true.
என்று மகளுக்காக அவன் தன் தேன்குரலில் தாலாட்டு பாட…
எப்பொழுதோ தூங்கிவிட்டு இருந்தாள் ஈஷா…
அவளை அப்படியே படுக்கையில் ஈத்தன் படுக்க வைத்துவிட்டு நிமிர…
குறிஞ்சி அவனுக்காக டீ கலந்து எடுத்து வந்து தந்து இருந்தாள்…
இதுப்போல் எத்தனையோ நிகழ்வுகள் அவர்கள் இருவருக்கும் இடையே உண்டு…
நினைக்க நினைக்க ஊற்றுப்போல் வந்துக்கொண்டே இருக்கும்…
அப்படி தான் இன்று, ஈத்தனின் அடிமனதில் இருந்து குறிஞ்சி ஊற்றாக கிளம்பி, அவனை மூழ்கடித்துக்கொண்டு இருந்தாள்…
அதுவும் இத்தனை வருடங்களாக அவன் அவளின் அர்பணிப்பு என்று நினைத்தவையெல்லாம்….
இல்லவே இல்லை… அதெல்லாம் அவளின் வலிகள்… என்று அவன் கண் முன்பு இருந்தவையெல்லாம் அவனிடம் சத்தியம் செய்து கூற கூற…
மெல்ல உடைய தொடங்கி இருந்த ஈத்தன்…
இறுதியில் அங்கிருந்த ஈஷாவின் வாயில் வைக்கும் ரப்பர், அவளின் சின்ன கையுறை, காலுறையை பார்த்து… மொத்தமாக உடைந்துவிட்டு இருந்தான்…
‘இனி நீங்க அழக்கூடாது’ என்று அவனுக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டளை போட்டவள்… இன்று மீண்டும் அவளே அழ வைத்துவிட்டு இருந்தாள்…
குறிஞ்சியின் தாய்மை உணர்வுகளை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை…
அதிலும் அவ்வளவு புதிய உடைகள்… ஈஷாவிற்கு ஒருவயதில் ஆரம்பித்து இப்பொழுது இருக்கும் பன்னிரண்டு வயது வரை என்று வாங்கி குவித்து வைத்திருந்தாள் குறிஞ்சி…
சின்ன சின்ன ஹேர் கிளிப்கள் தொடங்கி அனைத்துமே இருந்தது…
என்னமாதிரியான வாழ்க்கையை அவள் கடந்த பன்னிரண்டு வருடங்களும் வாழ்ந்திருப்பாள்… நினைத்துப் பார்க்கவே முடியவில்லை ஈத்தனால்…
இதயத்தில் யாரோ மிகப்பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் இருந்தது.
பொத்தென்று அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
தொண்டை எல்லாம் பயங்கரமாக அடைத்துக்கொண்டது… எச்சில் கூட்டி விழுங்க முற்பட தொண்டையில் ஒரே வலி…
தன்னுடைய இளமை மொத்தத்தையும் அவனுக்காக குறிஞ்சி தூக்கி கொடுத்துவிட்டு இருந்தாள்.
மொட்டானவள், மெல்லிய தென்றலின் தீண்டலில் மலர்ந்து மணம் பரப்பாமலேயே… கன்னியாகவே கனிந்துவிட்டு இருந்தாள்.
“தப்பு பண்ணிட்ட ஈத்தன்…” என்று தன்னையே ஈத்தன் நிந்தித்துக்கொண்டான்…
அதுவும் அவள் உபயோக படுத்தாமல் வைத்திருக்கும் அவனின் கையெழுத்து அடங்கிய செக் பேப்பர்… அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தது…
அவள் கிளம்புவதற்கு முதல் நாள் ஈத்தன் அவளுக்கு கொடுத்தது அது…
அவள் செய்தவை அனைத்திற்கும் விலையாக…
🔴அடுத்த அத்தியாயம் லிங்க் கீழே
கருத்துகள்
கருத்துரையிடுக