32.1 அந்திப்போர் 🪻😘
அத்தியாயம் -32
ஈஷாவுடன் ஈத்தன் அமெரிக்காவிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகிறது.
இந்த மாதம் முடியும் வரையுமே அங்கு தான் அவர்கள் இருக்க போகிறார்கள்.
ஈத்தனுக்கு சில ரெக்கார்டிங் உடன், பெரிய மியூசிக் கன்சர்ட் ஒன்று அம்மாத இறுதியில் இருந்தது.
அதில் பயங்கர பிசி அவன்.
ரெக்கார்டிங் வேலைகளை முதலில் முடித்துவிட்டு, அடுத்து முழு மூச்சாக இசைவிழாவிற்கான பயிற்சிகளில் இறங்க வேண்டும் என்று அட்டவணை போட்டு ஓடிக்கொண்டு இருந்தவன்…
ஒருவழியாக குறிப்பிட்டிருந்த தேதிக்குள், ரெக்கார்டிங் பணிகளை முடித்துவிட்டு இருந்தான்…
அடுத்து இசைவிழாவிற்கான ரிகர்சலை பார்க்க வேண்டியது தான்…
அதற்கு ஆயுத்தமாவதற்கு முன்பு, மேற்கொள்ளும் விஷயங்களான…
உடல் மற்றும் மனநிலையை அதீத புத்துணர்வாக மாற்ற வேண்டி…
வீட்டிலேயே சற்று ஓய்வாக ஈத்தன் தங்கிவிட்டான்…
ரெக்கார்டிங்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரீடேக் எடுத்து பாடிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நிறைய எடிட்டிங் முறைகள் அதில் பயன்படுத்தி பாடலை நன்றாக டியூன் செய்துவிடுவார்கள்.
ஆனால் நேரடியாக லைவ்வில் பாடும் பொழுது இது எதையும் செய்ய முடியாது.
உடன் இடைவெளிகள் எதுவுமின்றி சோர்ந்து போகாமல் தொடர்ந்து வேறு பாட வேண்டும். அதுவும் அப்பாடல்களுக்கு உண்டான உணர்வுகள் சற்றும் குறையாது…
மனநிலையும் நன்றாக இருக்க வேண்டும்… உடல்பலமும் அதிகம் இருக்க வேண்டும்… அப்பொழுது தான் ‘லைவ் கன்செர்ட்’ அதுவும் ஈத்தன் போல், தனித்து எடுத்து பிரமாண்டமாக செய்ய முடியும்.
பல மில்லியன் டாலர்களை ஒரே நாளில் அள்ளவும் முடியும்.
முதலில் எல்லாம் ரிகர்சலுக்கு முன்பு, காட்டு பகுதிக்குள் இருக்கும் ஏதேனும் ஒரு ரிசார்ட்டிற்கு சென்று தங்கி… பல பாடி மஸாஜ்கள்… யோகாக்கள்… பச்சை பசேலென்ற காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பது… போன்ற பலவற்றை செய்து தான், உடல் மற்றும் மனநிலையை ஒருசேர தயார்படுத்துவான் ஈத்தன்… சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலானோர் செய்வது தான்.
ஆனால் ஈஷா பிறந்த பிறகு அவனால் அப்படி செல்ல முடிவதில்லை…
செல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிவிட்டு இருந்தது…
ஈஷாவுடன் ஒருமணி நேரம் விளையாடினாலே போதும், உடல் அளவிலும், மன அளவிலும் 100 பர்செண்ட்டேஜ் சார்ஜ் ஏறிவிடும் அவனுக்கு…
பிறகு எதற்கு ரிசார்ட் எல்லாம்…
அதிலும் இம்முறை ‘கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’ என்று கேட்பது போல்… இரண்டு லட்டுக்கள் அவனை முழு சார்ஜிலேயே வைத்திருக்க…
குரலுக்கு மட்டும் ஓய்வுக்கொடுத்து வீட்டில் இருந்தான்.
அப்பொழுது தான், திடீரென்று சற்று அமைதியாகிப்போன ஈஷாவின் குண மாறுதல்கள் ஈத்தனின் கவனத்தில் விழுந்தது…
அதைத்தொடர்ந்து அவளை கவனிக்க ஆரம்பித்தவன்…
“என்னடா பேபி? என்ன யோசனை என் பேபி மூளைக்குள் தொடர்ந்து ஓடிட்டே இருக்கு” என்று அவளிடமே நேரடியாக கேட்க.
ஒருகணம் திகைத்தவள், மறுகணமே, “நத்திங் பேபி. எதுவும் இல்லை” என்று புன்னகையுடன் கூறி மறுத்துவிட… அவள் பேச்சில் உண்மை தன்மை இல்லாததை ஈத்தனால் கண்டறிய முடியாதா என்ன?
அவளின் இமை முடியின் அசைவில் மாற்றம் வந்தால் கூட கண்டுப்பிடித்துவிடுவானே…
‘சம்திங் ஃபிஷ்ஷி’ என்ற முடிவுக்கு வந்தவன்… மகளுடன் சற்று கூடுதலாக நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தான்…
ஆரம்பத்தில் திடீர் திடீரென்று ஏதோ யோசனையாக சுற்றுப்புறத்தில் கவனமில்லாது இருந்தவள்… அடுத்து வந்த நாட்களில் வகுப்பு நேரம் தவிர்த்து… மற்ற நேரங்களில் எல்லாம் சோர்ந்த முகமாக மீண்டும் மீண்டும் சுருண்டு படுத்துவிட…
ஈத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எழுப்பி விளையாட அழைத்தால் கூட, தயாராக எழுந்து வந்துவிடுவாள் ஈஷா.
நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கங்களும்… மேல்தட்டு வாழ்க்கை முறையும்… அவளின் உடல்நிலையை அந்தளவிற்கு செழிப்புடன் எப்பொழுதும் வைத்து இருக்கும்…
ஆனால் இப்பொழுதோ, “பேபி… ஐ யம் டயர்ட்…” என்று மாலை வேலைகளில் எல்லாம் படுத்துக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள்.
அவளுக்கு இரண்டாவது மாதவிடாய் கூட வந்து சென்றுவிட்டு இருந்தது… அடுத்தது வரவும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்க…
உடலுக்கு எதுவோ என்று…
சளி, ஜூரம் அனைத்திற்கும் டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டான் ஈத்தன்.
எதுவும் இல்லை என்று ரிப்போர்ட்கள் வரவும்…
திடீரென்று அவளுக்கு என்னவாயிற்று என்று ஈத்தனால் கண்டறிய முடியவில்லை. எதுவோ இருக்கிறது என்று மட்டும் தெளிவாக தெரிந்தது அவனுக்கு.
வெளியில் சென்று வரும் குழந்தையாக இருந்தாலாவது, யாருடனும் சண்டையாக இருக்குமோ, இல்லை யாராவது தவறாக அவளிடம் நடந்து இருப்பார்களோ என்ற சந்தேகமெல்லாம் எழலாம்.
இங்கு தான் ஈத்தன் அவளுடனே அவளின் நிழல் போல இருக்கின்றானே.
எதையும் யூகிக்க கூட முடியாமல்...
உடலிற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில், அவளை விட்டு பிடிக்கலாம் என்று முடிவெடுத்த ஈத்தனால்…
இரண்டு நாட்களுக்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை.
அந்தளவிற்கு ஈஷாவின் சோர்ந்த தோற்றம், ஓய்வு வேண்டி வீட்டில் இருந்தவனை, நிம்மதியாக ஒரு நிமிடம் கூட இருக்க விடாமல் தடுக்க…
இன்றுடன் அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன்…
அன்று இரவு, அவன் கை வளைவில் தலை வைத்து படுத்திருந்த ஈஷாவின் முன்னெற்றி முடியை காதோரம் ஒதுக்கி சரிசெய்தப்படியே ஈத்தன்…
"ஏன் பேபி.. நான் உங்க க்ளோஸ் ஃபிரண்ட் தானே” என்று அவளிடம் கேட்டான்.
அதற்கு ஈஷா, “நீங்க மட்டும் தான் பேபி எனக்கு க்ளோஸ் ஃபிரண்ட்” என்றாள்… மேலும் அவனுடன் ஒட்டி படுத்தப்படியே…
அதில் மெல்லிய புன்னகை ஈத்தனின் இதழ்களின் ஓரம்.
ஈஷாவின் நெற்றியில் தன் இதழ்களை மென்மையாக பதித்து பிரித்தவன்…
“பேபி கொஞ்ச நாளா ரொம்ப டிஸ்டர்ப்டா(disturbed) தெரியறீங்களே டா”, என்றவன், இடையில் விட்ட சிறு இடைவெளியில். அதனை ஈஷா மறுத்து பேச வர…
“டாடி கிட்ட பொய் வேற பேசறீங்க பேபி. தப்பு பேபி. வேண்டாம்”, என்று கண்ணுக்கு தெரியாத சிறு கண்டிப்புடன் அவளை தடுத்த ஈத்தன்.
அதை தொடர்ந்து, “எதுவா இருந்தாலும் டாடிக்கிட்ட சொல்லுங்க பேபி... நான் கூட இருக்கும் போது என்ன கவலை உங்களுக்கு... நான் பார்த்துக்கறேன்…", என்று அவளுக்கு தைரியம் அளித்து கேட்க.
ஈஷாவின் முகம் சட்டென்று மொத்தமாக கூம்பி பொலிவிழந்து போனது.
உடன் ஈத்தன் அவள் கூறிய பொய்யினை வேறு கோடிட்டு காட்டிவிட்டதில், “சாரி பேபி. நான் உங்கக்கிட்ட பொய் பேசினதுக்கு” என்றவள். “Now I feel really bad” என்று உள்ளே சென்ற குரலில் கூற.
அவ்வளவு தான் ஈத்தன்.
“பேபி…”, என்றவாறு எழுந்தே அமர்ந்து விட்டான்.
“டாடி ஜஸ்ட் கேட்டேன் டா. அதுக்கு போயிட்டு என் லட்டு பேபி இப்படியெல்லாம் பேசலாமா…” என்றவன். அவளின் குற்ற உணர்ச்சியை போக்கும் விதமாக ஆறுதலாக பேச…
ஈஷா ஈத்தனின் மடியில் தலை வைத்து படுத்து… தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்…
அதில் அவள் முதுகில் சிறிது நேரம் தட்டிக்கொடுத்த ஈத்தன், “டாடி பேபியை எதுவும் கேட்க கூடாதா என்ன…?”, என்றவன், “ஒன்னும் இல்லை டா இங்க பாரு”, என்று ஈஷாவின் முகத்தை பற்றி தன் முகம் பார்க்க செய்ய…
விருப்பமே இல்லாமல் வேறுவழியின்றி அவன் முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்க…
சட்டென்று குறிஞ்சியின் முகம் அவன் கண் முன்பு வந்து சென்றது…
அன்று அவள் படிகளில் உருண்டு விழுந்தப்பிறகு… மருத்துவர் கொடுத்த மருந்துகளை போட சொல்லி, அவளை அவன் ‘எழுந்தே ஆக வேண்டும்’ என்று எழுப்பிய பொழுது, இப்படி தான் அவளும் அவனை பார்த்து வைத்தாள்.
இன்று அதேப்போல் இருந்தது ஈஷாவின் பார்வையும்.
நூலைப் போல தானே சேலை இருக்கும்.
இந்நாள் வரை இப்படியான ஒப்பீடுகள் எதுவும் ஈத்தனுக்குள் தோன்றியதில்லை…
திடீரென்று இன்று… அதுவும் இப்பொழுது போய் தோன்றவும்…
சட்டென்று தன் தலையை குலுக்கி அந்த எண்ணத்தை விரட்டியவன்…
ஈஷாவிடம் தன் கவனத்தை செலுத்தி, “இப்ப தானே பேபி என்னை உங்களோட க்ளோஸ் ஃபிரெண்ட்ன்னு சொன்னீங்க… பிறகு என்ன தயக்கம் உங்களுக்கு… அதுவும் டாடிக்கிட்ட போயிட்டு…” என்றவன்…
“என்ன ஆச்சுன்னு சொல்லு டா பேபி. நீ மறைக்க மறைக்க டாடிக்கு பயமா இருக்கு டா…”, என்று உண்மையாக பெற்றோருக்கு வரும் அச்சத்துடன் அவன் கேட்க.
ஈத்தனின் மடியில் வைத்திருந்த தன் தலையை விலக்கி… எழுந்தமர்ந்த ஈஷா…
“பேபி எனக்கு… எனக்கு…”, என்று திக்கி திணறி அவனிடம் கூற முயற்சித்தவள்…
இறுதிவரை தான் கூற வந்ததை அவனிடம் கூற முடியாமல்…
“சாரி பேபி… நாம எவ்ளோ க்ளோஸ் ஃபிரண்டா இருந்தாலும், இந்த விஷயத்தை என்னால் உங்கக்கிட்ட ஷேர் பண்ண முடியலை... I think I'm not comfortable with you", என்று லேசாக குரல் கமற கூற...
மொத்தமாக அதிர்ந்து போன ஈத்தன்…
“காட் பேபி... என்னடா ஆச்சு உனக்கு… உன் டாடி டா நான்…” என்று ஈஷாவை அப்படியே அணைத்து தன் நெஞ்சிற்குள் பூட்டிக்கொண்டான்.
🔴அடுத்த அத்தியாயம் செல்ல கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் 🪻
https://swathilakshmitamilnovels.blogspot.com/2025/05/322.html
கருத்துகள்
கருத்துரையிடுக