30.3 அந்திப்போர்
நின்று நின்று எப்படியோ ஏறி மேல் மாடியை தொட்டுவிட்டவளுக்கு… அப்படி மூச்சு வாங்கியது…
ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், ஈத்தன் எங்கே தேட…
அவனோ வெறும் தரையில், ரோஜா தொட்டிகளுக்கு மத்தியில் கண்களை மூடி அமைதியாக படுத்துக் கிடந்தான்…
அவனை கண்டுபிடித்ததும்…
வேக எட்டுக்களை வைத்து அவனை குறிஞ்சி நெருங்க…
அவளின் கொலுசுகளின் மெல்லிய ஒலி ஈத்தனின் அமைதியை கலைத்தது..
அதில் சட்டென்று தன் கண்களை திறந்தவன்… தலையை திருப்பி பார்க்கவும்…
முகம் கொள்ளாத புன்னகையுடனும், நெஞ்சம் நிறைந்த அன்புடனும் அவனை பார்த்தப்படியே நடந்து வந்துக்கொண்டிருந்த குறிஞ்சி…
அவன் தன் வரவை உணர்ந்ததும்…
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். எப்பவும் நீங்க மகிழ்ச்சியா, நீண்ட ஆயுளோட வாழனும்….”, என்றப்படியே… அவன் அருகே வந்துவிட்டவள்…
ஈத்தனின் இரண்டு கண்களில் இருந்தும் வழிந்துக்கொண்டிருந்த கண்ணீரை பார்த்து… அப்படியே அசையாமல் நின்றுவிட்டாள்…
“சார்…”, என்று அதிர்ந்து கூறியவளின் கண்களில் இருந்தும் நீர் முத்துக்கள் உற்பத்தியாகி, தரையில் சிதறியிருந்தன…
குறிஞ்சியின் அந்த அதிர்ந்த முகத்தை பார்த்த ஈத்தன், பட்டென்று தன் முகத்தை இரு கைகளாலும் அழுந்த துடைத்துவிட்டு, உடனே எழுந்து அமரவும்…
அதற்குள் அவனருகே தரையில் குறிஞ்சி அமர பார்த்தாள்…
அதில், “ஹேய் ஸ்டாப் கேர்ள்… நீ ஸ்ட்ரெயின் பண்ணாத” என்று ஈத்தன் அவளை தடுப்பதற்குள்…
குறிஞ்சி தரையில் கைகளை ஊன்றி அமர்ந்தே விட்டு இருந்தாள்…
அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை…
அதிலும் எப்பொழுதும் மின்னும் அவனின் நீல நிற கண்மணிகளை சூழ்ந்திருக்கும் வெண்மேகங்கள்… இன்று சிவந்து செம்மேகமாகிவிட்டிருக்க… அவன் முகமே இருண்டுவிட்டிருந்தது…
இதற்காகவா அவள் அத்தனை பொய்களை கூறி… தன்னையே அர்ப்பணித்து… அவ்வளவையும் செய்துக்கொண்டு இருக்கின்றாள்…
அடிவயிறு அப்படி துடித்தது அவளுக்கு…
இருவருக்குமே என்ன பேசுவதென்று தெரியவில்லை…
இருவருக்கும் இடையில் அப்படியொரு மவுனம்…
அவளின் கண்ணீரை துடைத்தவனின் மௌன கண்ணீர், அவளின் இதயத்தை இரண்டாக பிளப்பது போல்… அப்படி வலிக்க செய்தது என்றால்…
அவனுக்கோ இருக்கும் துயரம் போதாதென்று, அவள் பார்த்துவிட்டதில் வேறு அப்படியொரு சங்கடம்…
அதில், எப்பொழுதும் அவள் உடன் இருக்கும் போது, அவளின் முகத்தை மட்டுமே பார்த்து பேசும் ஈத்தன்… இன்று எங்கோ பார்த்தப்படி அமர்ந்து இருந்தான்…
அவனின் அச்சங்கடம் புரிந்தாலும்… அப்படியே அவனை அவளால் விட்டு செல்ல முடியாதே…
தன் மனதை திடப்படுத்திக்கொண்டு, ஈத்தன் அருகே மேலும் நெருங்கி அமர்ந்த குறிஞ்சி, “ஏன் அழுதீங்க…?” என்று கேட்டாள் நேரடியாக…
அதில் ஈத்தனின் உடல் இறுகுவது… வெளிப்படையாகவே குறிஞ்சிக்கு தெரிந்தது…
இருந்தும் பதில் வேண்டி அவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க…
வரவழைக்கப்பட்ட சிறு புன்னகையுடன் திரும்பிய ஈத்தன் “தூங்கலையா கேர்ள் நீ…” என்று கேட்டான்…
அவன் என்ன முயன்றும், அவனின் கரகரப்பான குரல் அவனை காட்டிக்கொடுத்தது…
அதில், வரும் அழுகையை தன் உதடுகளை அழுந்த கடித்து கட்டுப்படுத்திய குறிஞ்சி…
“ஏன் அழுதீங்கன்னு கேட்டேன் சார்…”, என்றாள் மீண்டும்…
அவன், தான் வாங்கிய வரம் அதுவென்று எப்படி விளக்குவான் அவளிடம்…
கலங்க துடித்த தன் கண்களை சிமிட்டி சரிசெய்தவன்… மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பும் தன் அலைப்பேசியை சைலெண்ட்டில் போட்டுவிட்டு…
“மணியாகிடுச்சு… தூங்க போகலாம் வா கேர்ள்…”, என்றுப்படியே எழுந்துக்கொள்ள பார்க்க…
ஈத்தனின் கரத்தை இறுக்கமாக பிடித்து தடுத்து இருந்தாள் குறிஞ்சி…
இதுவரை இவ்வளவு அழுத்தத்தை குறிஞ்சியிடம் ஈத்தன் பார்த்ததில்லை…
அதில் அதிர்ந்துப்போய் அவளை அவன் பார்க்க…
கண்கள் இரண்டும் குளம் கட்ட… உதடுகள் நடுங்க… அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் குறிஞ்சி…
அதில் பதறிப்போன ஈத்தன், “ஹேய்… ஒன்னுமில்லை குறிஞ்சி… ரிலாக்ஸ் ரிலாக்ஸ்…” என்று அவள் தன்னை பிடித்திருந்த கரத்தின் மேல் தன்னுடைய மற்றொரு கரத்தை வைத்து அவன் தட்டுக்கொடுக்க…
“ஏன் அழுதீங்கன்னு உங்கக்கிட்ட கேட்டேன்…?” என்று மீண்டும் குரல் நடுங்க கேட்டவள்…
ஈத்தன் சற்றும் எதிர்பார்க்காத விதமாக, “எதுக்கு இந்த பிச்சைக்காரிக்கு நாம பதில் சொல்லனும்னு நினைச்சுட்டீங்களா சார்…” என்று வேறு குறிஞ்சி கேட்க…
“ஜஸ்ட் ஷட் யுவர் மவுத், குறிஞ்சி” என்று கத்தியிருந்தான் ஈத்தன்…
“என்ன மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துற கேர்ள் நீ…” என்றவனுக்கு கோபத்தில் உடல் அப்படி நடுங்கியது…
இயலாமையில் சட்டென்று அப்படி பேசிவிட்டாலும்… அதில் தவறு எதுவுமில்லையே என்று குறிஞ்சி அப்படியே மௌனம் காக்க…
“நான் போயிட்டு உன்னை அப்படி நினைப்பேனா… யூ ஆர் அ ரியல் ஏன்ஜல் குறிஞ்சி… இனி ஒருமுறை இப்படி பேசாதே…” என்றவன்… அவள் அவனை பிடித்து வைத்திருந்த… அவளின் அந்த கரத்தை வைத்தே, அவளை பற்றி அருகே இழுத்தவன்… அமர்ந்த வாக்கிலேயே அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு இருந்தான்…
இருவரின் இறுக்கமுமே, அந்த ஒற்றை அணைப்பில் தளர ஆரம்பிக்க…
இருவரின் கண்ணீரும், தாராளமாக இருவரின் தோளினையும் மாற்றி மாற்றி நனைத்தது…
இருவரும் அறியா வண்ணம் தான்…
அப்பொழுது, “நீ பிச்சைக்காரி இல்லை… நான் தான் பிச்சைக்காரன்… எல்லாமே இருக்கிற போல நடிக்கும், எதுவுமே இல்லாதவன்…” என்று அவளின் காதோரம் இடியினை இறக்கிய ஈத்தன்…
தன் மொத்த கதையையும், குறிஞ்சியிடம் சிந்தாமல் சிதறாமல் இறக்கி வைக்க…
அதன் பாரத்தை மலரவளால் தாங்க முடியுமா…
இருந்தும் தன்னவனுக்காக இடிதாங்கியாய் தாங்கிக்கொண்டு அமர்ந்து இருந்தாள்…
ஈத்தனின் மனதில், அவனின் பெற்றோர்களின் பிரிவினால் காயம் இருக்கும் என்ற அனுமானம் அவளுக்கு உண்டு தான்… ஆனால் இந்தளவிற்கு இருக்கும் என்று அவள் நினைத்து பார்த்ததில்லை…
அவனை விட மிக மிக மோசமான நிலையில் அவள் இருந்திருந்தாலும்… கடவுள் புண்ணியத்தில், அன்னையின் அரவணைப்பில், இப்படியான பச்சை ரணங்கள் எதுவும் அவளுக்கு இல்லை…
அதிலும் அவன் கூறியது போலவே, ஒன்றும் இல்லாமல் யாசகனாக அனாதை இல்லத்திற்கு சென்று சேர்ந்துவிட்டிருந்த பன்னிரண்டு வயது ஈத்தன், அவளின் கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக இருந்தான்… அவளின் உடலை அப்படியே வெட்டி கூறுப்போட்டுவிட்டு இருந்தான்…
கண் முன் இருக்கும் வளர்ந்த ஈத்தனை, தன் மார்போடு இறுக அணைத்து, தன் கைகளுக்குள்ளேயே பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
ஆனால் நினைத்ததை எல்லாம் அவளால் செய்ய முடியாதே…
வேறுவழியின்றி… தன் ஒற்றை கரத்தினை மட்டும் உயர்த்தியவள்… ஈத்தனின் முதுகை ஆறுதலாக தடவி கொடுத்தாள்…
ஆனால் அதை உணரும் நிலையில் தான் ஈத்தன் இல்லை…
சில காயங்களுக்கு எந்த ஆறுதலுமே மருந்தாகாது… அப்படியான காயம் தான் ஈத்தனின் ஆழ்மனதில் இருப்பது…
அதுவும் அவனின் உயிரானவர்கள்… அவனுக்கு உயிர் கொடுத்தவர்கள் கொடுத்தது…
எப்படி மறையும்…
அதுவும் வருடா வருடம் வரும் ஒவ்வொரு பிறந்தநாளும்… அன்று அவன் தன் தாய் தந்தையை தேடி… அவன் சந்தித்த அந்த நிராகரிப்புகளும்… அவமதிப்புகளும்… இறுதியில் தன்னை அனாதையாக அவன் உணர்ந்ததும்… சிறு காட்சிகள் கூட மறையாது… கண்முன் வந்து வந்து அல்லவா செல்கிறது…
என்ன செய்வது…
எப்பொழுதும் போல், அனைத்தையும் தனக்குள் விழுங்கிக்கொண்டவன்…
மெல்ல குறிஞ்சியிடம் இருந்தும் விலகி கொண்டான்…
குறிஞ்சியோ, இன்னும் அவன் தந்துவிட்ட அதிர்வுகள் நீங்காது அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க…
“நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டேன்… ஹேப்பியா கேர்ள் நீ…”, என்று அவளிடம் மென் புன்னகையுடன் கேட்டவன்… அவளின் கன்னத்தில் மெல்ல தட்டி, “கூல்…” என்றிட…
அவனின் அழுகையை விட… அந்த கூல் அதிகமாய் சுட்டது அவளை…
அதில், “இனி நீங்க எதுக்காகவும் அழக்கூடாது” என்றாள் அழுத்தமாக…
“ஓகே… வில் ட்ரை…” என்றான் ஈத்தன் அதற்கும் மென் புன்னகையுடனே…
ஈத்தனின் அப்பதில்கள் குறிஞ்சிக்கு திருப்தியாக இல்லை…
அதில், “நீங்க ஒன்னும் யாரும் இல்லாதவர் எல்லாம் கிடையாது சார்… உங்களுக்காக உங்க பேபி இருக்காங்க…” என்று அவனின் பிடிப்பை அவனுக்கு ஞாபகப்படுத்திய குறிஞ்சி…
தொடர்ந்து, “இன்னைக்கு நீங்க உங்க பேபியை மறந்துட்டிங்க… உங்களுக்கு யாரும் இல்லைன்னு சொல்லிட்டிங்க… ரொம்ப தப்பு சார்” என்று அவனின் தவறையும் சுட்டிக்காட்டியவள்…
“இனி எப்பவுமே உங்க பேபியை நீங்க மறக்கக்கூடாது சார்… அதேமாதிரி நான் தனின்ற எண்ணமும் இனி உங்களுக்கு மனசுக்குள் கூட வரக்கூடாது சார்… சத்தியம் பண்ணுங்க…” என்று தன் கரத்தினை அவன் முன்பு நீட்டி இருந்தாள்…
ஈத்தனின் பல வருட தனிமை உணர்வை, ஒரே சத்தியத்தில் இல்லாமல் ஆக்கிவிடும் வேகம் குறிஞ்சிக்குள்…
அதற்கு ஏற்றப்போலவே, அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும், ஈத்தனுள் ஒரு அணுவிடாமல் தேடித்தேடி பயணித்தது…
அவனின் யோசனையான முகம் குறிஞ்சிக்கு மேலும் பேச தைரியம் அளிக்க…
“எவ்வளவோ கஷ்டம் உங்க மனசில் இருக்கலாம் சார்… ஆனால் அதையெல்லாம் நினைச்சு இனி நீங்க ஃபீல் பண்ண கூடாது… இந்த நொடியோட எல்லாத்தையும் தூக்கி தூர போட்டுடுங்க… இனி உங்க மனசில் இருக்கும் எல்லா இடமும், உங்க பேபிக்கு மட்டும் தான்”, என்றவள் அக்கணம் ஈத்தனுக்காக மட்டும் பேசவில்லை… அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தாயாகவும் தான் பேசிக்கொண்டு இருந்தாள்.
“உங்களை நம்பி தானே சார் இந்த குழந்தை பூமிக்கு வர போகுது…”, என்று தன் வயிற்றில் கை வைத்து கூறியவள்…
“நீங்க இப்படி கஷ்டத்தோட இருந்தா, எப்படி சார் அந்த குழந்தை சந்தோஷமா வளரும்… இனி நீங்க வெறும் ஈத்தன் மட்டும் இல்லை… ஒரு குழந்தையோட அப்பாவும்… அதுக்கு தகுந்த போல தானே நீங்க நடந்துக்கனும்…”, என்றவள்…
இறுதியில், “நீங்க நல்லா வச்சிப்பிங்கன்ற நம்பிக்கையில் தான் சார், நான் உங்களுக்கு இந்த பேபியை பெத்து தர முன் வந்தேன்… இந்த பேபிக்கு நீங்க பெஸ்ட் அப்பாவா இருக்கனும்… இருப்பீங்க தானே… ப்ளீஸ் சார் சொல்லுங்க…”, என்று அவனின் பொறுப்பை மொத்தமாக அவனுக்கு உணர்த்திவிட்டவள்… அவனிடம் அதற்கான பதிலையும் கேட்க…
“உன் அம்மா உன்னை ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க குறிஞ்சி” என்ற ஈத்தன்… சற்றும் அவள் எதிர்பாராத விதமாக… “நாளைக்கு உன் குழந்தைக்கு நீ பெஸ்ட் அம்மாவா வருவ கேர்ள்… ஐ பிராமிஸ்…”, என்று புன்னகையுடன் கூறிவிட்டு…
சத்தியம் கேட்டவாறு அவள் நீட்டியிருந்த அவளுடைய கரத்தை பற்றி… அப்படியே அதில் தன் முகத்தை அழுந்த அவன் புதைத்துக்கொள்ள…
குறிஞ்சிக்கு அவள் மேனி மொத்தமும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியிருந்தது…
அவனை அவள் ‘நல்ல தந்தையாக இருப்பாயா?’ என்று கேட்டாள்… அவனோ ‘நீ நல்ல தாயாக இருப்பாய்!’ என்று பதில் கூறினால் என்ன அர்த்தம்…
சில வினாடிகள் பொறுத்து பார்த்தவள், அதற்கு மேல் பொறுக்க முடியாது, “நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லைங்க சார்…” என்றாள்…
அதில் புன்னகையுடன் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்த ஈத்தன்…
“இதுக்கு பதில் நான் சொல்ல மாட்டேன் கேர்ள். நாளைக்கு என் பேபி சொல்லுவா… அது தான் சரியா இருக்கும்…” என்றவனின் முகத்தில் அப்படி ஒரு தெளிவு… கண்களில் முதலில் இருந்ததை காட்டிலும் அவ்வளவு வெளிச்சம்…
அதில் ஸ்விட்ச் போட்டது போல்… அவனின் அந்த வெளிச்சம் குறிஞ்சிக்குள்ளும் கடத்தப்பட… பூவாய் மலர்ந்து புன்னகைத்தவள்…
“அது என்ன ‘என் பேபி சொல்லுவா’ சார். ஏன் ‘சொல்லுவான்’ இல்லையா? உங்களுக்கு பொண்ணு தான் வேண்டுமா…” என்று குறிஞ்சி கேட்க…
“ம்…” என்று வானத்தை பார்த்து யோசித்தவன்…
“பொண்ணோ, பையனோ… எனக்கு உன்னை மாதிரியே கைண்ட்டா ஒரு பேபி வேண்டும்… அதுவும் உனக்கு பிடிக்குமே அந்த ஆரஞ்ச் கலர் லட்டூ… அதே மாதிரி கியூட்டாவும்… ஸ்வீட்டாவும்… இருந்தா போதும்” என்று கண்களில் ஆசை மின்னக்கூற…
ஈத்தனின் பேச்சை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவனின் குட்டி லட்டோ, ‘டேய் தகப்பா… உன் மனசில் இருக்கும் இடம் எல்லாம் எனக்குன்னு தானே அம்மா சொன்னாங்க… நீ என்ன ரூட்டை மாத்தி ஏமாத்த பார்க்கறியா… விடமாட்டேன்…’ என்று எண்ணியவள்…
தன் இருப்பை உணர்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து…
பூஜை வேளை கரடியாக மாறி…
குறிஞ்சியின் வயிற்றினுள் அங்கும் இங்கும் ஓடி ஃபுட்பால் ஆட…
“ஆ… அம்மா…” என்று முனங்கிய குறிஞ்சி… அப்படியே தன் வயிற்றை இருக்கைகளாலும் பற்றிக்கொண்டாள்…
அதில், “ஹே… என்ன ஆச்சு கேர்ள்… பெயினா இருக்கா…” என்று பதறிய ஈத்தன்… அவளின் வயிற்றையே பார்க்க…
“உங்க பேபிக்கு… உங்களுக்கு பர்த்டே விஷ் சொல்லனுமாம் சார்…” என்றவள்…
பட்டென்று ஈத்தனின் கரத்தை பற்றி, தன் வயிற்றின் மீது வைத்து இருந்தாள்…
ஈத்தன் தன் வாழ்நாளில் மறக்கவே முடியாத கணங்கள் அவை…
🔴அடுத்த அத்தியாயம் லிங்க் கீழே
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/05/304.html
கருத்துகள்
கருத்துரையிடுக