30.4 அந்திப்போர் 🪻

ஜெல்லி மீன் போல் அங்கும் இங்கும் நீந்தும் அவன் பிள்ளையின் அசைவை… அவனுடைய கரம்… குறிஞ்சியின் ஆடைக்கு மேலேயே உணர…

“ஓ மை காட்….” என்று தன் கரத்தினை தூக்கி உள்ளங்கையினை பார்த்த ஈத்தன், “மை பேபி…” என்று அழுத்தமாக தன் இதழ்களை குழந்தையை உணர்ந்த அந்த உள்ளங்கையில் பதித்தவன்…

சிறு தயக்கமுமின்றி, மீண்டும் தன் கரத்தினை எடுத்துச்சென்று குறிஞ்சியின் வயிற்றில் பதித்து இருந்தான்…

அதை அனுமதித்த குறிஞ்சியும், அவனின் கரத்தினை பற்றி, “இப்ப இங்க இருக்காங்க சார் உங்க பேபி…” என்று நகர்த்தி சரியான இடத்தில் வைக்க…

ஈத்தனின் நாடி நரம்பெல்லாம் அப்படியொரு மென் உணர்வு… உடல் முழுவதும் லேசாகி பறப்பது போல் சொர்க்கமாய் இருந்தது…

அதனை தன் கண்களை மூடி அவன் மேலும் மேலும் உள்வாங்கி ரசிக்க…

குறிஞ்சியின் கண்கள் அவனை கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தன…

ஈத்தன் மீதான குறிஞ்சியின் அந்நேர உணர்வுகளை எல்லாம்… காதல் என்ற சிறிய வார்த்தைக்குள் எல்லாம் அடைக்கவே முடியாது… அது அனைத்தையும் கடந்துவிட்டு இருந்தது… மீண்டும் மீண்டும் தன்னை அவனிடம் தொலைத்தாள்…

குழந்தையின் அசைவு சிறிது நேரத்தில் சுத்தமாக நின்றுவிட…

நிமிர்ந்து குறிஞ்சியின் முகம் பார்த்தான் ஈத்தன்…

“உங்க பேபி தூங்கிட்டாங்க சார்…” என்றாள் குறிஞ்சி புன்னகையுடன்…

அதில், “ஓ…” என்று தன் கரத்தினை விலக்கிக்கொண்ட ஈத்தன்…

“தேங்க் யூ சோ மச் குறிஞ்சி… இனி பர்த்டேனாலே, என் பேபிய முதல் தடவை ஃபீல் பண்ண, இந்த தருணம் தான் என் ஞாபகத்திற்கு வரும்… சோ லவ்லி…” என்றவன்…

உள்ளுக்குள் தோன்றும் சுக உணர்வுகளை தாங்க முடியாமல்… அருகில் இருந்த ரோஜாக்களை மெல்ல வருடிவிட ஆரம்பித்து இருந்தான்…

அவனின் கரங்கள் இரண்டும்… அவனின் குழந்தையை ஏந்தும் நாளுக்காக இப்பொழுதிலிருந்தே தவமிருக்க ஆரம்பித்துவிட்டன…

கடந்திருந்த பன்னிரண்டு ஆண்டுகளும், ஈத்தன் அவனுடைய பிறந்தநாள் நெருங்க ஆரம்பித்துவிட்டாலே போதும்… அவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாக ஆரம்பித்து விடுவான்…‌ அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக ரசிகர்களிடம் இருந்து, அவனுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான வாழ்த்துக்களும், ஆயிரக்கணக்கான அன்பு பரிசுகளும் கூட அவனை குளிர்வித்தது இல்லை…

ஆனால் இன்று, அவனில் ஒரு மாற்றத்தை காலதேவன் குறிஞ்சி மலர் மூலம் நடத்திவிட்டு இருந்தார்…

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவனின் மனம் மீண்டும் மலர ஆரம்பித்துவிட்டு இருந்தது…
________________________________

நீண்ட நேரமாக தனி உலகினில் உலாவிக்கொண்டிருந்த ஈத்தன்…

அருகில் கொலுசு சத்தம் கேட்கவும் தான் திரும்பி பார்த்தான்…

குறிஞ்சி தான்… நீண்ட நேரம் சம்மணம் போட்டு அமர்ந்திருந்ததில்… மரத்து போன தன் கால்களை பிரித்து நீட்டி… தன் இருக்கைகளையும் பின்புறம் தரையில் ஊன்றி… தளர்வாக அமர்ந்துக்கொண்டு இருந்தாள்…

அதில் “ஓ மை கோஷ்…” என்ற ஈத்தன்… 

“சாரி குறிஞ்சி… உனக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு… வா தூங்க போகலாம்…” என்றப்படியே எழுந்துக்கொண்டவன்…

அவளின்‌ கைப்பற்றி… மெல்ல அவளையும் எழுப்பி விட… உடல் அசதியில் சென்று படுக்கலாம் என்று அவளும் எழுந்துக்கொண்டாள்.

பிறகு இருவரும் பேசியப்படியே கீழிறங்கி ஹாலிற்கு வந்து சேர…

குறிஞ்சிக்கு அப்பொழுது தான் ஈத்தன் இன்னும் இரவு உணவு உண்ணாதது ஞாபகத்திற்கு வந்தது…

அவளுக்கு தெரிந்து ஈத்தன், உணவு விஷயத்தில் எல்லாம் பயங்கர கெடுபிடியாக இருப்பான். நேரத்திற்கு தவறாமல் சாப்பிட்டு விடுவான்.

அதில், ‘அச்சோ சாருக்கு பசிச்சிருக்குமே…’ என்று நினைத்தவள்…

“சார் நீங்க இன்னும் டின்னர் சாப்பிடலை… வந்து முதலில் சாப்பிடுங்க… வெறும் வயித்தோட இருக்காதிங்க…” என்றவள்… தன் வயிற்றை பற்றியப்படி விடுவிடுவென்று உணவு மேஜைக்கருகில் சென்றுவிட…

“நீ போயிட்டு படு குறிஞ்சி… நான் சாப்பிடறேன்…” என்று அவன் அவளை செல்ல கூற…

அவளா‌ போவாள்…

ஜம்பமாக அங்கேயே இருந்துவிட்டாள்.

சரியென்று அவளுக்கு ஒரு லெமன் ஹனி டீயை கலந்து கொடுத்த ஈத்தன்… உணவு பாத்திரங்களை திறந்து பார்த்தான்.

அவனுக்காக, கிரில் செய்யப்பட்ட மீன் மற்றும் ரோஸ்ட் செய்யப்பட்ட ப்ரோக்கோலி… வெஜி சாலட்டுடன் காத்துக்கொண்டிருந்தன…

மணியை பார்த்தான்…

இரண்டை நெருங்கிக் கொண்டு இருந்தது…

அதில் அவன் மீனை தவிர்த்துவிட்டு… காய்கறிகளை மட்டும் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பிக்க…

‘சாருக்கு இது எங்கயிருந்து பத்தும்’ என்று நினைத்த குறிஞ்சி…

“சார் எனக்கும்‌ பசிக்குது… நான் எனக்கு தோசை போட்டு சாப்பிட போறேன்…” என்று எழுந்துக்கொண்டாள்.

“என்ன இரண்டு மணிக்கு போயிட்டு தோசை சாப்பிட போறியா நீ…”, என்ற ஈத்தன்… “பழம் சாப்பிட்டு படு குறிஞ்சி… காலையில் தோசை சாப்பிட்டுக்கலாம்” என்று குறிஞ்சியை கட்டுப்படுத்த…

“ஒன்னே ஒன்னு போட்டுக்கறேன் சார்… ப்ளீஸ்” என்று சமையல் அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள்…

நேரத்தை போக்குவதற்காக, சில சமயங்களில் அவளுக்கு பிடித்தமானவற்றை அவளே செய்து சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்… அதுவும் ஈத்தன் வேறு ஒருவாரமாக வீட்டில் சரியாக இல்லாத நிலையில்… அவள் சமையல் தான் பெரும்பாலும் அவளுக்கு…

அவசர அவசரமாக எலக்ட்ரிக் குக்கரில் பாசி பருப்பை போட்டு விசில் விட்டவள்… அது வெந்து வரும் முன்னரே… காரம் எதுவும் சேர்க்காமல் சாம்பாருக்கு காய்கறியை போட்டு வதக்கி என்று பத்தே நிமிடத்தில் சாம்பார் வேலையை முடித்த குறிஞ்சி…

அதற்குள் சுடாக காத்துக்கொண்டிருந்த தோசைக்கல்லில் மாவை ஊற்றி… மெல்லிசாக தேய்க்க…

“இன்னும் என்ன கேர்ள் பண்ற” என்றப்படியே தான் உண்ட தட்டினை எடுத்துவந்து சிங்கில் வைத்துவிட்டு… ஈத்தன் தன் கைகளை கழுவ…

“அச்சோ சார் அதுக்குள்ளே சாப்பிட்டு முடிச்சிட்டிங்களா… கொஞ்சம் இருங்க” என்று குறிஞ்சி பரபரக்க… அப்பொழுது தான், அவள் தனக்கு தான் சமைக்கிறாள் என்பதே ஈத்தனுக்கு புரிந்தது…

அதில், “நீ ஏன் கேர்ள் உன்னை ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற… இதெல்லாம் நீ செய்ய வேண்டியதில்லை… போதும் வா” என்று ஈத்தன் அவளை தடுத்து… அழைக்க…

“ஏன் சார்… நீங்க மட்டும் தான் எனக்கு எல்லாம் செய்யனுமா… நான் எதுவும் செய்யக்கூடாதா… அப்போ அன்னைக்கு பெஸ்ட் ஃபிரண்ட் மாதிரின்னு எல்லாம் சொன்னீங்களே… எல்லாம் பொய்யா…”, என்று அவள் அடுக்கிக்கொண்டே போக…

ஈத்தன் அதற்கு பிறகு மறுப்பேச்சே பேசவில்லை…

அங்கேயே பெரிய பார் ஸ்டூல் ஒன்றை கொண்டு வந்து போட்டு அமர்ந்தவன்…

கிட்சன் மேடையிலேயே புது தட்டை எடுத்து வைத்து சாப்பிட அமர்ந்துவிட…

வந்த சிரிப்பை வாயிற்குள் அடக்கிக்கொண்டு, “சாப்பிடுங்க சார்…” என்று குறிஞ்சி, அவனுக்கு தோசையை வைத்து சாம்பாரை ஊற்றினாள்…

“தேங்க் யூ கேர்ள்…” என்று முதல் வாயை பிய்த்து எடுத்த ஈத்தன்… அதில் ஸ்பூன் மூலம் சாம்பாரை எடுத்து ஊற்றி… விரலில் சாம்பார் எதுவும் படாமல் சாப்பிட…

குறிஞ்சியின் கண்கள் அதனை ரசிக்க தவறவில்லை…

இதுவரை காலமுமே ஈத்தன் சமையல் ஆள் செய்து தரும் உணவுகளை தான் உண்டு இருக்கின்றான்… அவன் பாட்டிக்கு கூட சமைக்கவெல்லாம் தெரியாது… என்னும் போது…

குறிஞ்சி செய்து தருவது அவனுக்கு புது அனுபவமாக இருந்தது… 

பிடித்தும் இருந்தது…

அதில் “சோ குட் குறிஞ்சி… திஸ் டேஸ்ட்ஸ் அமேசிங்…” என்று வாயிற்கு வாய் அவன் கூறிக்கொண்டே இருக்க…

குறிஞ்சிக்கு நிறுத்தாமல் தோசை உற்றிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது…

இதற்கே அவள் ஒன்றும் பெரிய சமையல் புலி எல்லாம் கிடையாது…

கடமைக்கு என்று இல்லாமல், அன்பும், அக்கறையும் கொண்டு அவள் செய்து தருவதில், அந்த உணவு கூடுதல் சுவையாகிவிட்டதோ என்னவோ தெரியாது…

எப்பொழுதும் இரண்டுடன் நிறுத்திக்கொள்பவன்… இன்று முதல் முறை, கணக்கெல்லாம் எதுவும் வைக்காமல், ஐந்தை கடந்து போய்க்கொண்டு இருந்தான்…

அதன்பிறகே அதை உணர்ந்து “காட்… கேர்ள்… போதும்…” என்று ஈத்தன் நிறுத்தி இருந்தான்…

உடன் அத்துடன் மட்டும் அவன் நிறுத்திக்கொள்ளவில்லை…

எப்படி தோசை ஊற்ற வேண்டும் என்று குறிஞ்சியிடம் கேட்டு…

அவள் அவன் கைப்பற்றி ஊற்ற சொல்லி கொடுக்கவும், கற்றுக்கொண்டவன்…

குறிஞ்சி சற்றும் எதிர்பாராத விதமாக… அவளை அமர வைத்து… அவளுக்கு தோசை ஊற்றி கொடுத்திருந்தான்…

அதில் குறிஞ்சி பூமியிலேயே இல்லை… சிறகில்லாமல் வானத்தில் பறந்துக்கொண்டு இருந்தாள்…

அவளுக்கு தெரிந்து அவள் அப்பாவோ… மாமாவோ… உண்ணும் தட்டை கூட எடுத்து வந்து கழுவ போட்டது இல்லை… அதிலேயே கையை கழுவி வைத்துவிட்டு எழுந்துக்கொள்வார்கள்… ஆண்கள் என்றால் அப்படி தான், என்ற அவளின் பொதுவான பிம்பத்தை ஈத்தன் சுக்கல் நூறாக உடைத்துப்போட்டு இருந்தான்…

சிறு ஈகோ கூட இல்லாமல் அவன் பழகும் விதம்… அப்பப்பா… அப்படி ஈர்த்தது அவளை…

ஒருவழியாக குறிஞ்சி தூங்குவதற்காக அறைக்குள் நுழைய போகவும்…

“குறிஞ்சி ஒன் செக்கெண்ட்…” என்று அவளை நிறுத்திய ஈத்தன்…

மூன்றாம் முறையாக… தன் தலை முடியை கோதிய வண்ணம் அவள் முன்பு… தயக்கத்துடன் நின்று இருந்தான்…

அதில், ‘அச்சோ… என்ன கேட்க போறார் தெரியலையே…’ என்று குறிஞ்சி உள்ளுக்குள் பதற…

அவள் எதிர்பார்த்தது போலவே, 

ஈத்தன், “கேன் ஐ ஆஸ்க் யூ ஒன்திங்க்?” என்று குறிஞ்சியிடம் கேட்டு இருந்தான்…

அதில் தன் கண்களை ஒருமுறை மூடி தன்னை திடப்படுத்திக்கொண்ட குறிஞ்சி…

“கண்டிப்பா சார். என்ன வேண்டும் கேளுங்க…?” என்றாள், அவன் மீதுக்கொண்ட நம்பிக்கையில் சிறு புன்னகையுடன்…

அதில் சற்று இலகுவான ஈத்தனும், “Can I feel the baby one more time? I want to do it very badly” என்று சிறுப்பிள்ளை போல் தன் கண்களை சுருக்கி… தன் ஆசையை அடக்க முடியாது அவன் கேட்டுவிட…

குறிஞ்சிக்கு தான், அவனின் அந்த பாவனையில், இதயம் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டு இருந்தது…

சத்தம் வராமல், ‘ஹையோ…’ என்றவளால் அவன் முகத்தில் இருந்து பார்வையை விலக்கவே முடியவில்லை…

ஈத்தனோ அவள் எடுத்துக்கொண்ட அந்த சிறிய இடைவெளிக்கே…

“உனக்கு விருப்பம் இல்லைன்னா… நோ பிராப்ளம் குறிஞ்சி… நான் எதுவும் நினைச்சிக்க மாட்டேன்…” என்றுவிட…

அவனை நோக்கி அடியெடுத்து வைத்து நெருங்கிய குறிஞ்சி… அவனின் இரு கைப்பற்றி… தன் வயிற்றின் மீது அழுத்தமாக வைத்து பிடித்துக்கொண்டு இருந்தாள்…

அதில், இப்பொழுது ஈத்தனின் இதயமும் எதிர்பார்ப்பில், அதிவேகமாக துடிக்க ஆரம்பித்து இருந்தது…

ஈத்தனின் கண்கள் குறிஞ்சியின் மேடிட்ட பெரிய வயிற்றின் மீதும்…

குறிஞ்சியின் கண்கள் ஈத்தனின் மீதும் நிலைத்திருக்க…

மெல்ல நகர ஆரம்பித்தாள் குழந்தை…

அதை ஈத்தனின் கரங்களும் உணர ஆரம்பிக்க…

“பேபி…” என்றவன் கண்கள் உணர்ச்சியில் நிறைந்துப்போக…

அவனையே பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சி, தன் நடுங்கும் கால்களை தரையில் அழுந்த ஊன்றி தன்னை நிலைப்படுத்த பார்த்து இருந்தாள்…

“சீக்கிரம் டாடிக்கிட்ட வந்திடுங்க பேபி… டாடி உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன்… லவ் யூ சோ மச் பேபி…” என்று மனதினுள் குழந்தையுடன் பேசிய ஈத்தன்… சில நிமிடங்கள் கழித்தே தன் கரங்களை விலக்கி இருந்தான்…

அதன்பிறகான ஒவ்வொரு நாளும் ஈத்தனின் ஆசையும், ஆவலும், எதிர்பார்ப்புகளும் மலையளவு உயர்ந்துக்கொண்டே செல்ல…

அவனுடைய பேபியையே சுற்றி சுற்றி வந்துக்கொண்டு இருந்தான்… அதில் குறிஞ்சியின் நிலை தான் மோசமாகியது…

அவன் லட்டுகுட்டியை சுற்ற… குறிஞ்சியின் கண்கள் லட்டு பையனை விழுங்கிக்கொண்டிருந்தன…

அடுத்த அத்தியாயம் லிங்க் கீழே


கருத்துகள்

Swathi Youtube Audio Novels

Follow this Blog for New Story Updates

Popular posts

New Ongoing 💌 சங்கீத வானில் ஓர் அந்திப்போர் 🎼🪻😘💌

Completed- உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘- (Completed story available here for free Read)

🔴My Complete Novel List: Ongoing and Finished

Completed-💃🕺அழகான இராட்சசியே அடிக்கரும்பாய் இனிக்கிறியே - Romantic Entertainment

Completed-மகிழ்மதியின் அரசன்- Royal Family Based Romantic love story