29.3 அந்திப்போர் 🎼🪻😘
இன்றோ, அவன் அவளுக்கு தந்திருந்த அவனின் பேன்ட் சட்டைகள் அனைத்தும் ஒன்றுவிடாமல் அழகாக அயர்ன் செய்யப்பட்டு… அவளுக்கு அன்று அவன் வாங்கி தந்திருந்த சில உடைகளுடன் அங்கு அடுக்கப்பட்டு இருந்தன…
அத்துடனா அவளுக்கு அவன் வாங்கி கொடுத்தவைகள் நின்று இருந்தது…
கொஞ்சம் கொஞ்சமாக அவளை அவளிடம் இருந்து எடுத்தவைகள் ஏராளமானதாகுமே…
எப்படியெல்லாம் ஒரு ஆண் நடந்துக்கொண்டால்… ஒரு பெண்ணுக்கு பிடிக்குமோ… அப்படியெல்லாம் அவளிடம் கல்நெஞ்சக்காரன் அவன் நடந்துக்கொண்டிருக்க…
ஏற்கனவே அன்பின் பால் எளிதில் சாயிந்துவிடும் பலகீனம் உள்ளவள்… மேலும் கர்ப்பக்கால ஹார்மோன்களின் ஆட்டத்தில் பலகீனமடைந்து… மொத்தமாக அவனிடம் தன்னை தோற்றுவிட்டு இருந்தாள்…
அதிலும் பதின்ம வயதையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடந்திருந்த, வெறும் இருபத்தியோரு வயது பெண்ணிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்…
அன்று, எட்டாக்கனியான அவன் மீதான தன் நேசத்தை உணர்ந்த நொடி குறிஞ்சி… எப்படியெல்லாம் துடிதுடித்து போய்விட்டு இருந்தாள்…
அதையெல்லாம் இன்று உணர ஆரம்பித்திருந்த ஈத்தன்… அவளுக்கு இணையாக இன்று துடிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தான்…
ஏழாம் மாத முடிவில் அடுத்த மருத்துவ பரிசோதனைக்கு என்று ஈத்தனும், குறிஞ்சியும் அன்று சென்று வந்திருந்தனர்.
மருத்துவர், “குழந்தை நல்லா ஆரோக்கியமா இருக்கு ஈத்தன். எடை, பொசிஷன் எல்லாம் திருப்தி… இனி பெருசா எந்த பயமும் கிடையாது…” என்றவர்…
குறிஞ்சி உடையினை திருத்திக்கொண்டு வெளியே வர எடுத்துக்கொண்டிருந்த சிறு இடைவெளியில்…
“இதுக்கு அப்புறம் உங்க மனைவியோட மனநிலையை தான் நீங்க நல்லா வச்சிக்கனும்… ஈசியா பிபி அதிகம் ஆகிடும்… பிறகு டெலிவரி அவங்களுக்கு கஷ்டமாகிடும்…”, என்றிருந்தவர்… உடன், “அவங்களோட ஒவ்வொரு சந்தோஷமும்… குழந்தையோட மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்… அதேமாதிரி சின்ன மன அழுத்தம் கூட கூடாது… ஸ்ட்ரெஸ் ஹார்மோன் குழந்தையையும் ஸ்ட்ரெஸ் பண்ணிடும்…” என்றுக்கூறி அனுப்பியிருக்க…
அந்த வாரம் ஒருநாள் இரவு அவளுடன் மொட்டை மாடியில் நடந்தப்படியே பேசிக்கொண்டிருந்த ஈத்தன்…
“குறிஞ்சி மலருக்கு… இந்த உலகத்தில் என்ன ரொம்ப பிடிக்கும்…?” என்று பேச்சு வாக்கில் கேட்டு இருந்தான்…
அவளும், “என் அம்மாவை தான் சார் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…” என்று கூறியிருந்தாள்…
அவன் எதிர்ப்பார்த்த பதில் அது இல்லை என்பதால்… அதைத்தொடர்ந்து ஈத்தன், வேறெல்லாம் பிடிக்கும் என்று அவளிடம் போட்டு வாங்க…
அவளோ இதுவரை அப்படியாரும் அவளிடம் கேட்டது இல்லை என்பதால்… தனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று முதல் முறை யோசித்து யோசித்து… சிறு பிள்ளையாக அவனிடம் ஒவ்வொன்றாக பட்டியலிட தொடங்கிவிட்டு இருந்தாள்…
“பஸ்ல ஜன்னல் கம்பி மேல சாய்ஞ்சு உட்கார்ந்து ரொம்ப தூரம் நிற்காமல் லாங்க் ட்ராவல்… ஜிலு ஜில்லுன்னு முகத்தில் காத்தடிக்க… வேடிக்கை பார்த்துட்டே போகனும் சார்…
அப்புறம் யாருமே இல்லாத அமைதியான கோவில்ல… எந்த இடைஞ்சலும் இல்லாமல் ரொம்ப நேரம் கண்ணை மூடி உட்கார்ந்து சாமிக்கூட பேசிட்டே இருக்கனும்…”, என்றவள்…
தொடர்ந்து, “அப்புறம் எனக்கு… குறிஞ்சி பூவை ஒருத்தடவையாச்சும் எப்படி இருக்கும்னு நேரில் பார்க்கனும்னு ஆசை சார்… அம்மா சொல்லுவாங்க குறிஞ்சி பூ பூத்த வருஷம் தான் நான் பிறந்ததால் எனக்கு அந்த பேரை டாக்டர் வச்சாங்கன்னு…
அப்புறம் எனக்கு நிறைய சலங்கை வச்ச கொலுசு போட்டு அந்த சத்தத்தை கேட்டப்படியே நடக்கனும்…
ரொம்ப ரொம்ப நீளமா முடி வளர்க்கனும்… அதில் நிறைய மைசூர் மல்லிப்பூ வாசனையா வச்சிக்கனும்…”
என்று லிஸ்ட் போய்கொண்டே இருக்க…
அவளின் மிகவும் சின்ன சின்ன ஆசைகளில், பெரிதாக ஆச்சரியமடைந்துப்போன ஈத்தன்… சிறு புன்னகையுடன்…
“சாப்பிடறதுல என்ன ஃபேவரைட்னு நீ சொல்லவே இல்லை கேர்ள்” என்று கேட்க…
“அச்சோ அதை சொல்லாமல் விட்டுட்டேனா…” என்றவள்…
“எனக்கு செம சூடா கொதிக்க கொதிக்க ஃபில்டர் காஃபி… அதை கடைசி சொட்டு வரை ஊதி ஊதி குடிக்க பிடிக்கும் சார்… உங்க வீட்ல கொடுத்தாங்களே அந்த மாதிரி…
அதேமாதிரி மெல்லிசா மொறு மொறு தோசை… அது மேல நிறைய பச்சை மிளகாய் போட்ட பச்சை பயிறு சாம்பார் தண்ணியா வச்சி ஊத்தி சாப்பிடனும்… என் அம்மா சூப்பரா பண்ணுவாங்க…”, என்றவளுக்கு அப்பொழுதே நாக்கில் எச்சில் ஊற…
ஈத்தனுக்கோ அவள் விவரித்த அழகில் காரம் தாங்காமல் காதிலிருந்து புகை பறந்து இருந்தது…
அதில், “இந்த ஸ்வீட்ஸ்லாம் எதுவும் உனக்கு பிடிக்காத கேர்ள்”, என்று ஈத்தன் கேட்க…
“ஸ்வீட்டா… ம்…”, என்று யோசித்தவள்…
“எங்க ஹாஸ்பிடல்ல ஒருவாட்டி ஒரு லட்டு கொடுத்தாங்க சார்… வித்யாசமா இருந்துச்சு… அது பேர் தான் மறந்து போச்சு… எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது…”, என்றவள்…
“ஆரஞ்சு கலர்ல… ரொம்ப சின்ன சின்ன பூந்தியால் ரொம்ப கியூட்டா செய்து இருந்தாங்க சார்…”, என்று அவள் அவளுக்கு பிடித்த லட்டுவின் அடையாளங்களை பட்டியலிட…
ஈத்தனோ, உமையாள் அம்மையாரிடமும்… அவனிடம் அவர் இறுதியாக கூறிவிட்டு சென்றிருந்த, அவனின் குட்டி லட்டு பெண்ணிடமும்… சென்றுவிட்டு இருந்தான்…
அதில் அவனின் கையை பிடித்து உலுக்கிய குறிஞ்சி, “என்னங்க சார்… நான் ரொம்ப பேசி போர் அடிச்சுட்டேனா…?” என்றுகேட்டவள்…
“உங்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்னு கேட்டா… அப்படியே நிற்கறீங்க…” என்று குறைப்பட…
“ஹேய் அதை தான் யோசிச்சுட்டு இருந்தேன் கேர்ள்”, என்ற ஈத்தன்…
“எனக்கு ஸ்வீட்ஸ்ல பக்லவா தான் ரொம்ப பிடிக்கும்” என்றுக்கூற…
‘அப்படி கூட ஒரு ஸ்வீட் இருக்கா…’, என்ற நிலையில் தான் குறிஞ்சி இருந்தாள்.
அதைத்தொடர்ந்து அவனுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று அவளும் கேட்க…
பதில் சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று நினைத்து…
அவனும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, இசை, ரோஜா, தன்னுடைய ரசிகர்கள் என்று வரிசையாக அடுக்கியவன்…
இறுதியாக “இதையெல்லாம் மறக்க வைக்கும் அளவுக்கு ஒன்னு இருக்கு கேர்ள். திடீர்னு வந்து எனக்கு ரொம்ப பிடித்தமானதாகிடுச்சு”, என்றவன், “அது உன்னுடைய வயிற்றுக்குள் தான் பாதுகாப்பா இருக்கு கேர்ள்…” என்று இருந்தான்… அவளின் பெரிதாக மேடிட்டிருந்த வயிற்றை பார்த்து… கண்கள் கனிய… குரல் நெகிழ…
அதில் எப்பொழுதும் போல்… அவனை ஆவென… அவள் பார்த்து வைத்திருக்க…
________________________________
🪻 அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
கருத்துகள்
கருத்துரையிடுக