30.1 அந்திப்போர் 🪻😘📽️
🙆🔴 ஹாய் டார்லிங்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க? என் மேல செம கோபமா இருப்பீங்கன்னு தெரியது😥 சாரி டார்லிங்ஸ்... இந்த கதை ஆரம்பிச்ச நேரத்தில் இருந்தே எனக்கு புது புது வேலையா வந்துட்டு இருக்கு... எனக்கு கழுத்தில் சின்னதா ஒரு சர்ஜரி பண்ண சொல்லி இருக்காங்க. சின்னது தான். ஆனால் எமர்ஜென்சி. அதில் தான் இந்த மாசம் ஒரே அலைச்சல். இங்க இன்சூரன்ஸ் எதுவும் கிளைம் பண்ண முடியாததால்... இந்தியாக்கு வந்து தான் சர்ஜரி பண்ணிக்க போறேன்.. ஜூன் 11 to ஜூலை 9 வரை இந்தியா தான். அதுவும் ஆறு வருஷம் கழிச்சு இந்தியா வர போறேன். அம்மா அப்பா எல்லாரையும் பார்க்கனும்... அண்ணா குழந்தைக்கு 5 வயசாகுது... இப்ப தான் முதல் தடவை பார்க்க போறேன்... நிறைய பர்சனல் கமிட்மென்ட்ஸ் இருக்கு டார்லிங். பேக்கிங் எல்லாம் பண்ணனும்...
🔴 கண்டிப்பா கதை போடுவதை நிறுத்த மாட்டேன்... முடிஞ்சளவு ஊருக்கு போகுறதுக்கு முன்னாடி முடிச்சிட்டு போக பார்க்கிறேன்... அப்படி முடியலைனாலும் ஊரில் இருந்தும் நிச்சயம் கதை எழுதி போடுறேன்.
🔴கொஞ்சம் பதிவுகள் தாமதமா வந்தா பொறுத்துக்கோங்க டார்லிங்ஸ்(ஆனால் யூடி கேட்கிறதை நிறுத்தாதிங்க. எனக்கு நீங்க தான் கீ கொடுக்கனும்).
🔴எப்பவுமே பன்ச்வாலிட்டியா எல்லாத்துலையும் இருக்கனும் நினைப்பேன்... கடைசியில் 2025 என்னை வச்சி செய்யுது... திரும்ப திரும்ப காரணம் சொல்றதே எனக்கு அவ்வளவு சங்கடமா இருக்கு. சாரி டார்லிங்ஸ். உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சு.
🥰ஓகே வாங்க 7 பார்ட் கிட்ட போட்டு இருக்கேன். வாசிக்கலாம் 🎉❤️
நேரம் போவது தெரியாமல், இரவு முழுவதும், உடலில் உண்டான புதிய வேதியியல் மாற்றம் கொடுத்த குறுகுறுப்பில்…
பால்கனியில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தப்படியே விழித்து கிடந்த குறிஞ்சி…
காலை 6 மணிக்கு ஈத்தன் வந்து கதவை தட்டிய பிறகு தான், காணும் நீண்ட சொப்பனத்தில் இருந்து மீண்டு இருந்தாள்…
“அச்சோ விடிஞ்சே போயிடுச்சா…”, என்று வெளுக்க ஆரம்பித்த வானத்தை பார்த்து பதறியவள்…
ஈத்தன் மீண்டும் கதவை தட்டவும்…
இவ்வளவு நேரமும் செய்துக்கொண்டிருந்த செயலை நினைத்து… “ஐயோ எனக்கு ஏன் திடீர்னு இப்படியெல்லாம் தோனுது… சாருக்கு தெரிஞ்சா என்ன ஆகும்…”, என்று நினைத்து பயந்துப்போனவள்…
தன் வயிற்றை பற்றியப்படி எழுந்துச்சென்று கதவை திறந்தாள்…
“ஹேப்பி மார்னிங், குறிஞ்சி” என்ற ஈத்தன். அவளின் சிவந்த விழிகளை பார்த்து, “என்ன ஆச்சு கேர்ள்… நேத்து ட்ராவல் பண்ணதில் ரொம்ப டயர்ட் ஆகிட்டயா…” என்றப்படியே அவளை நெருங்கி… தன் கரத்தினை அவளின் நெற்றியில் பதிக்க…
குறிஞ்சிக்கு உடலெங்கும் மெல்லிய நடுக்கம் பரவியது…
அதிலும் பர்ஃபியூம் மணத்துடன் கலந்து வரும் அவனின் ஆண்வாசம்… சடுதியில் அவளின் நாசியை மொத்தமாக நிறைத்துவிட…
குளிரூட்டப்பட்ட வீட்டினுள்ளே வியர்த்து போனாள்…
ஈத்தன் பேசுவது எல்லாம் காதிற்குள் சென்றாலும்… மூளைக்குள் ஒன்றும் நுழையவில்லை…
தன்னை மீறி நன்றாக நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவளை, நொடியும் தாமதிக்காமல் அந்த புத்துணர்ச்சி நிரம்பிய அவனின் நீலக்கண்கள் மொத்தமாக சிறையெடுத்துக் கொண்டிருந்தன…
அதில் உன்மத்தம்(மையல்) கொண்டவள்… அப்படியே தன் கண்களை மூடிக்கொண்டுவிட…
“காட்… நின்னுட்டே தூங்கறியா கேர்ள் நீ… வா பெட்ல படுத்தே தூங்கு…” என்ற ஈத்தன்… அப்படியே அவளை அழைத்துச்சென்று படுக்கையில் படுக்க வைத்தவன்… எதற்கும் இருக்கட்டும் என்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவளின் உடல் வெப்பநிலையை சரி பார்த்தான்… அடுத்து நாடி துடிப்பையும் சரி பார்த்தான்…
பாவம்! எக்கருவியும் அவளின் காதல் நோயின் அறிகுறிகளை அவனுக்கு காட்டிக்கொடுக்கவில்லை…
அதில், அங்கிருந்த நீண்ட பிரக்னென்சி பில்லோவை எடுத்து அவள் அருகில் அணைவாக வைத்து… போர்வையை விரித்து போர்த்திவிட்ட ஈத்தன்… “நான் ஜிம் முடிச்சிட்டு வந்து எழுப்பறேன்… இன்னைக்கு நீ வர வேண்டாம்… அதுவரை ரெஸ்ட் எடு கேர்ள்…”, என்றுவிட்டு அவன் சென்றுவிட…
படப்படக்கும் தன் இதயத்தின் மேல் கரத்தினை வைத்து அழுத்திப்பிடித்துக்கொண்டிருந்த குறிஞ்சிக்கு… ஈத்தனின் நெருக்கம் ஏற்படுத்திவிட்டிருந்த உணர்வலைகளின் தாக்கம், அவன் சென்று பல நிமிடங்கள் ஆன பிறகு தான் மெல்ல குறைய தொடங்கியது…
அதில் சற்று புத்தி தெளியவும்…
நிதர்சனம் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது…
‘ஐயோ பாவமென்று குந்த இடத்தை கொடுத்தால், மொத்த மடத்தையே பிடுங்க பார்ப்பானாம்’ என்ற பழமொழி கண்முன் வந்துச்சென்றது…
‘வெள்ளி தட்டில் உணவு உண்ணும் அவன் எங்கே… அலுமினியம் தட்டை வைக்க கூட ஒரு அடி இடம் இல்லாத தான் எங்கே…’ என்னனென்னவோ எண்ணங்கள் அவளை சூழ்ந்துக்கொள்ள…
மொத்தமாக துவண்டு போனாள்…
அதுமட்டுமா…
அவனுக்கு சரிசமமாக அவள் வந்தாள் கூட, அவன் அவளை ஏறெடுத்துப் பார்ப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு சிறிதும் இல்லை… பல மாதங்களாக அவனுடன் தங்கியிருப்பவளுக்கு அவனை குறித்து தெரியாதா…?
அதில், நேற்றைய முதல் கட்ட மயக்கங்கள் அனைத்தும் தீர்ந்து…
தன்னுடைய நிலையையும்… தன் மீதான ஈத்தனின் நிலையையும் சரியாக உணர்ந்துக்கொண்டிருந்த குறிஞ்சி… என்றுமே நிறைவேறாத ஆசை ஏன் தனக்கு வந்தது என்று நொந்து…
‘இனி அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது’ என்று தன் மனதிற்கு கடிவாளம் போடப்பார்க்க…
இன்னும் வேகமாக அவளுள் நிறைந்தான் ஈத்தன்…
அருகில் அவன் இல்லாமலேயே, அவளின் நாசி அவனின் சுகந்தத்தை நுகர்ந்தது… அவளின் மேனி அவனின் தொடுகையை உள்வாங்கியது… செவிகள் அவனின் குரலை எதிரொலித்தன… கண்கள் மூடிய நிலையிலும், அவனை மட்டுமே பார்த்தன…
அதில், ‘ஐயோ…’, என்றவளுக்கு, எப்படி இந்த புது உணர்விலிருந்து வெளிவருவது என்று சுத்தமாக தெரியவில்லை…
ஈத்தன் கண்டுப்பிடித்துவிடுவானோ என்று அவ்வளவு பயமாக இருந்தது… கண்டுப்பிடித்துவிட்டால் எவ்வளவு கீழாக வேறு தன்னை எண்ணுவான்…
எதையும் அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை…
அதில், நீண்ட மாதங்களுக்கு பிறகு அவளின் கன்னங்கள் இரண்டும், சுடு நீரில் நனைய ஆரம்பித்தன…
இயலாமையின் ஒரே வடிகால் அதுதானே…
நிமிடங்கள் பல கடந்தும் அழுதப்படியே அவள் படுக்கையில் படுத்துக்கிடக்க…
தாயின் துயரை தன்னில் உணர்ந்த குழந்தை… திக்கு தெரியாத அந்த குடுவைக்குள்… அங்கும் இங்கும் வேகமாக சுழல ஆரம்பித்துவிட்டது…
அதில் “ஸ்…” என்று முனங்கிய குறிஞ்சி…
திடீரென்று தோன்றிய வலியில், “அம்மா…” என்றப்படியே இருக்கைகளாலும் வயிற்றை அழுந்த பற்றிக்கொள்ள…
உள்ளிருக்கும் குழந்தையோ ஓடிவந்து அவளின் இருக்கைகளுக்குள் சமத்தாக அடங்கி இருந்தது.
அதை உணர்ந்த குறிஞ்சியின் மேனி மொத்தமும் அப்படி ஒரு சிலிர்ப்பு… பூரிப்பு…
அழுகையை அப்படியே நிறுத்திவிட்டு இருந்தாள்…
“என் தங்கக்கட்டி…” என்றவளின் கரங்கள்…
“ஒன்னுமில்லை செல்லம்… ஒன்னுமில்லை செல்லம்…”, என்று குழந்தையை அப்படியே மெல்ல வருடி வருடி விட்டு ஆசுவாசப்படுத்தின…
மனதினுள், “கடவுளே… நான் எவ்ளோ பெரிய தப்பு பண்றேன்… அதுவும் வயித்துல குழந்தையை வச்சிட்டு… நான் சந்தோஷமா இருக்கனும்னு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யும் சாருக்கு நான் அழறது தெரிஞ்சா என்ன ஆகும்… அதும் என்னோட கவலை நிச்சயம் குழந்தையோட வளர்ச்சியை பாதிக்குமே…”, என்று தோன்ற… தன் கழுத்தை சுற்றி கிடந்த துப்பட்டாவை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டவள்… நீரினை எடுத்து பருகி துக்கத்தில் அடைத்துவிட்ட தன் தொண்டையை சரிசெய்தாள்…
உடன், “இனி என்ன ஆனாலும் அழவே கூடாது…”, என்ற முடிவையும் அவள் எடுத்து முடிக்க…
அதனை உருக்குலைக்கவே…
“மே ஐ கம் இன், கேர்ள்…?” என்று ஈத்தன், தாழிடாத கதவின் அருகில் நின்று கேட்டு இருந்தான்…
குறிஞ்சிக்கு மீண்டும் இதயம் படபடக்க ஆரம்பித்து விட்டது… இருந்தும் முதலில் இருந்த அளவிற்கு இல்லை… சிறிது கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்தது…
அதில், முகத்தை மீண்டும் ஒருமுறை துடைத்துக்கொண்டவள்…
“வாங்க சார்…” என்று அவனை உள்ளே அழைக்க…
வெளியே செல்வதற்கு ஏதுவாக ஃபார்மல் உடையில் தயாராகியிருந்த ஈத்தன், அவளுக்கான காலை பானத்துடன்… காலை உணவையும் சேர்த்து எடுத்து வந்து இருந்தான்…
“எதுக்கு சார் நீங்க…” என்று குறிஞ்சி ஆரம்பிக்கவும்…
“ஷ்… முதலில் இதை குடிச்சிட்டு… பிறகு பேசு கேர்ள்… ரொம்ப டல்லா இருக்க” என்றவன்… அவளுக்காக கொண்டுவந்திருந்த இளநீரில் ஸ்ட்ராவை போட்டு… குடிப்பதற்கு ஏதுவாக அவளின் வாயருகே பிடிக்க…
ஈத்தனின் முகத்தை தான் அவளின் கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தன…
அவள் மீதான அன்பும், கனிவும் அதில் நிறைய தென்பட்டது…
ஆனால் ஆசையும், ஈர்ப்பும் தான் எள்ளளவும் தென்படவில்லை…
அதில் சட்டென்று அவளின் காதல் கொண்ட நெஞ்சம் அடிவாங்கிக்கொள்ள…
கண்கள் இரண்டும் மீண்டும் கலங்குவது போல் இருந்தது…
அதை மறைக்க உடனே இமையை தாழ்த்திக்கொண்டவள்…
ஈத்தன் கரத்தினில் இருந்த இளநீரை வேக வேகமாக பருக ஆரம்பித்தாள்…
அது முடிய, ஈத்தன் அடுத்து காலை உணவு அடங்கிய ட்ரேயினை அவளுக்கு தரப்பார்க்க…
“குளிச்சிட்டு சாப்பிடறேன் சார். இன்னும் பல்லு கூட விளக்கல…”, என்று குறிஞ்சி மறுக்க…
“இருக்கட்டும் கேர்ள்… சாப்பிட்டு ரெஸ்ட் எடு… மதியம் குளிச்சுக்கலாம்… இன்னுமே உனக்கு தூக்கம் களையல பாரு… கண்ணெல்லாம் அவ்ளோ ரெட்டிஷா இருக்கு…” என்றவன் என்ன நினைத்தானோ… அவள் அருகிலேயே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து…
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு குறிஞ்சி… டென் மினிட்ஸ்ல கிளம்பறேன்… ராகவ் வந்தாச்சு…”, என்றவன்…
“முடிஞ்சளவு சீக்கிரம் வர பார்க்கிறேன்… சரியா…”, என்றப்படியே…
இட்லியை கத்தியால் சிறு துண்டாக வெட்டி, முட்கரண்டியில்(fork) எடுத்து, அவளுக்கு பிடித்த தக்காளி சட்னி மற்றும் சாம்பாரில், அவள் செய்வது போலவே போட்டு நன்கு முக்கி எடுத்து, “சாப்பிடு கேர்ள்” என்று சிறு பிள்ளைக்கு தருவது போல், அவள் கையில் முட் கரண்டியை தர…
அவ்வளவு தான்… குறிஞ்சியின் கட்டுப்பாடுகள் அனைத்தும்… கரையை உடைத்துக்கொண்டு எல்லையை மீறியிருந்தன…
அதில் அவள் திடீரென்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட… ஈத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை…
“ஹேய் என்னமா… என்ன ஆச்சு… எங்கேயும் வலிக்குதா…”, என்று பதறியவனுக்கு பாவம் அவளின் மனதினை படிக்க தெரியவில்லை…
ஆனால் அவனின் மனதை படிக்க தெரிந்தவளோ, “வலி எதுவும் இல்லை… பயப்படாதிங்க…” என்றாள் அந்நிலையிலும் அழுதப்படியே…
அதில், “வேற என்னடா… எதுவும் வேண்டும்மா… எதுவா இருந்தாலும் கேளு… ப்ளீஸ் அழாத… நான் செய்து தரேன்…” என்று அவளின் கண்களை துடைத்து சமாதானம் செய்த ஈத்தன்…
“உன் ஃபியான்சே ஞாபகம் எதுவும் வந்துடுச்சா… கால் பண்ணி தரவா… பேசுறயா கேர்ள்…” என்று திடீரென்று கேட்க…
ஸ்விட்சை நிறுத்தியது போல் பட்டென்று தன் அழுகையை அவள் நிறுத்திவிட்டு இருந்தாள்…
அதில், “அதுக்கு தான் நீ அழறியா கேர்ள்…” என்ற ஈத்தன், “சாரி மா… உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்தறேன்…” என்று வருத்தத்தில் முகம் கசங்கிப்போனான்…
தன்னுடைய லாபத்திற்காக அவளை அவளின் உறவுகளிடம் இருந்து பிரித்து வைத்தது அப்படி சுட்டது அவனை…
குறிஞ்சியோ, ‘ஐயோ நாம் ஒன்று நினைத்தால்… அது வேறு ஒரு பாதையில் போகின்றதே…’ என்று நொந்துப்போனாள்.
அதற்குள் ஈத்தன் வேறு, அவளுக்கென்று வாங்கி வைத்திருந்த மொபைலை எடுத்துவந்து, அவளுடைய கையில் பேச தந்துவிட…
“அச்சோ சார்… வேண்டாம்… நேத்துல இருந்து அம்மா ஞாபகமாவே இருந்துச்சு… நீங்க சாப்பாடுலாம் எடுத்துவந்து தரவும் அது அதிகமாகிடுச்சு…” என்றாள் அவசரமாக…
சும்மா கூட வேறு ஒரு ஆணின் எண்ணம் தனக்கு இருப்பதான பேச்சை… அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
அதிலும் ஈத்தனே கூறுவதை…
அவசரத்திற்கு சொன்ன பொய்… இப்பொழுது அருவருப்பாக இருந்தது…
“அப்ப அம்மாக்கூட பேசறியா குறிஞ்சி… நான் நர்ஸ்கிட்ட சொல்லி அரேன்ஜ் பண்ணவா…” என்று ஈத்தன் கேட்க.
“இல்லை சார்… எப்பவும் போல சாயங்காலமே பேசிக்கறேன்… இப்ப திடீர்னு பேசுனா அம்மா நான் அழுததை கண்டுப்பிடிச்சுடுவாங்க… வேண்டாம்…” என்றாள்.
ஈத்தனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“சரி கேர்ள் சாப்பிடு…” என்றவன்… திரும்பவும் தட்டை எடுத்து, அவளுக்கு ஒரு ஒரு வாயாக எடுத்து தர…
தானும் கஷ்டப்பட்டு… ஈத்தனையும் கஷ்டப்படுத்துவதை உணர்ந்துக்கொண்ட குறிஞ்சி… அமைதியாக சாப்பிட்டு முடிக்க…
“சீக்கிரம் வந்துடறேன்…” என்று அவளிடம் கூறிவிட்டு கிளம்பியிருந்த ஈத்தன்…
அன்று இரவு பத்து மணிக்கு, குறிஞ்சி சற்றும் எதிர்பாராத விதமாக… அவளை அவளின் அன்னை இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று… அவரை பார்க்க வைத்து இருந்தான்…
இவர்கள் சென்ற பொழுது, நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் சாந்தினி…
எட்டு மாதங்களுக்கு பிறகு அவரை பார்க்கின்றாள்…
உடல் அளவில் நல்ல முன்னேற்றம்… தோற்றத்தை பார்க்கும் போதே தெரிந்தது…
அதில் அவளின் இதழ்கள் சந்தோஷத்தில் விரிந்துக்கொள்ள…
சத்தம் வராமல் “அம்மா…” என்றழைத்தவளுக்கு…
அப்படியே அவரை கட்டிக்கொள்ள கைகள் பரபரத்தன…
ஆனால் முடியாதே…
கட்டுப்படுத்திக்கொண்டவள்…
அமைதியாக நின்று… அன்னையின் அண்மையை உள்வாங்கிக்கொண்டிருக்க…
அவள் அருகே நின்றிருந்த ஈத்தனோ, அவளுடைய முகத்தை தான், வெளியில் சொல்ல முடியாத உணர்வுகளை, தன் கண்களுக்குள் தேக்கி வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தான்…
அது தன் தாயை தொலைத்த பன்னிரண்டு வயது சிறுவனின் பல்லாயிரக்கணக்கான ஏக்கங்களை சுமந்த பார்வை…
குறிஞ்சி திரும்பவும்…
சட்டென்று தன் தலையை குலுக்கி… தன்னை சரிசெய்துக்கொண்டான் ஈத்தன்…
குறிஞ்சி, “போகலாம் சார்…” என்று வெளிப்பக்கம் கைக்காட்ட…
அவளுடன் கிளம்பிவிட்டான்.
தன் தாயை பிரிந்த வலியை, பன்னிரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் பச்சை ரணம் மாறாமல் சுமப்பவனால்…
குறிஞ்சி ‘அம்மா ஞாபகம்’ என்று அழுததை காலையில் இருந்தே தாங்கிக்கொள்ளவே முடியவில்லை…
தாய் சேயை பிரிக்கும் பாவத்தை செய்ய முடியாமல் அழைத்து வந்து காட்டிவிட்டு இருந்தான்…
ஆனால் அன்று அவனுக்கு தெரியவில்லை… அதே பாவத்தை தன் குழந்தைக்கு தானே செய்ய போவதை…
அதேப்போல் குறிஞ்சி சாந்தினியின் மகள் மட்டும் இல்லை… தன் குழந்தையின் தாய் என்பதையும் தான்…
________________________________
அடுத்த அத்தியாயம் லிங்க் கீழே
கருத்துகள்
கருத்துரையிடுக