30.2 அந்திப்போர் 🪻😘
அன்று இரவு, வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த குறிஞ்சிக்கு…
காலையில் அவள் சொன்னது பொய் என்று கூட தெரியாமல்… அவள் கூறுவதை அப்படியே நம்பி… ஈத்தன் அழைத்துச்சென்று சாந்தினியை பார்க்க வைத்ததில்…
அவ்வளவு குற்ற உணர்வு…
அவனின் நம்பிக்கையை ஆரம்பம் முதலே தவறாக அல்லவா பயன்படுத்திக்கொண்டு வருகின்றாள்..
அதில், இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் ஈத்தனிடம் எந்த பொய்யும் கூற கூடாது… அவனுக்கு தொந்தரவும் எதுவும் தரக்கூடாது…
சொன்னதுப்போல் குழந்தையை பெற்று அவன் கையில் தந்துவிட்டு கிளம்பிவிட வேண்டும்…
ஏற்கனவே முடிவு செய்தது போல், அம்மாவுடன் எங்காவது புது ஊருக்கு சென்று, மீதி வாழ்க்கையை வாழ்ந்துக்கொள்ளலாம்… என்று முடிவெடுத்துக்கொண்டவள்…
ஒருமாதிரி மனதை திடப்படுத்திக்கொண்டு…
அவனுடனான பொழுதுகளை அனுபவித்து… தன்னுடைய மீதி வாழ்க்கைக்காக அதனையெல்லாம் நினைவில் சேமித்துக்கொள்ள ஆரம்பித்து இருந்தாள்…
ஏமாற்றங்களும்… நிராசைகளும்… ஏக்கங்களும்… ஒன்றும் புதிதில்லையே அவளுக்கு…
ஏற்கனவே பக்குவப்பட்டவள்… மேலும் பக்குவமாகி போனாள்…
________________________________
கடந்த ஒருவாரமாகவே குறிஞ்சிக்கு ஈத்தனை பார்ப்பதே பெரும் பாடாக இருந்தது…
இதுநாள் வரையிலுமே வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல், வேலை விஷயமாக அவன் வெளியில் சென்றது கிடையாது…
ஆனால் கடந்த ஒரு வாரமாகவே… தினமும் வேலை வேலை என்று அவ்வளவு பிசியாக இருந்தான்…
காலை அவளை உடனிருந்து யோகா மற்றும் உடற்பயிற்சியை செய்ய வைப்பவன்… அவளுடனே பிரேக் ஃபாஸ்ட்டை முடித்துக்கொண்டு கிளம்பி விடுவான்…
அத்துடன் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவான்…
ஈத்தனின் வற்புறுத்தலின் பேரில், குறிஞ்சி எப்பொழுதும் போல் ஏழு மணிக்கெல்லாம் தன்னுடைய இரவு உணவை முடித்துக்கொண்டாலும்… ஈத்தன் வந்த பிறகு தான் உறங்க செல்வாள்…
இரவு உணவை உண்டப்படியே அவளுடன் சிறிதுநேரம் பேசுவான் ஈத்தன்…
அவளும், அவன் கலந்து தரும் லெமன் ஹனி டீயினை குடித்துக்கொண்டே அவனுடன் பேசுவாள்…
அதன் பிறகு தான் அவளின் அந்த நாளே முழுமையடையும்…
அன்றும் அவனுக்காக அவள் காத்துக்கொண்டிருக்க…
ராகவ்வின் ஃபோனிற்கு அழைத்து, குறிஞ்சியிடம் ஃபோனை கொடுக்க சொன்ன ஈத்தன்…
“டின்னர் சாப்பிட்டயா கேர்ள்” என்று கேட்டவன்… “உடம்பு எப்படி இருக்கு… எல்லாம் ஓகே தானே…” என்று விசாரித்தான்…
“ஒன்னும் பிரச்சினை இல்லைங்க சார்… நான் நல்லா இருக்கேன்…” என்றவள் மணியை பார்க்க…
இரவு 9.30…
“மணியாகுதே சார்… நீங்க வீட்டுக்கு இன்னும் வரலையே…” என்றாள்.
“அதுக்கு தான் கால் செய்தேன் கேர்ள். இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆகும்… நீ போயிட்டு தூங்கு… நாம மார்னிங் பார்க்கலாம்… சரியா?” என்றுக்கேட்க…
குறிஞ்சியின் முகம் சுத்தமாக கூம்பிப்போனது…
இருந்தும் என்ன செய்வது…
“சரிங்க சார்…” என்றவள்… “உங்களுக்கு டின்னர்…” என்று இழுக்க…
“நான் வந்து சாப்பிட்டுக்கறேன் கேர்ள்… தேங்க்ஸ் ஃபார் ஆஸ்கிங்” என்றவன், “குட் நைட் குறிஞ்சி” என்றுவிட்டு, உடனே அலைப்பேசியை வைத்துவிட…
அவனுக்கு வேலை பிசி என்று நினைத்த குறிஞ்சி, எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்…
ஆனால் உறங்க தான் இல்லை…
தன் எட்டு மாத வயிற்றை தடவியபடியே…
ஈத்தனின் கார் சத்தத்திற்காக ஜன்னல் அருகேயே காத்துக்கொண்டு இருந்தாள்…
ஈத்தன் சொன்னது போல் அவன் வீடு வந்து சேர… அவ்வளவு தாமதம் ஒன்றும் ஆகவில்லை…
பத்து மணிக்கு எல்லாம் வந்துவிட்டு இருந்தான்…
அறைக்குள் எரியும் விளக்குகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருந்த குறிஞ்சி… திரை சீலை மறைவில் நின்று வெளியே பார்த்துக்கொண்டிருக்க…
ஈத்தன் ராகவ்வை வழியனுப்புவது தெரிந்தது…
அதைத்தொடர்ந்து செக்கியூரிட்டியிடம் நின்று ஓரிரு நிமிடங்கள் பேசியவன்… வீட்டினுள் நுழைந்து இருந்தான்…
குறிஞ்சிக்கு உடனே கதவை திறந்துக்கொண்டு சென்று அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது…
ஆனால் உடனே சென்றால் நன்றாக இருக்காது என்று முடிவெடுத்தவள், முதலில் அவன் குளித்து முடித்து உணவு மேஜைக்கு வரட்டும்… பிறகு செல்லலாம் என்று காத்துக் கொண்டிருந்தாள்…
அதன்படியே, அரைமணி நேரத்திற்கு பிறகு மெதுவாக கதவைத் திறந்துக்கொண்டு வெளியே செல்ல…
ஈத்தனை காணவில்லை…
அவனுடைய அறையை திரும்பி பார்த்தாள்…
மூடி இருந்தது…
‘ஐயோ அதற்குள் டின்னர் முடித்துக்கொண்டு சென்றுவிட்டாரா’ என்று நினைத்தவள்…
சந்தேகத்துடன் சென்று உணவு மேஜையில் இருக்கும் ஹாட் பாக்ஸை திறந்து பார்த்தாள்…
உணவு அனைத்தும் தொடப்படாமல் அப்படியே இருக்க…
‘ஹப்பாடா’ என்று பெருமூச்சு விட்டவள்…
ஒரு கப்பில் சுடு நீரை ஊற்றி எடுத்துக்கொண்டு சென்று சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்…
‘இதோ ஈத்தன் குளித்துவிட்டு வந்துவிடுவான்…’ என்று அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்த குறிஞ்சி… நேரம் சென்றுக்கொண்டே இருந்ததில்…
ஒருகட்டத்தில் தன்னை மீறி அமர்ந்தவாக்கிலேயே சோஃபாவில் சாய்ந்து நன்கு உறங்க ஆரம்பித்துவிட்டு இருந்தாள்…
திடீரென்று அந்த அமைதியான வீட்டின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு… தொடர்ந்து கால் வரும் ரிங் டோன் சத்தமும்… மெஸேஜ்களின் சத்தமும் நிறைக்க…
திடுக்கிட்டு கண்களை திறந்த குறிஞ்சிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை…
சுற்றி முற்றி பார்த்தவள்…
மணியை பார்க்க…
மணி நள்ளிரவு 12…
‘அச்சோ இவ்ளோ நேரமும் இங்கேயேவா தூங்கிட்டேன்… சார் எங்க… என்னை கவனிக்கலையோ…’ என்று எண்ணியவள்…
விடாமல் சத்தம் போடும் ஃபோன் எங்கே என்று கண்களாலேயே தேடி பார்க்க…
அங்கேயே தான் மற்றொரு சோஃபாவில் இருந்தது…
சென்று எடுத்து பார்த்தாள்…
அதிலோ, “ஹேப்பி 24த் பர்த்டே ஈத்தன்” என்று மெஸேஜ்கள் பல வந்த வண்ணமே இருக்க…
அழைப்புகளும் சில விட்டுவிட்டு வந்துக்கொண்டு இருந்தது…
அதில் “அச்சோ… சாரோட பர்த்டேவா இன்னைக்கு…” என்று மகிழ்ச்சியாக புன்னகைத்த குறிஞ்சிக்கு…
“இந்த பர்த்டேக்கு நான் தான் அவருக்கு முதல் விஷ் சொல்ல போறேன் போல…” என்ற எண்ணமும் வந்து சேர்ந்துக்கொள்ள…
ஆர்வமாக ஈத்தனின் அறை வாயிலில் சென்று நின்றவள்…
“சார்… சார்…” என்று அழைத்தாள்…
பதிலில்லை…
அதில், “தூங்கிட்டார் போலயே…” என்று அவள் நினைக்கும் பொழுதே…
அடுத்த அழைப்பு ஈத்தனுக்கு வந்தது…
அதில், குறிஞ்சி கதவை தட்ட முடிவெடுத்து ஒரு தட்டு தட்ட… கதவு பட்டென்று முழுதாக திறந்துக்கொண்டது…
அதில், “ஹையோ நான் திறக்கலை…” என்று பயந்து ஒரு அடி பின் வைத்தவள்…
ஈத்தனின் அறையை பார்க்க…
அறை முழுவதும் இருட்டாக இருப்பது தெரிந்தது…
“சார் ரூம்ல இல்லையா அப்ப… வீட்டுக்கு வந்தாரே… நான் பார்த்தானே…”, என்று நினைத்தவளுக்கு…
தூக்கக்கலக்கத்தில் நடப்பது எதுவும் கனவா… சந்தேகம் வர…
சென்று மீண்டும் உணவு பாத்திரங்களை திறந்து பார்த்தாள்…
உணவு இன்னும் அப்படியே தான் இருந்தது…
அதில், முடிந்தளவு வேகமாக நடந்து சென்று… வாசல் கதவை திறந்தாள்…
வெளியே இருந்த செக்யூரிட்டி ஓடிவந்து அவளிடம் என்னவென்று கேட்க…
‘ஈத்தன் எங்கே’ என்று விசாரித்தாள்…
அதற்கு, செக்யூரிட்டி ஆங்கிலத்தில் கூறிய பதில்கள் வேறு, அவசரத்திற்கு அவளுக்கு ஒன்றும் புரியவில்லை…
அதைப்புரிந்துக்கொண்ட செக்யூரிட்டி…
“Sir is inside the house only” என்று அவரின் ஃபோனில் டைப் செய்து காட்ட…
குறிஞ்சி ‘உள்ளே இல்லை’ என்று கூற… ‘மாடியில் இருக்கலாம்’ என்றார் அவர்…
அதில், அவருக்கு நன்றிக்கூறிவிட்டு உள்ளே வந்தவள்…
மூன்றாவது மாடியில் இருக்கும் ஈத்தனை காண படியேற ஆரம்பித்தாள்…
அதுவும், கடந்த பன்னிரண்டு வருடங்களாக… அவன் கேட்கவே கூடாது என்று ஓடி ஒளியும்… அவன் விரும்பாத வார்த்தைகளை… தன் எட்டு மாத வயிற்றுடன் சேர்த்து தூக்கிக்கொண்டு ஏறினாள்…
அடுத்த அத்தியாயம் லிங்க் கீழே
கருத்துகள்
கருத்துரையிடுக